நிலவு நண்பனுக்கு ஒரு வாழ்த்துக் கவி!

'வால்'நட்சத்திரத்தை வாழ்த்தும் மின்மினி

நிலவிலிருந்து கைப்பிடி
மண் கொண்டுவந்தமைக்கே
கும்மாளமிடுவோர் மத்தியில்!
அமைதியாய் ஒரு நிலவையே
தன் சொந்தமாக்கி குடிப் புகுகின்றான்
இவன் இன்று!
*
இதுநாள்காறும்
பூமியாய் நின்று
நிலவை ரசித்திருந்தவன்;
நாளைமுதல் நிலவின் கைப்பிடித்து
இராட்டிணம் சுற்றப் போகிறான்
திருமண வானில்!
*
தமிழன்னையின் கழுத்தில்
கைக்கட்டி கவிபடித்த
பிள்ளையின்
கழுத்தோடு கைகள் பூட்டி
காதல் மொழி
பேசக்காத்திருக்கிறாள் தோழி!
*
அதனாலேயே
இனி
ஞானியின் கவி கூடும்
எனக் காத்திருக்கிறோம்
ரசிகவின் ரசிகர்கள்
நாங்கள்!
*
அன்புடனின்
'வால்'நட்சத்திரத்தை
வாழ்த்தும் பெரும் அன்பு
நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில்
வாழ்த்தி நிற்கிறேன் - நானும்
ஓர் சின்ன மின்மினியாய்!
*
என்றென்றும் முழு நிலவாக
'ஜஹான்' ஒளி வலம் வரட்டும்
ஞானியின் வாழ்வில்!
நிலவொளி மழையில்
நனைந்து நனைந்து
இன்னும் ஞானம் கூடட்டும் 'ஞானி'க்கு!
*
அன்புடன்,
ப்ரியன்.

கலியாணத்துக்கு போறேனுங்கோ...

நிலவு நண்பனின் நீ எனக்கு வேண்டாமடி கவிதையை நான் முதல் முதலில் வாசித்தது வாரமலரில் என்று நியூரான்கள் சொல்கின்றன.அப்போதுதான் நான் கவிதைகள் வாசிக்கவும் கொஞ்சம் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தேன்.வாசித்ததும் எனக்கு மனதில் தோன்றியது 'அட!'.அதற்கப்புறம்,எழுதியவர் பெயர் மறந்துவிட்டாலும் மனதுக்குள் நாற்காலிப் போட்டு அமர்ந்துவிட்டது அக்கவிதை.

நல்லதொரு பணியில் அமர்ந்தப் பிறகுதான் கவிதைகள் என்ற தவம் உடைந்த தினங்களில்,அடிக்கடி நண்பர்கள் வாயிலாக மின்னஞ்சல் தட்டி நிற்கும் எழுதியவர் பெயரில்லாமல் நிலவு நண்பன் ஞானியின் கவிதைகளும்,நிலா ரசிகனின் கவிதைகளும்.அட!யார்ரா இவுங்க என கவனிக்க ஆரம்பித்ததில்தான் ஒருநாள் தேடு பொறி வலையில் தமிழ் வலைபூக்கள் சிக்கின.அதன் பிறகே எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்கும் ஆர்வமும்,இணையத்தில் கவிதைகள் பதியும் ஆசையும் வந்தது அதை தொடர்ந்து கொஞ்சம் எழுதவும் தொடங்கினேன்.அதைத் தொடர்ந்து தமிழ்மணமும் உங்களின் அறிமுகமும்.இந்த வகையில் என்னை எழுத வைத்தது;உங்களை எல்லாம் அறிமுகப்படுத்தியவர் ரசிகவ் என்றால் மிகையல்ல.

நான் மிக ரசித்த "நீ எனக்கு வேண்டாமடி" ,"தூக்கம் விற்ற காசுகள்" இரண்டையும் எழுதியவரை தேடி நான் கண்டுக் கொண்ட இடம் அன்புடன்.

அன்புடன் குழுமத்தில் இணைந்த புதிதில் என்னை ஊக்கமூட்டி இன்னும் அதிகம் எழுத தூண்டியது ரசிகவின் கிண்டல் பதில் கவிதைகள்.பதில் கவிதைகள் எழுதுவதில் ரசிகவ்க்கு நிகர் ரசிகவே!ரசிகவின் கவிதைகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் அன்புடனில் உண்டென்றால் அந்த எண்ணிக்கைக்கு குறையாத ரசிகர் பட்டாளம் மற்றவர் கவிதைகளுக்கு அவர் இடும் மறுமொழி நக்கல் கவிதைகளுக்கும் உண்டு!

காதல் கவிதைகளை தருவதில் ரசிகவ் மிஞ்ச யாரும் இல்லை,அன்புடனில் 'அன்புடனின் தபூ சங்கர்' என்று ஒரு பெயரும் உண்டு அவருக்கு.ஞானிக்கு பிடித்து 'ஜர்னலிசம்' என பலதடவைச் சொல்லி கேட்டிருக்கிறேன்.கல்லூரி காலத்தில் பகுதிநேரமாக அதனாலேயே அவரது சமூகப் பார்வை கொஞ்சம் விரிந்தே இருக்கும்,அதன் வெளிப்பாடுதான் - அவரின் மன விதைதான் 'விதைகளாய்' வலைப்பூவாய் விதைக்கப்பட்டிருக்கிறது.

கவிதை , சமூக சிந்தனை இப்படி என்றால் ரசிகவ்வின் குறும்புக்கும் என்றும் பஞ்சம் இருந்ததில்லை அவரின் நக்கல்,நையாண்டி,கேலி எல்லாமே மற்றவரை புண்படுத்தாமல் ரசிக்க சிரிக்க வைப்பனவாய் இருக்கும்.அவர் இப்போது கைப்பிடிக்கப் போகும் பெண்ணிடம் கூட அவர் 'பூரி' சேட்டை செய்திருக்கிறார்.அதனாலேயே அவருக்கு 'வால்' என்ற செல்லப் பெயரும் உண்டு அன்புடனில்.

'பூரிச் சேட்டை' யை ரசிகவ் வலைப்பூவில் இட்டமாதிரி தெரியவில்லை அன்புடன் குழுமத்தில் படிக்க : பூரிச் சேட்டை

ரசிகவ் எழுதிய கவிதைகள் பல பிடிக்குமென்றாலும்,சமீபத்தில் நான் ரசித்த அவரின் சில கவிதைகளை இங்கே தருகிறேன்

* பயம் *

முதியோர் இல்லங்களின்
வாசல்தாண்டி
பயணப்படும்பொழுதெல்லாம் ...

அனிச்சை செயலாய்
மகனின் கைகளை ...
அழுத்திப்பிடிக்கிறது கரங்கள்!

- ரசிகவ் ஞானியார்.


* ஆறுதல் *

"ஏலே நொண்டி"

சூம்பிப்போன கால்களை
மண்ணில் நிறுத்தி
கைகளால் எம்பி
முகம் திருப்பி பார்த்தேன்!

அட..
அங்கே ஓர்
இதய நொண்டி

- ரசிகவ் ஞானியார்.


* ஒருநாள் அத்தனையும் மீறப்படும் *

வீதி மங்கைகள்..
விளையாடிய
பல்லாங்குழிகளில்,
புளியங்கொட்டைக்குப்பதிலாக...
மனித இரத்தங்கள்!

கடற்கரைச் சிறுவர்களின்..
மணல் வீட்டில்
எலும்புகள்தான்..
கூரைகள்!

வீதிகளில் விட்டுவந்த
பம்பரங்கள்...
இன்னமும்
இதயத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது!

நாங்கள்
பாயில் தூங்கிய ...
நாட்களை விடவும்,
பயத்தில் தூங்கிய ..
நாட்கள்தான் அதிகம்!

வாழப்போகிற தலைமுறைக்காய்
சாவை விரும்பும் ..
சந்ததிகள் நாங்கள்!
அழியப்போகும் ஆதிக்கமே! - உன்
சாவுக்கு ஊதுகிற
சங்கொலிகள் நாங்கள்!

உங்களுடைய
வாழ்க்கையெல்லாம்..
மரணத்தோடு முடிகிறது!
எங்களுடைய
வாழ்க்கையோ..
மரணத்தில் விடிகிறது!

சற்று உற்றுப்பாருங்கள்
எங்கள்
தலையில் சுமந்திருப்பது
கோணிகளா இல்லை
கோபத்தின் கொப்புளங்களா..?

நாங்கள்
விட்டுவந்தது ..
தாய் மண்ணைத்தான்
தைரியத்தை அல்ல..

நாங்கள்
அகதிகள் அல்ல ..
உங்களை
புதைக்க வரப்போகிற..
சகதிகள்!

புறநானூற்று தமிழ் - இனி
புல்லட்டுகளோடு வரும்

காத்திரு!
அத்து மீறியவனே - ஒருநாள்
அத்தனையும் மீறப்படும்

- ரசிகவ் ஞானியார்


இன்னும் அவரைப்பற்றி சொல்ல நிறைய உண்டென்றாலும் மற்ற அன்பர்களும் நிலவு நண்பனைப் பற்றி சொல்ல இடம்விட்டு இப்போதைக்கு நகர்ந்து நிற்கிறேன்.

அதே சமயம் ரசிகவ் அவரைப் பற்றி அவரே என்ன சொல்லுகிறார்னு படிச்சு பாருங்க : அன்புடன் அறிமுகம் - ரசிகவ்.

கடைசியாக,
செல்வன் அண்ணா,நான் ரசிகவின் திருமணத்திற்கு பாளையங்கோட்டை செல்கிறேன்.பொன்ஸ் அக்கா சொல்வதுப் போல் அன்பர்கள் எல்லோரும் பதிவுப் போட்டு வெட்டி ஒட்டி கார்டாக தந்தால் ப்ரீ கொரியர் சர்வீஸ் செய்ய நான் தயாராகவே இருக்கிறேன்,இதை அண்ணன் முத்துகுமரனின் பதிவிலும் நான் சொல்லி இருக்கிறேன்.

இதுத்தவிர கிப்ட் கொடுத்தனுப்புவர்களும் வெள்ளிக் கிழமை மாலைக்குள் என்னை தொடர்பு கொள்ளலாம்:

மடல் : mailtoviki@gmail.com
செல்பேசி : +91-98408-48453.

பொன்ஸின் நிலவுக்குப் போகும் நட்சத்திரம்

அன்புடன் குழும அன்பர் தமிழ்மாங்கனியின் For Nilavu Nanban!

வெளிச்சம்

வெளிச்சத்தை எனதாக்க
சிறைப் பிடித்து
அடைத்துவைத்தேன்
மின்மினியை;
சொல்லாமல் கொள்ளாமல்
செத்துப்போனது வெளிச்சம்!

- ப்ரியன்.

கையசைத்து நகர்ந்தது இரயில்!

யப்பா!பிப்ரவரியில ஆரம்பிச்சது ஜூன் ல முடிஞ்சிருக்கு எல்லோருக்கும் (எனக்கும்) கதையே மறந்திருக்கும் :)

என்னை மடலிலும் சாட்டிலும் கேட்டுக் கேட்டு கடைசியில் எழுத வைத்துவிட்ட அன்புடன் குழும நண்பர் ரிஷி ரிஸ்வானுக்கு என் நன்றிகள்!மன்னிக்கனும் நண்பா ரொம்பவே உங்க பொறுமையை சோதிச்சுட்டேன்.

:) மீண்டும் ??? வருகிறேன் ஒரு தொடரோடு :)


காதல் 01

டேய்!டேய்!
சூரியன் வந்து நேரமாச்சு!
எந்திரிடா!
அம்மா நச்சரித்துக் கொண்டிருக்கையில்!
பட்டுத் தாவணி சரசரக்க
வந்து நின்றாய் நிலவாக!

காதல் 02

"அம்மா
ஒரு குடம்
குடிதண்ணி வேணும்!"
இப்படியல்லாமா குயில் கூவும்?
குழம்பி கண்ணைக் கசக்கியவன் முன்!
அடடா,
நேற்றைக்கு கனவில் வந்த
அதே தேவதை!

காதல் 03

சத்தியமாய்,
இன்றைய தேதிவரை
அன்றைய நாள்தான்
இனியநாள் எனக்கு!

காதல் 04

பார்க்காதப் பார்வை;
இதுவரைப் பார்க்காத பார்வை
நான் பார்க்க
அம்மா சொன்னாள்
"புதுசா குடிவந்திருக்கிறப் பொண்ணு"
நான் கேட்காத கேள்வி
எங்கே என் இதயத்திலா?

காதல் 05

என் அம்மா உன் அம்மாவும்
உன் அப்பா என் அப்பாவும்
நல்ல நண்பர்கள் ஆனதைவிட;
எனக்கு சந்தோசம்,
எங்கள் வீட்டில் பூக்கும் ரோஜாவும்
உந்தன் கூந்தலும் ராசி ஆனதில்தான்!

காதல் 06

எப்படி இருப்பாள்? எப்படி இருப்பாள்? -
நண்பர்களின் தொடர் கேள்விக்கு
எப்படி இருக்கவேண்டுமென்று
கனவு கண்டேனோ
அப்படி இருப்பாள் எனச்
சொல்லி தப்பிவந்த நாளில்,
நல்ல நல்ல கல்லூரிகளிலெல்லாம்
இடம் கிடைத்தும் வேண்டாமென்று
கடைசியில் நீ சேர்ந்த அதே கல்லூரியில்
சேர்கிறாள் மகள் எனச் சொல்லி
வருத்தப்பட்டாள் உன் அம்மா
குதூகலப்பட்டது என் ஆன்மா!

காதல் 07

எப்படி உணர்ந்தேனா?
உன்னுடன் முதல்நாள்
கல்லூரி வரும்போது
எப்படி உணர்ந்தேனா?
தெய்வத்துடன் நடந்துவர
வரம் பெற்ற பக்தனைப் போல்!
அடியேய்,
தெய்வத்துடன் நடந்துவர
வரம் பெற்ற
ஏழைபக்தனைப் போல்!

காதல் 08

நீ வந்ததிலிருந்து
கல்லூரி முழுவதும்
ஏகப்பட்ட மரியாதை
எனக்கு!
தெரியும் அது
சாமியின் காலடியில் கிடக்கும்
பூவுக்கான மரியாதை!

காதல் 09

நேற்றிருந்த நானாக
இன்று நான் இல்லை!
தனிமை துணையாய் போனது!
மொட்டைமாடி இரவு
கையில் புகை
நண்பர்களுடன் அரட்டை! - என்றிருந்த
அடையாளம்
அத்தனையும் அவசரமாய் மறந்துப் போனது!
உன் நினைவுகள் மட்டும் துணையாய் ஆனது!

காதல் 10

கல்லுரிச் செல்லும்
காளையர்களின் கனமான
கனவு இருசக்கர வாகனம்!
அப்பா வாங்கித் தர
அபசகுனமானது
உன்னுடனான பேருந்து
பயணத்திற்கு!

காதல் 11

தனியே உனை அனுப்பவாதா? - உன் அப்பா
உன்னையும் தொற்றிக் கொள்ள சொல்ல
பூவானது பின் இருக்கை!

காதல் 12

தினம் தினம்
அலுங்காமல் குலுங்காமல்
தேரில் உலாவரும்
அம்மனைப் போல்தான்
அழைத்துச் செல்வேன்!
நீயும் வழிதோரும் காணும்
பிள்ளைகளுக்கு எல்லாம்
புன்னகை வரம் அளித்துக்
கொண்டே வருவாய்!
இவன் மனம் மட்டும் குண்டு
குழி தேடித் தேடி குதித்து
தரிக் கெட்டு ஓடிவரும்!

காதல் 13

கடைசிவரை யாரென
கண்டறிய இயலவில்லை
நம்முடன்
மிதந்து வந்த வண்டியை பொறாமையில்
"பஞ்சர்" ஆக்கிய
களவானி யாரென்று!

காதல் 14

பெண்ணில்லா எங்கள் வீட்டிற்கும்
நீதான் கோலம் போடுவாய்!

போக வர பார்த்திருக்கிறேன்
அர்த்தமில்லாமல் பேசிப்பேசி
வழிந்து கொண்டிருக்கும்
என்வீட்டு கோலம்
உன்வீட்டு கோலத்திடம்!

காதல் 15

நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
புடவைக் கட்டிக்கொண்டு
வந்த அந்நாளில்
நிலவில் முட்டி நின்று
அம்மாவிடம் வாங்கிக்
கட்டிக் கொண்டதை!

காதல் 16

காதலர் தினமன்று
உனக்கு கடிதம் கொடுத்த அவனுக்கு
நீ கொடுத்த பதிலடியில்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடி ஒளிந்துக் கொண்டது
என் தைரியம்
தற்காலிகமாய்
என் காதலும்!

காதல் 17

அன்று உனக்காக
வாங்கிய ரோஜா
ஒற்றை இதழைக்கூட உதிர்க்கவில்லை இன்னமும்!

காதல் 18

ஒரு மழைநாளில்
அம்மாவீற்கு முடியாமல்போக
நீ செய்த உதவி கண்டு
அம்மா சொன்னாள்
"இவளைப் போல்
ஒரு மருமகள் வேண்டும்"
இவளே மருமகளாய் வேண்டும்
உனக்கு!
பாவமாய் வேண்டியது இதயம்!

காதல் 19

உன்னுடன் பேசிக்கொண்டிருக்கையில்
காற்றிலாடும்
கலைந்த கூந்தல் ரசித்திருந்தேன்!
என்னடாவென்றாய் புருவம் தூக்கி!

"கூந்தலில் தொங்கிக் கொண்டு
ஊஞ்சல் ஆடுகிறது என் இதயம்!"

கேட்டவள்,கொஞ்சம் முறைத்து
சடசடவென
சிரிப்பூ தூவினாய்!

அடடா!கவிஞனே!
இன்னும் சொல்லேன்!
என நீ கேட்க
முதன்முதலாய்
வெட்கம் கற்றேன்!

காதல் 20

கவிதையாய் நான் சொன்ன காதல்
உனக்குப் புறிந்ததோ?
புரிந்தும் புரியாததாய் நடிக்கிறாயோ?
எண்ணி மயங்கிகிடந்த நாளில்
மொட்டைமாடி இரவில்
"விக்கி" எனக்கொரு கவிதை வேண்டும்
என் 'கவி'தைக்கு இல்லா கவிதையா?
சொல்ல வந்த கணம்!
வெட்கபூ பூத்தபடிச் சொல்லி முடித்தாய்
என் காதலனுக்கு தர...
அந்நேரத்தில் மடிந்தது என் உயிர்;
இன்றைக்கும்,
அதோ!அங்கு வானெங்கும்
நட்சத்திரங்களாய்
சிதறிக் கிடப்பவை
இதயம் சிதறிய சில்லுகள்!

காதல் 21

அவளோ?இவளோ!
என் காதலி என
பார்வை வீச வேண்டிய வயசடி!
அவனோ?இல்லை இவனோ?
உன் காதலன் என
நீ பேசும் ஆணிடமெல்லாம்
பொறாமை பார்வை வீச வைத்தாயே
கொடுமையடி கொடுமை!

காதல் 22

நல்ல கவிஞன் என்பாய்;
நல்ல நண்பனென்பாய்
என்னை நான் அறிய
தரும் பொழுதுகளில்;

உன் காதலைச் சேதப்படுத்த
விரும்பியதில்லையாதலால்
நல்ல காதலன் எனச்
சொல்லிக் கொள்வேன்
என்னையே நான்!

காதல் 23

அவன் அப்படிச் சொன்னான்
இப்படி சொன்னான்
என காதலன் புராணம்
நீ பாடி சிலாகித்திருக்க
சிரித்தப்படி கேட்டுக் கொண்டிருப்பேன்
மனதின்
மூலையில் குத்தவைத்து
அழுது கொண்டிருக்கும்
என் காதல்!

காதல் 24

அறிமுகப்படுத்தியதில்லை;
தூரமிருந்தும் அடையாளம்
காட்டியதில்லை;
உன் காதலனின்
பெயரும்கூட அறிய தந்ததில்லை;
ஆனாலும்
உன்னை விடுத்துப் பார்த்தால்
நான் மட்டுமே அறிவேன்
உன் காதலனை
உன்னுள் இருக்கும் காதலை;
இருக்கட்டும்
அவன் வரம் பெறவதற்கென்றே
பிறந்த ஆடவன்;
நான் சாபம் வாங்கவே
வந்த முடவன்!

காதல் 25

மொட்டைமாடியில் அமர்ந்து
கல்லூரி
கடைசி வருடத்தின்
கடைசி தேர்வுக்காக
படித்துக் கொண்டிருக்கையில்;
பக்கதிலிருந்த என் நோட்டு புத்தகத்தை
அனுமதி இல்லாமல்
எடுத்துப் பார்த்தவள்
கவிதைகள் எல்லாம்
உன்னைக் குறித்து இருக்க
பட்டென முடி
சட்டென பறந்து போனாய்;
ஆற்றி முடியாமல்
அழுது கொண்டே இருந்தது
அம்மா நீ
சொல்லாமல் போனாதாய்
கவிதை!

காதல் 26

அடுத்தடுத்த நாட்கள்
பேசாது நீயிருக்க
ஊமையாகிப் போனது
நான்!
ஊனமாகிப் போனது
மனது!

காதல் 27

கல்லூரி கடைசிநாளில்
எல்லோரும்
கலந்திருக்க
பிரிவு் கவலையில்
கரைந்திருக்க!
என் கண்களும்
அழுது கிடந்தன
நீ பேசாததால்
இறந்துப் போன - எந்தன்
இதயத்திற்காக!

காதல் 28

விடுமுறைக்கு ஊருக்கு பயணம்
வழியனுப்ப வலிய எனை
அனுப்பும் உன் அப்பா!
பாதையெங்கும் மெளன
முட்களுடன் பயணம்!

குடிக்க தண்ணீரும்
படிக்க சில புத்தகங்களும்
வாங்கி வந்தவனுக்கு
நன்றிகூட இல்லாதா நீ!

கைப் பையை கூட
என்னிடம் தராமால்
அந்நியமாய் நீ!
முதன்முதலாய்
உன் அண்மை வேண்டா
நிமிடங்கள் அவை!

மெல்ல மெல்ல
இரயில் நகர ஆரம்பிக்க
போ!போ!
மனம் சொல்ல
போய் ஏறிக் கொள்
என கடைசியாய் என் மெளனமும்
கலந்த வினாடியில்!

'உன்னை விட்டுப் போவேனோ?
என் உயிரை தனியே விட்டு போவேனோ?'
என நீ கட்டியணைக்க
கூவி அழைத்து
கையசைத்து நகர்ந்தது
இரயில்!

நிமிர்ந்து பார்த்தவள்
நீ தான்டா இத்துணை நாட்களாய்
நான் சொல்லிச் சொல்லி
உன்னை வெறுப்பேற்றிக் கொண்டிருந்த காதலன் என்றபடி
மீண்டும் என் நெஞ்சில் முகம்புதைத்து
அப்போதும் 'பெயர்' சொல்லாமலே
சொல்ல

அதிவேக ரயிலாய் பயணப்பட்டது என் மனது!

- ப்ரியன்.

மடலாடலுக்கு : mailtoviki@gmail.com

இரண்டு கடல் கவிதைகள்

மக்கள் கூட்டம்
கலைந்த பின்னிரவில்
கதை பேசியபடியே
மெல்ல நடைப்பயில்கிறது
பெளர்ணமி நிலவு
கடற்கரையோரமாய்!

- ப்ரியன்.

கால் நனைத்து
விளையாடுகிறது
ஒரு குழந்தை!
அதன் கால் ஸ்பரிசத்தில்
குழந்தையாகிறது கடல்!

- ப்ரியன்.

உள்ளிறங்கி நுழைகிறது வானம்!

நெற்றியில் பட்டு
தெறிக்கிறது மழைத்துளி!
உள்ளிறங்கி
நுழைகிறது வானம்!

- ப்ரியன்.