புரியா உலகம்

எவனோ ஒருவன்
தினம் தினம்
ஒரு கதவு தட்டி
இராப்பிச்சைக்
கேட்கிறான் என
எல்லோரும்
பேசிக் கொண்டார்கள்!

நேற்று பக்கத்து வீட்டு
பக்தவசலம் வீடாம்!

அப்படி என்றால்
இன்று என் வீடு!

தட்டிக் கேட்டுதான்
நீ பெறவேண்டுமா?
உனக்கு வேண்டியதை
நீயே எடுத்துக் கொள்!

வாசல் கதவு திறந்து
வைத்து தூங்கி போனேன்!

எவனும் வந்து
போனதுக்கான
சுவடு காணோம்
காலை!

மெல்ல சோம்பல் முறித்தபடி
வெளியே வந்தேன்!

என்னை கைக்காட்டிப் பேசிக்
கொண்டிருந்தார்கள்!

கஞ்சன்,
இவன் வீட்டு
கதவு தட்டி சிரமபடுத்துவானென்று
திறந்து வைத்து தூங்கியதால்
அடுத்த வீட்டு கதவு தட்டினானாம்
இராப்பிச்சை நேற்றைய
இரவு!

எனக்கு இன்னமும்
உலகம் விளங்கவில்லை!
அவர்களுக்கும்
என்னை!

- ப்ரியன்.

அன்புடன் - கவியரங்க கவிதை

அன்புடன் குழுமத்தில் கவியரங்கத்திற்காக படைத்த கவிதை இது

<அன்புடன் குழுமம்> -> http://groups.google.co.in/group/anbudan

என்னை உலகிற்கும்
உலகத்திற்கு என்னையும்
அறிமுகம் செய்த
அன்னைக்கு முதல் வணக்கம்!

தமையனாய் சில நேரம்
வயதொத்த தோழனாய் சில நேரம்
நல்லாசிரியனாய் சில நேரம்
பாசமிகு தந்தையாய் சில நேரம்
தரமான மனிதனாய்
வார்த்த எந்தைக்கு அடுத்த வணக்கம்!

தோளோடு தோள் நின்று
தோழமையாய் என்னை
ஆளாக்கிய என்
ஆசான்களுக்கு அடுத்த வணக்கம்!

தாய்ப் பாலோடு
உனைப் பருகவில்லை!
தத்தித் தத்தி நடக்கையில்
துணைக்கு உனைப்
பற்றிக் கொள்ளவில்லை!
பத்து வயதில்கூட
தடவித் தடவித்தான் படித்தேன்
தமிழே உனை
தடவித் தடவித்தான் படித்தேன்!
தாராளமான உன்மடியில்
தஞ்சம் தந்து - எனைத்
தத்தெடுத்துக் கொண்ட
பெருமைமிகு
என் தமிழே
உனக்கு "பெரு"வணக்கம்!

உன்னில் நான் அடக்கம்!
என்னில் நீ அடக்கம்!
காதலியிடம் பேசும் வசனமில்லை!
அய்யனே பொய்மை
கொஞ்சமும் இல்லா மெய்யனே
என் அப்பனே!
பாரத கதையெழுத தந்தம்
உடைத்த கவி
பித்தனே!
முழு முதல் முதல்வனே!
பழத்திற்கு முந்தியவனே!
விக்கனம் விலக்கி
"விக்னேஷ்" என பெயர் கொண்ட
விநாயகனே!
என் குண்டனே!
உனக்கும்
எனக்கும் சேர்த்தொரு
வணக்கம்!

அறியா பிள்ளைக்கு
ஆறுதல் கரம் தந்து
தமிழ் கடலில் நீந்த
கற்றுத் தந்து கொண்டிருக்கும்
மின் தமிழ்ச் சங்கமே!
என்னை அன்புடன்
அரவணைத்துக் கொண்ட
"அன்புடன்" குடும்பமே
உனக்கொரு வணக்கம்!

தலைமைக்கு பெருமை சேர்க்கும்
இரவா விற்கு
தனி வணக்கம்!

முன்னிலை வகிக்கும்
வேந்தனுக்கு
ஒரு வணக்கம்!

கவிமழைப் பொழிகவிஞர்களுக்கு
சிறப்பு வணக்கம்!

பார்வையாளர்களாய் அமர்ந்து
சீர் தூக்கி
கவிதைகளில் ஏர் ஓட்டி
கவியரங்கத்தை சிறப்பிக்கும்
உள்ளங்களுக்கு
உவகை வணக்கம்!

வாராத மழை
வெளி சிந்த!
தமிழ் எழுது
எழுது என உந்த!
இதோ "வண்ணங்களில் என் எண்ணங்கள்"
வானுடைந்து மண்
விழுந்த சில
வானவில் சில்லுகள்!

வண்ணங்களில் என் எண்ணங்கள்
********************
- ப்ரியன்.

நீலம் ஒரு போலி
**********

நாம்
வான் நீலம் கண்டு வாழ்த்துவது இல்லை
கடல் நீலம் கண்டு களிப்பெய்துவதில்லை
கண்ணன் கருநீலம் கண்டு கும்பிடப்புகுவதில்லை
கண்கள் நீலம் கண்டு கவிப்பாடித் துதிக்கின்றோம்!
காதலியின்
கண்கள் நீலம் கண்டு கவிப்பாடித் துதிக்கின்றோம்!
எல்லோரும் அறிவதில்லை
அக்கண்களில் உள்ள
விஷத்தின் வண்ணமும் நீலமென்று
நம் மனதைக் கைது செய்யும் நீலத்தில்
‘விஷயம்’ இருக்கின்றது
விஷமும் இருக்கின்றது.
நீலம் ஒரு போலி
நீலம் வெறும் நிழல்
காரணத்தைக் கேளுங்கள்
சொட்டு நீலம் சேர்ப்பது
துணிகளின் ‘தூய வெண்மைக்கு’
நீலத்தின் வேஷம்
வெயிலில் வெளுத்துப் போய்விடுகிகிறது!
ஆம்!
நீலம் ஒரு போலி
நீலம் வெறும் நிழல்!


செங்குருதி அழகா?
***********

குங்குமச் சிவப்பழகு
செம்பருத்திப் பூவழகு
செம்மண் நிலமழகு
செந்தாமரை அழகு
செங்கதிரோன் அழகு
செவ்விதழ் அழகு
அவள் செவ்விதழ் தானுமொரு அழகு
செங்குருவி தனி அழகு
செங்குருதி அழகென்று
கருதுவோர் யாருமுண்டோ?
நம் தமையர்
ஈழத்தமிழர்
செங்குருதி அழகென்று
கருதுவோர் யாருமுண்டோ?
தமிழ்த் தாயின் குருதி கண்டு
வெறுக்கின்றேன் சிவப்பை - நீங்கள்
அறிவீர்கள் என் தவிப்பை!
வன்முறைக் கலாச்சாரம்
நிலவும் நாட்டில்
சிவப்புநிறம்,சீவ நதியாய் ஓடும்!
சில சிவப்பில் தியாகம் தென்படலாம்
அதன்பின் தீமையும் இருக்கின்றதே!


மஞ்சள் மெல்லிய சோகம்
****************

மஞ்சளை விரும்பாத மனிதருண்டோ?
மங்கலம் விரும்பாத பெண்மையுண்டோ?

கழுத்தில் மஞ்சள்
மங்கலத்தின் அடையாளம்
கண்களின் மஞ்சள்
காமாலையின் அடையாளம்
காமாலைக் கண்களுக்குக்
காண்பதெல்லாம் மஞ்சள்
குற்ற நெஞ்சங்களுக்கு
காண்பதெல்லாம் குற்றம்
மஞ்சள்,
மெல்லியதொரு சோகம்
மஞ்சள் வண்ணத்தில் நிறமில்லை
மஞ்சள் வண்ணத்தில் கனமான நிறமில்லை
நிறமிருந்தால் திடமில்லை
திடமிருந்தால் சுவையில்லை

சுவைத்து ரசிக்க உதவா மஞ்சள்
இந்த அவைக்கெதற்கு?

மஞ்சள் மெல்லியதொரு சோகம்
சோகம் நமக்கு வேண்டாம்
வேண்டுவதெல்லாம் சுக உற்சாகம்!


இருட்டோ இருட்டு
***********

இருட்டின் நிறம் கருப்பு
கருப்பின் துணை இருட்டு
கருப்பிருட்டுக் கருவறையில்
குடியிருந்த காரணத்தால் என்னவோ
மனித மனங்களெல்லாம் ஒரே கருப்பு
பிறர் மீது
கருப்பைப் பூசிவிடத் துடிப்பு
கண்ணுக்கு கரும்’மை’ அழகுதான்
ஒவ்வாமை ஆகாத வரையில்
கருமை ஒரு வெறுமை
கருமை ஒளி பிறக்க ஓடிவிடும்
இவ்வளவு ஏன்?
கருமைக்கு வயது ஏற ஏற
நரை ஏறும்
கருப்பின் முன்னே
வண்ணங்கள் பல வந்தாலும்
வலுவிழந்து போய்விடும்
வானவில்லே வந்தாலும்
பொலிவிழந்து போய்விடும்
இருட்டு மட்டும் இங்கே வந்தால்
இதுவே எங்கோ போய்விடும்
இருட்டு மட்டும் இங்கே வந்தால்
இக்கருப்பே எங்கோ போய்விடும்
இக்கருப்பு
தன் பொருட்டு பிறரை அழிக்கும்
பாங்கை எப்படிப் பெற்றது?
மனிதனோடு சேர்ந்த வகையில்
மாசு இதைப் பெற்றது!

கருப்பு
குற்றத்தின் குரல்
மன அழுக்கின் மறுபிறவி
எதிர்ப்பின் அடையாளம்
துக்கத்தின் துணைவன்
பயத்தின் பரிணாமம்.


ப’சுமை’
*****

பசுமை கண்களுக்குக் குளுமை
வறட்சி கண்களுக்குச் சுமை
பசுமைப் புரட்சி பற்றிப் பேசுகின்றோம்
பாயும் காவேரி வந்து சேர்ந்ததா?
தூரத்துப் பச்சை கண்களுக்குக் தண்மை
என்பார்கள்.
கர்நாடகப் பச்சை நம் கண்களுக்கு ஒவ்வாமை
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள்
உண்மைதான்
காவிரிக்கு அக்கரையில் பச்சைதான்
பச்சைப் பயிர்கள் வாடி வதங்கி
பாவ உயிர்களாய் நசுங்கி
பரிதவிக்கும் நிலை - இங்கு
பச்சைத் தண்ணீர்க்கே விலை!
இங்குள்ள தாவரங்களில்
குளோரோபில்கள் குறைந்துவிட்டன
சாந்தோபில்கள் நிறைந்துவிட்டன

பச்சை குத்தும் அரசியல்வாதிகள்
பச்சைத் துரோகிகள்
நம் சுட்டுவிரலில்,
பச்சை குத்தும் அரசியல்வாதிகள்
பச்சைத் துரோகிகள்
பச்சை ரத்தம் குடிக்கத் துடிக்கும்
மக்கள் விரோதிகள்
அவர்கள்,
பச்சை ரத்தம் குடிக்கத் துடிக்கும்
மக்கள் விரோதிகள்
பச்சைமரம் வெட்டும் கயவர்
மழை குறைக்கும் கூட்டம்
பச்சைமரம் வெட்டி
மேக கர்ப்பத்தைக் கலைக்கும் கயவர்
மழை குறைத்துப் பசியால்
உயிர்தின்னும் கூட்டம்
பச்சை வசனம் பேசும் நடிகர்
குழிபறிக்கும் கூட்டம்.
பச்சை பச்சையாய்
வசனம் பேசும் நடிகர்
இளைஞர்களுக்கு
குழிபறிக்கும் கூட்டம்.


வெண்மைதான் வண்ணம்
***************

தூய உள்ளங்களே
நீங்கள் வாழ்க
சத்திய மொழிகளே
நீங்கள் வெல்க
எளிய மனங்களே
நீங்கள் வாழ்க
ஒளி பொருந்திய விழிகளே
நீங்கள் வெல்க

தூய்மை வாய்மை எளிமை - இம்
மூன்றின் முத்தாய்ப்புதான் வெண்மை

வெண்மை வண்ணங்களின் தலைவன்
எல்லா வண்ணங்களின் தகப்பன்
வெள்ளொளிதான் உயிர்களின் உதயத்திற்காதாரம்
வெண்மைதான் பிறவண்ணங்களின் மூலாதாரம்

சமாதானப் புறாவும் வெண்மை
சங்கு சுட்டாலும் வெண்மை
காராம் பசுவாக இருந்தாலும்
கறப்பது வெண் பால்தான்!

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிப் போன வள்ளலாரும்
தேடிச் சுதந்திரம் நமக்களித்த
தெய்வப் பிறவி அடிகளாரும்
ஆதரித்தது வெண்மையைத்தான் - அவர்கள்
அணிந்தது வெள்ளுடைதான்.

வெண்மைதான் வண்ணம்
வெண்மைதான் சிறப்பு
வெண்மைதான் அன்பு
வெண்மைதான் உயிர்


நீலப்படமுண்டு சிவப்பு விளக்குண்டு
மஞ்சள் பத்திரிக்கையுண்டு கருப்புப் பணமுண்டு
பச்சை வசனமுண்டு இதுபோல் பலவுண்டு
இவையெல்லாம் சமுதாய அலங்கோலங்கள்
இவற்றிற்குத் துணை நிற்கும் இவ்வண்ணங்கள்
இவை சேராத இடம் சேர்ந்து
தம்மை - தம் தன்மை இழந்துவிட்டன

தனித்திருந்து ஒளிபொருந்தி
தனித்தன்மையுடன் திகழும்
வெள்ளைதான் சிறந்த வண்ணம்
இதுவே என் ‘வெள்ளை அறிக்கை’

கவிஞன்_காதலன்

*ஒரு கரு மூன்று கவிதைகள் - ஒரு சிறு முயற்சி*

நான் கவிஞனாக இருந்திருந்தால்
நிலா போல் சூரிய கதிர்களை தின்று
ஒளி கொடுக்கின்றது உன் முகம் என்றிருப்பேன்!
காதலனாய் இருப்பதினால்
சூரியன் மட்டுமல்ல உன் முகமும்
தானே பிரகாசிக்கக் கூடிய
ஆற்றல் கொண்டதென என்றுரைக்கின்றேன்!

- ப்ரியன்.

சூரியக் கதிர்கள் தின்று துப்பும்
நிலா உன் முகமென்றேன்
கவிஞன் என்றார்கள்!

இல்லையில்லை,
சூரியனுக்கு அடுத்து
உன் முகமே தானே
பிரகாசிக்கக் கூடியதென்றேன்
பித்து காதலன் என்கிறார்கள்!

- ப்ரியன்.

சூரியக் கதிர்கள் தின்று துப்பும்
நிலா உன் முகமென்றேன்
கவிஞன் என்றார்கள்!

இல்லையில்லை,
சூரியனுக்கு அடுத்து
உன் முகம்,தானே
பிரகாசிக்கக் கூடியதென்றேன்;
பித்து காதலன் என்கிறார்கள்!

ம் மென வெட்கப் பூ பூத்துவிடு,
சூரியனுக்கே ஒளிப் பிச்சையிடுவது
உன் முகமென
நிரூப்பித்துக் காட்டுகின்றேன்!

- ப்ரியன்.

புத்தகப் பரிசு

நீ பரிசாய்
அளித்ததால் என்னவோ -
புத்தகத்தையும் தாண்டி
அதை
எழுதியவனையும்
கொஞ்சம் பிடித்துப்
போனதடி எனக்கு!

- ப்ரியன்.

ஆசிர்வதி

உனக்காக எந்தன்
இதயம் ஒற்றைக்கால் தவம்
புரிந்து காத்திருக்கின்றது
வா,
வந்து உன் கரம் தொட்டு
அதனை ஆசிர்வதித்துவிட்டு போ!

ஆசிர்வதிப்பது உந்தன் இடது
கரமானாலும் பரவாயில்லை!

- ப்ரியன்.

உயிர்மெய்

உயிராய் நீ
மெய்யாய் நான்
உயிர்மெய்யாய்
நம் காதல்!

- ப்ரியன்.

வானவில் கோலங்கள்

நீ வருவதாய்
சொல்லப்படுகின்ற நாட்களில்
வானவில்கள்
என் வீட்டின் வாசலில்
கோலங்கள் ஆகின்றன!

- ப்ரியன்.

காதல் தழும்புகள்!

உன் கண்கள்
தந்த சாட்டையடியில்
என் நெஞ்சமெல்லாம்
காதல் தழும்புகள்!

- ப்ரியன்.

இயற்கை பாடம்

தூரத்தில் நின்று
அம்மரத்தை வெறித்திருந்தேன்!

சென்ற வருடத்தின்
காய்ச்சலுக்கே
மரித்திருக்க வேண்டிய
மரம்
தாங்கிப் பிடித்திருக்கிறது
இலைகளையோ
கிளைகளையோ அல்ல
உயிரை மட்டும்!

எப்போதாவது
எட்டிப் பார்க்கும்
மேகமொன்று தூரத்தில்
வருகின்றதாய் அறிகுறி!

பக்கம் வந்த
மேகம் பாவப் பட்டு
மரத்தின் பாதம் மட்டும்
நனைத்து நகர்கின்றது!

நீர்,
ஆணி வேர்
தொட்ட கணம்
சிலிர்த்து ஆயுத்தமாகிறது
மரம்;
அடுத்த தளிர் பிரசவத்திற்கு!

உயிர் தாங்கி
நிற்கும் மரத்தின் - நம்பிக்கை

மேகம் வந்தது - அதிர்ஷ்டம்

மழை தந்த மறுபிறவி - சமயத்தில் வந்த உதவி

மெல்ல மேற்கே ஆதவன்
அடைக்கலம் ஆக
என் கிழக்கில் விடியல்;

மெல்ல எனக்கு
பாடம் சொல்லி விட்டு
அடுத்த பாடத்திற்கு
ஆயுத்தமாகிறது இயற்கை!

பாடம்:

நம்பிக்கை - அதிர்ஷ்டம் - உதவி
இப்படித் தான் உயிரை
கட்டி பிடித்து
வைத்திருக்கிறது
இத்தனை நாள்
உலகம்! - இன்னமும்!!

- ப்ரியன்.

கவிதை எழுது...

எல்லா நாளும்
கவிதை எழுதிக்
காத்துக் கிடந்தேன்
உன்னை கண்ட
அந்த நாளில்தான்
கவிதை என்னை எழுதியது!

- ப்ரியன்.

வழிமேல் விழி

உன் வருகைக்காக
ஒருபோதும்
வழிமேல் விழி வைத்து
காத்திருந்ததில்லை
அவ்விழிகளில் நீ
இருப்பதினால்!

- ப்ரியன்.

நட்"பூ"...

துவண்ட கணம்
எனக்கு தோள்
சாய இடம் கொடுக்கும்
நட்பிற்கும்!

தவறும் கணம்
திட்டித் திட்டி
நேர் செய்யும்
தோழமைக்கும்!

என்
சந்தோசமெல்லாம் தனிமையில்
சுகிக்க விட்டு!
என்
துக்கமெல்லாம் கூடிப் பக்ரிதல் பொருட்டு
ஓடோடி வரும்
சினேகத்திற்கும்!

நட்பு, சினேகம் , தோழமை , நண்பு , நேசம்
என சில சொல்லிருக்கலாம் அப்பந்ததிற்கு
எனக்கு அவை
அகரவரிசைப் படிப் பார்த்தால்
நூறு நூறு சொற்கள்
உங்களின் பெயர் வடிவத்தில்!

நட்புக்கு ஒரு தினமிருக்கலாம்
ஆனால்,
உங்களிடம் கதைக்கும் நாள் ஓவ்வொன்றூம்
எனக்கு நட்பு தினமே!

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

- ப்ரியன்.

நினைவு

என் காதலியை வற்புறுத்தி கேட்டதற்கு அவள் சமைத்த கவிதை :

அவள் : படித்துவிட்டு சிரிக்க கூடாது!

நான் : கண்டிப்பாக சிரிப்பேன்.

அவள் : ம்ம்ம் போடா...காட்டமாட்டேன்...

நான் : காட்ட வேண்டாம் கொஞ்சம் திரும்பு...உன் நெஞ்சிலிருந்து நானே படித்துக்கொள்கிறேன்...

அவள் : முடியாது (சொல்லியபடி திரும்ப நான் படித்த அவள் வரைந்த கவிதை)

என்னை நினைத்து
ஒரு கவிதை
எழுது என்றான்...
அவன் நினைவே
ஒரு கவிதை
என்பதறியாமல்!

நான் : டேய்...நல்ல வந்திருக்கு

அவள் : பொய்...எனக்காக பொய் சொல்ல வேண்டாம்

நான் : பொய்தான்...அழகிடம் வெட்கத்தால் இன்னமும் அழகூட்ட பொய் சொல்லலாம்

அவள் : பொறுக்கி...

நான் : ஆமாம் நான் பொறுக்கி...பொறுக்கி...கிடைத்த தெய்வம் நீ

அய்யோ தாங்கலே!
கொஞ்சம் நிறுத்தேண்டா
கத்திக் கொண்டு ஓடுகிறது காதல்...

முடிந்தால் யாரவது
காதலை தடுத்து நிறுத்தி
என்னிடம் ஒப்படையுங்களேன்
இவள் அழகிடம்
என்னை சிறைபடுத்தியதற்கு
இன்னும் இப்படி பேசிப் பேசி
பல தண்டனைகள்
தரவேண்டும் காதலுக்கு!

- ப்ரியன்.

முத்தம் - கடன்

கடன் வாங்கியும் பழக்கமில்லை
கொடுத்தும் வழக்கமில்லை
எனக்கு!

முதல் புன்னகை சிந்தினாய்
மறு புன்னகை பூத்தேன்!

கண்ணோடு கண் பார்த்தாய்
மறு பார்வை பரிசாய் தந்தேன்!

சில நாள் கழிந்து,
இதயம் உனக்கு கொடுத்தேன் என்றாய்
திருப்ப இயலாது எனது வைத்துக் கொள்
என சமாளித்தேன்!

இன்று நான்
முத்தம் தருவதாய் யோசனை
கண்டிப்பாக
நீ திருப்பியாக வேண்டும்!

ஏனெனில்,
கடன் வாங்கியும் பழக்கமில்லை
கொடுத்தும் வழக்கமில்லை
எனக்கு!

கொஞ்சம் பொறு கணக்கிலும்
நான் கொஞ்சம் சுமார்தான்;
ஒன்று கொடுத்து
இரண்டு கேட்டாலும் கேட்பேன்!

- ப்ரியன்.