* காதல் பேரானந்தம் *

கூந்தல் காட்டில்
அலைந்து திரிந்து;
அந்த வகிடு
ஒற்றைப் பாதையில்
ஒற்றையாய் உலாத்தி இருந்து;
உன் உச்சித் தொட்டு
எட்டிப் பார்க்கையில்
நெற்றிவெளியில்
விழுந்து தெறித்து;
கண் பள்ளத்தில்
விழுந்து தொலைந்துப் போன
அந்த கணம்!
ஆகா!பேரானந்தம்!!

- ப்ரியன்.

இரயில்

என் கையசைப்பு
உணர்ச்சியில்லாமல்
ஓடிக்கொண்டிருக்கும்
அந்த மனிதர்களுக்கானதல்ல;
என்னைக் கடக்கும்போதெல்லாம்
மறக்காமல்
உற்சாகமாய் கூவிச் செல்லும்
அந்த இரயிலுக்கானது!

- ப்ரியன்.

நிலவைப் பிரசவித்தவள்

உன் தாயை சந்திக்கையில்
கேட்கவென பிரபஞ்சம் பற்றிய
ஒராயிரம் சந்தேகங்களைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்!
பின்னே,
நிலவைப் பிரசவித்தவளிடம்தானே
கேட்க வேண்டும்
பிரபஞ்ச இரகசியங்களை!

- ப்ரியன்.

நடு நிசி நாய்கள்

இரவில் அப்படி இப்படி
திரும்பி புரண்டுப்
படுக்கையில் தூக்கம்
கலைந்து போகும்
சில நாட்கள்!

பக்கத்து வீட்டு
மரம் அசைதலில்
பேய் கண்டுபிடித்து
மனம் கிலி கொள்ளும்
சில நேரம்!

மாலையெல்லாம்
அமைதியாய்
கம்பம் தேடிய
நாய்கள் குரைத்துத் தொலைக்கும்;
அவ்வப்போது
குலை நடுங்க வைக்கும்!

சின்னதொரு வயதில்
இருட்டியப் பின் கடைக்கு
செல்லும் நாட்களில்
தூரத்தில் வரும் அப்பனை
அடையாளம் காணாமல்
பேய் வருதென பயந்து
பதுங்கியதும்;
டவுசரைப் பிடித்தப் படி
துணைக்கு சத்தமாய்
பாட்டை நடுங்கியபடி
கத்திச் சென்ற
நினைவுகளும்;
மனதில் நின்று ஊஞ்சலாடி
மெல்லியதாய் புன்னகை
பூக்கச் செய்யும்!

அது தொடர்ந்து
என்னைப் போல
எதைக் கண்டு
பயந்து கத்துகின்றனவோ
இந்நடு நிசி நாய்கள்! - என
எண்ணும் கணம்
இன்னும் பயங்கரமாக கத்தி
பயமுறுத்தி தொலையும்!

ஆனாலும்,
எந்த நாயும்
சொல்லியதில்லை என்னிடம்
இரவில் கத்தும் ரகசியத்தை;
ஏனோ நானும்
இதுநாள் வரை கேட்டதில்லை
அதுகளிடம் அவ்ரகசியத்தை!

- ப்ரியன்.

கடிதம் கை சேரும் கணம்

ஊனமான நெஞ்சம் மெல்ல
தத்தித் தத்தி
தாவும்!

இயலாமையில் தீக்கிரையாக்கிய
என் கவிதைகள்
கொஞ்சம் சிறகு
முளைத்துப் பறக்கும்!

அறுப்பட்ட வீணை மனதில்
மெல்லிய கீதம்
இசைக்கப் படும்!

எரித்துத் தொலைக்கும்
என் வீட்டு நிலவு
குளிர் பரப்பும்!

என் காதல் வால்
முளைத்துத்
தாவித் திரியும்!

இத்தனையும் நடக்கும்!
ஊடல் உருகி
கூடலாகும் போது
அனுப்புவாயே
ஒரு கடிதம்!
அது வந்துச் சேரும் கணம்!

- ப்ரியன்.