நீயோ இசையாக வழிகிறாய்!

அதிசயமான நதி நீ;
கலந்துவிட்ட பின்னும்
என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
காட்டாற்றின் வெள்ளமாக!

*

ஒளியால் தொட்டுத் தழுவிச்செல்லும்
வான் நிலவு!
விழியால் தொட்டுச் சீண்டிச்செல்லும்
மண்நிலவு நீ!

*

எந்த செடியில்
மலர்ந்த பூ
நீ!

*

உன்னால் கிழிக்கப்படுகின்றன
என் காயங்கள்
வாசிக்கப்படுகின்றன அவையே
கவிதைகளாய்!

*

உன் கண் இடறி
காதல் கடலில் விழுந்துவிட்ட
குருடன் நான்!

*

ஒடிந்து கிடந்த
புல்லாங்குழலெடுத்து
மகுடி ஊதினேன்!
நீயோ
இசையாக வழிகிறாய்!


- ப்ரியன்.

நன்கு சாற்றி தாளிடப்பட்ட கதவின் பின்னால்

நன்கு சாற்றி தாளிடப்பட்ட
கதவின் பின்னால்,
தூக்கமும்
கவிதையும் இல்லா
பின்னிரவு கழிகிறது
அறுந்து விழும் வேகத்தோடு சுழலும்
மின்விசிறியின் சப்தத்தினோடு!

- ப்ரியன்