நடு நிசி நாய்கள்

இரவில் அப்படி இப்படி
திரும்பி புரண்டுப்
படுக்கையில் தூக்கம்
கலைந்து போகும்
சில நாட்கள்!

பக்கத்து வீட்டு
மரம் அசைதலில்
பேய் கண்டுபிடித்து
மனம் கிலி கொள்ளும்
சில நேரம்!

மாலையெல்லாம்
அமைதியாய்
கம்பம் தேடிய
நாய்கள் குரைத்துத் தொலைக்கும்;
அவ்வப்போது
குலை நடுங்க வைக்கும்!

சின்னதொரு வயதில்
இருட்டியப் பின் கடைக்கு
செல்லும் நாட்களில்
தூரத்தில் வரும் அப்பனை
அடையாளம் காணாமல்
பேய் வருதென பயந்து
பதுங்கியதும்;
டவுசரைப் பிடித்தப் படி
துணைக்கு சத்தமாய்
பாட்டை நடுங்கியபடி
கத்திச் சென்ற
நினைவுகளும்;
மனதில் நின்று ஊஞ்சலாடி
மெல்லியதாய் புன்னகை
பூக்கச் செய்யும்!

அது தொடர்ந்து
என்னைப் போல
எதைக் கண்டு
பயந்து கத்துகின்றனவோ
இந்நடு நிசி நாய்கள்! - என
எண்ணும் கணம்
இன்னும் பயங்கரமாக கத்தி
பயமுறுத்தி தொலையும்!

ஆனாலும்,
எந்த நாயும்
சொல்லியதில்லை என்னிடம்
இரவில் கத்தும் ரகசியத்தை;
ஏனோ நானும்
இதுநாள் வரை கேட்டதில்லை
அதுகளிடம் அவ்ரகசியத்தை!

- ப்ரியன்.

கடிதம் கை சேரும் கணம்

ஊனமான நெஞ்சம் மெல்ல
தத்தித் தத்தி
தாவும்!

இயலாமையில் தீக்கிரையாக்கிய
என் கவிதைகள்
கொஞ்சம் சிறகு
முளைத்துப் பறக்கும்!

அறுப்பட்ட வீணை மனதில்
மெல்லிய கீதம்
இசைக்கப் படும்!

எரித்துத் தொலைக்கும்
என் வீட்டு நிலவு
குளிர் பரப்பும்!

என் காதல் வால்
முளைத்துத்
தாவித் திரியும்!

இத்தனையும் நடக்கும்!
ஊடல் உருகி
கூடலாகும் போது
அனுப்புவாயே
ஒரு கடிதம்!
அது வந்துச் சேரும் கணம்!

- ப்ரியன்.

ஒரு சேரி வீட்டின் உறுப்பினர்கள்

காலையிலிருந்து வெந்த உடம்பை
எரியூட்ட டாஸ்மாக்கில்
மொத்தமாய் கூலி தொலைக்கும்
அப்பா!

சோற்றுக்கு கூட பணம் தாராதவனை
கெட்ட வார்த்தையில் கடிந்துக் கொண்டே
அவனுக்கும் சேர்த்து சோறு வடிக்கும்
அம்மா!

ஊரில் உள்ள சேறேல்லாம்
தந்து சேர்க்கும்
வீடோடு ஒட்டிக் கொண்ட
ஒரு தெருநாய்!

அப்புறம்,
வீட்டின் கூரை ஓட்டை
ஒவ்வொன்றிலும் ஒரு நிலவு
தேடும் சில பிள்ளைகள்!

- ப்ரியன்.

கனவும் அதில் வந்த கவிதை வரியும்

நல்ல கவிதை வரி ஒன்று
கனவில் வந்தது!
எழுந்து பக்கத்தில் கிடந்த தாளில்
குறிப்பெழுதி வைத்து
உறங்கிப் போனேன்!
காலையில் தாள்
காணமல் போயிருந்தது!

அடுத்தநாள் கனவில் வந்தது அதே வரி!
இந்த முறை
நாட்குறிப்பில் எழுதிவைத்தேன்!
அதனால் எழுந்து ஓட முடியாது
என்ற தைரியத்தில்!
காலையில் நாட்குறிப்பு இருந்தது!
வரிகள் இல்லை! - அடடா
பேனாவில் மையில்லை!

அதற்கு அடுத்த நாளும்
அதே கனவு
அதே வரி
குறிப்பெடுத்து வைத்தேன் என்பதை
கண்ணாடிப் போட்டு
உறுதிப்படுத்தியப் பின்
உறங்கிப் போனேன்!
மறுநாள் காலையில்
என் கையெழுத்து
எனக்கே புரியவில்லை!

இன்றைக்கு அந்த வரிகளை
கனவில் கண்டவுடன்
எழுந்து அமர்ந்து
முழுதாய் கவிதை எழுதி
முடித்தப் பின்னரே
உறங்கப் போகவேண்டும்!
உறுதியுடன் கண்ணயர்ந்தேன்!

அன்றைக்கும்;
அதன் பிறகும் - வரவேயில்லை
அந்த கனவும்;
அந்த கவிதை வரியும்!

- ப்ரியன்.

* வீடு *

மொத்தம் எட்டு அறைகள்
பழைய சாமான்கள் போட்டுவைக்கும் அறையும்
நெல்மூட்டை அடுக்கிவைக்கும் அறையும்
அறை கணக்கில் அடக்கமில்லை!
அக்கா
வீட்டுக்கு வெளியே இருக்கும்போது
துணைக்கு அம்மாவும்
நீட்டிப் படுத்துறங்க
அகலமானதொரு திண்ணை!
வருடத்திற்கு ஒருமுறை
நான்கு ஏக்கரில் விளையும்
மிளகாய் காயவைக்க
வசதியான திடல்!
அக்காவிற்கும் அம்மாவிற்கும்
மல்லிகைப் பூ;
அவசர சமையலுக்கு முருங்கை தர
அளவாய் ஒரு தோட்டம்!
வெளியே போக மட்டும் காடு;
மற்றப்படி குளியல் அறை என்று ஒன்று தனியாக இருந்தது;
எங்கள் கிராமத்துவீட்டில்!
அவ்வீட்டை விற்றப் பணத்தில்
வாங்க முடிந்தது இங்கு
எட்டுக்கு எட்டில் இரண்டு அறையும்
பத்துக்கு எட்டில் ஒரு வரவேற்பு அறையும்
இணைந்த குளியலறையும்!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள் - 5

நேற்று பார்த்த
நீதானா நீ?
தினம் தினம்
அழகு கூடுதலில்
அடையாளமே
மாறிப் போகிறது!

- ப்ரியன்.

உனை ரசித்து ரசித்து
அழகு ரசித்து சலிக்க
ஆயுள் பல ஆகும்!
பேசாமல் உண்டுவிடு என்னை;
இரத்ததோடு ரத்தமாய்
உள்சுற்றி
அழகு ரசிக்கிறேன்!

- ப்ரியன்.

உன் கண்ணொளி
தீபத்தில்
சுடராக உயிர்வாழும்
என் உயிர்!

- ப்ரியன்.

உன்னுள்
இறங்கிவிட்டப் பிறகு!
நான்,
சுவாசமானால் என்ன?
உயிரேதான் ஆனால் என்ன?

- ப்ரியன்.

கடற்கரைப் பக்கம்
போய்விடாதே!
அலைகள் எல்லாம்
உன் கால் நனைக்கும்
ஆசையில் ஓடிவந்தால்
கடல் பொங்கி
மீண்டும் ஒரு
கடல்கோள் உண்டாகிவிடும்!

- ப்ரியன்.

தினம் தினம்
தொலைக்காட்சியில்
வானிலை வாசிக்கும் பெண்,
எனக்கு மட்டும் சொல்கிறாள்
உனைக் காணும் நாட்களெல்லாம்
மழைநாட்களாம் எனக்கு!

- ப்ரியன்.

தொட்டால்
தட்டிவிடுகிறாய்!
தள்ளிச் சென்றால்
கை கோர்க்காமைக்கு
கோபிக்கிறாய்!
கடினம்தான்
உனை காதலிப்பதும்!

- ப்ரியன்.

பூ வாங்கி தர
அழகாய் இடம் தருகிறாய்
கொண்டையில்!
கொக்கரித்து ஆடுகிறது
என் காதல்
அதே கொண்டையில்!

- ப்ரியன்.

கிளை தங்கிவரும்
தென்றல்
நான் உயிர் வளர்க்க!
உந்தன் கூந்தல்
கலைத்துவரும் காற்று
நான் உயிர் பிறக்க!

- ப்ரியன்.

எந்தத் தேனீ
விட்டுச் சென்றது
உன் இதழ் முழுதும்
இத்தனை தேன் துளிகள்!

- ப்ரியன்.

நம்மை மறந்து
நாம் நின்றிருந்த
அம்முதல் சந்திப்பில்
மனம் கொத்திப் பறந்த
அப்பறவையின்
பெயர் என்னவாயிருக்கும்!

- ப்ரியன்.

மழைநாளில்
நனைந்து நீ நடந்தாய்!
இத்துணைநாள்
காளான் முளைத்த
தரையெங்கும்
தாழம்பூக்கள்!

- ப்ரியன்.

நீ மையணிவது
கண்ணழகிற்கு மட்டுமல்ல!
என் பேனாவிற்கும்
சேர்த்துத்தான்!

- ப்ரியன்.

இமை படப்படக்கும்
வேகத்தில்
அவ்விமை தூரிகை கொண்டு
வரையப்படுகின்றன
உன் உயிரோவியம்
என் நெஞ்சம் முழுவதும்!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள் - 4

உன்னை ஒருமுறையாவது
தொட்டுப் பார்க்க முடியவில்லையே
என்ற சோகத்திலேயே
கருப்பாகிப் போனது
உன் நிழல்!

- ப்ரியன்.

ஒவ்வொரு முறை
நான் கோவில் செல்லும்போதும்
உந்தன் கூந்தல் உதிர்ப் பூவொன்றை
சூடக் கேட்டு
நச்சரிக்கிறான் கடவுள்!

- ப்ரியன்.

உன்னைப் பூவென
மயங்கி சுற்றித் திரியும்
வண்டுகளுக்கு சொல்லிவிட்டாயா
உன் இதழ் தேன்
நான் உண்ண மட்டுமென?

- ப்ரியன்.

கோவில் விட்டு
நீ வெளிவரும்போது
பூக்கடை கிழவி கத்துகிறாள்
அய்யோ!சிலை ஒண்ணு
கோவில்விட்டு போகுதுன்னு!

- ப்ரியன்.

உன்னைப் பற்றி
எழுத எழுதவே
அழகாகிறது என் தமிழ்!

- ப்ரியன்.

வெட்கத்தோடு என்னை தழுவுகிறாய்!
அதை கண்ட வெட்கத்தில்
வாசல்கண்ணை படாரென
சாத்துகிறது காற்று!

- ப்ரியன்.

தரையில் நீ பதித்திருந்த
தடத்தை கோலமென
சுற்றி புள்ளி வைக்கிறது
மழை!

- ப்ரியன்.

அழகுக்கு விளக்கம் கேட்ட
குழந்தைக்கு
உன்னைக் காட்டினேன்!
வெட்கத்தோது மாரில் முகம் புதைத்தாய்
அடடா!பேரழகு!

- ப்ரியன்.

ரோஜா பறிக்கையில்
உன் விரல் காயப்படுத்தியதற்காக
வெட்டப் போனேன்!
தொட்டுவிடும் ஆசையில்
குத்திவிட்டதாய்
அழுது தொலைத்தது செடி!

- ப்ரியன்.

நம் இருவர் புகைப்படமெடுத்து
கருப்பு வெள்ளை மையில்
வயதான நம்மை வரைந்திருந்தாய்
கவனித்தாயா?
எல்லாம் மாறியிருந்தது
நம் காதலை தவிர!

- ப்ரியன்.

கோபம் மறந்த
அக்கணத்தில் கண்மூடி
புன்னகைத்தாய்!
ஒரு பட்டாம்பூச்சியின்
சிறகசைப்போடு என்னை வந்து
கட்டிக் கொண்டது காதல்!

- ப்ரியன்.

நேரம் கிடைக்கையில்
கொஞ்சம் கற்றுக்கொடு
உன்னைப் போல்
சிணுங்க
உன் கொலுசுகளுக்கு!

- ப்ரியன்.

என்னை அதிகமாய்
கனவு காண செய்தவர்களுக்கு
என் தண்டனை

தமிழுக்கு - என் கவிதை

உனக்கு - என் காதல்!

- ப்ரியன்.

நீ கண்மேய்ந்த இடத்திலிருந்த
என் எழுத்துக்கள்
பிரசவமாயிருந்தன
கவிதைகளாய்!

- ப்ரியன்.

குழந்தைகளுடன் குழந்தையாய்
கப்பல் விட்டுக் கொண்டிருந்தாய்!
உன்னைத் தொட்டு அவ்வப்போது
சிலிர்த்துக் கொண்டது
மழை!

- ப்ரியன்.

தலைகுளித்து வெளிவந்தாய்
தொலைவானத்து நட்சத்திரங்களாய்
கூந்தல் ஏறி அமர்ந்திருந்தன
நீர் துளிகள்!

- ப்ரியன்.

நீ கண்மூடிச்
சொல்லும்
"அர்சுனா ! அர்சுனா !"
அழகிற்காகவே
அடிக்கடி சாட்டைச் சுழற்றுகிறானாம்
கிருஷ்ணன்!

- ப்ரியன்.

மரணம்

சிதைக்கு நெருப்பூட்டும் போதே
இறந்தவனை பற்றிய நினைவுகள்
எரியூட்டப் படுகின்றன!

அடுத்தநாள் சேதி கேட்டு
சோகமாய் வந்தமரும்
நல்ல ஒரு சொந்ததிற்கு
கிடைக்கிறது
மலர் முகத்தோடு வரவேற்ப்பும்
நாளிதழும்;
சோகம் துடைக்கும்
முகமாய்!

அமெரிக்காவிலிருக்கும்
பையனோ பெண்ணோ
அவசர அவசரமாய்
அஸ்திக் கரைப்புக்கு
வந்து சேர்கிறார்கள்!

அடுத்த வருட திவசம்
காக்கைக்கு ஒரு பிடி சோறோடு நிற்குமா?
நாளிதழில் ஒரு பக்கக் கண்ணீரஞ்சலியா?
என்பதை நிர்ணயிக்கும்
அவன் விட்டுச் சென்ற
ஆஸ்தி!

மரணமும்
சடங்காகிப் போனது!
சடங்கும் இங்கு
விழாவாகிப் போனது!

- ப்ரியன்.

வாடகை வீடு

ஆணி அடித்த ஒரு சந்தர்ப்பத்தில்
சொல்லால் அறைந்து
அவ்வாணியிலேயே
தொங்க விட்டுச்செல்கிறாய்
என்னை!

கொஞ்சம்
வேகமாக பாதம் பதித்தால்
விரிசல் காண்பதாய்
வாதம் செய்ய ஓடோடி
வருகிறாய்!

உன் செல்ல பிள்ளை
பிசாசுகளின்
காட்டுக் கத்தலில்
கழிக்கப்படுகின்றன
என் அமைதி!

மொட்டை மாடிக்கான
வழியைக் கூட
உன் வீட்டுக்குள்தான்
ஒளித்து வைத்திருக்கிறாய்!

யோசித்துப் பார்த்தால்,
வாடகை மட்டுமல்ல
என் சுதந்திரத்தின்
பெரும் பகுதியை
அடகு வைத்துத்தான்
குடிப்புகுந்திருக்கிறேன்!
எலி வங்குக்கு ஒப்பான
உன் வீட்டில்!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள் - 3

கொஞ்சம்
என்னைத் தனிமையில்
செல்ல விடு நிலவே
எனக்காக அவன்
கரையில்
காத்திருப்பான்!

- ப்ரியன்.

ரோசா மொழி
அறிவாயா நீ?
அறிந்தால்
ஒரு நாள் கவனித்துப் பார்
உன் கூந்தல் தங்கும்
ரோசாவின்
கர்வ பேச்சுக்களை!

- ப்ரியன்.

அவன் என் வீட்டு
கதவு தட்டினான்!
ஆசையாய் ஓடித் திறந்தேன்!
கண்வழி உயிர் புகுந்தது
சூரிய கதிர்!
அடச்சே!

- ப்ரியன்.

கண்மூடி நடக்கிறேன்
விழித்தால்
அவன் வந்த
கனவு கலையுமென!

- ப்ரியன்.

அதோ!
தட்டுகிறான்!
மேலேற்ற முயற்சிக்கிறான்!
ஊசி வைத்து குத்தவும்
தயாராகிவிட்டான்!
என்ன செய்தாலும்
இமை திறந்து
விடுதலை அறிவிப்பதாய் இல்லை!
கனவில் புகுந்து தூக்கம் தின்ற
அவனை!

- ப்ரியன்.

டேய் குண்டாய்ட்டே!
உன் நண்பர்களின்
கிண்டல் மொழி
பின் தின்பதெல்லாம்
என் உயிரல்லவா?

- ப்ரியன்.

நீ கோலம் போடுவதை
தூரமிருந்து ரசித்தவன்
முடித்தாய் என வெளியே வந்தேன்
எழுந்து ஓடிப் போனாய்!
பாவம் அந்த
கடைசிப் புள்ளி
என்ன பாவம் செய்தது?

- ப்ரியன்.

என்னைக் கண்டால்
விலகும் மாராப்பைத்
திட்டித்தீர்க்கிறாய்!
திட்டவேண்டியது மாராப்பையல்ல
என்னைக் கண்டால் விம்மும்
உன் மார்பைத் தான்!

- ப்ரியன்.

காய்ந்த துணிகளை
எடுக்க வந்தாய்
எல்லாத் துணிகளும்
ஓடிவந்து உன் தோள் ஏறின!
அழகு பவனி!

- ப்ரியன்.

உன் அப்பாவிற்கு
சலூனில் பேப்பர்
தேடி எடுத்துத் தந்தேன்!
அம்மாவிற்காக காய்கறிகாரனிடம்
சண்டைப் போட்டேன்!
தம்பியை கிரிக்கெட்
அணி தலைவனாக்கினேன்!
காரணத்தை அவர்கள்
அறியுமுன்!
நீ யோசித்து தெரிந்து கொள்!

- ப்ரியன்.

முதலில் பேச ஆரம்பித்தது
அந்த கடிகாரம் தான்!
அப்புறம்!
புத்தகம்
தலையணை
பேனா
நீ என்னறை வந்து போனதும்
எல்லாமே பேச ஆரம்பித்து விட்டன!
கூச்சல் தாளவில்லை எனக்கு!
கொஞ்சம் வந்து
அதட்டிவிட்டுப் போனால் சுகம்!

- ப்ரியன்.

என் குறிப்பேடு படித்து
ஆ! கவிதை என்றாய்!
பேனா கத்தியது!
"அவள் பேச்சு - ஆஹா கவிதை!
நீயும்தான் எழுதுறியே
சகிக்கலே!"

- ப்ரியன்.

வாசித்து கவிதை
என்றாய்!
காண்பாயோ!
அது என் உயிரில்
விழுந்த உன்
கண் விதை!

- ப்ரியன்.

உன்னைக் காணாத
நாட்களும் சாதாரணமாகவே
கழிகின்றன!
ஆனால்,
கடிகார முட்கள்
மட்டும் ஒடிக்கப்படுகின்றன!

- ப்ரியன்.

கடல்நீரை குடிநீராக்க
என்னென்னவோ செய்கிறது
அரசாங்கம்!
வா,உன் பங்குக்கு
கால் நனைத்துவிட்டுப் போ
அலையில்!

- ப்ரியன்.

சிக்கிமுக்கி கல்
உரசினால் தீ!
கண்ணும் கண்ணும் உரசினால்
காதல்!

- ப்ரியன்.

கோவில்,
எனை கண்டதும்
தலை குனிந்து
வெட்கத்துடன்
ஓடிப் போனாய்!
முறைத்துத் தொலைக்கிறான்
கடவுள்!

- ப்ரியன்.

வளையல்களை
உடைத்தெறிய வேணும்!
புரண்டும் படுக்கும்போது
எழும் ஒலியில்
உசாராகி ஓடி ஒளிகிறான்!

- ப்ரியன்.

அந்த சபையில்
ஆரபாட்டமாய் ஆரம்பிக்கிறான்
பேச்சை
எந்தன் இதயம்!
முன் வரிசையில்
உந்தன் இதயம்
வந்தமர
பேச்சு முட்டி நிற்கிறான் அவனே!

- ப்ரியன்.

என்னைப் பெருமைக்
கிடைத்துவிடக் கூடும்
என் கவிதைகளுக்கு
உன் பாதங்களுக்கு ஒரு
பூப்பாதை
ஆவதைவிட!

- ப்ரியன்.

உந்தன் கூந்தல்
உதிர் பூவொன்றை
டைரியில் சேகரித்தேன்!
பல நாள் கழித்து
இன்று திறந்துப் பார்த்தேன்
உன் வாசம்
என் வாசம்
அதன் வாசம் கொஞ்சம்
கலந்து அருமையான
கவிதை ஒன்று
எழுதிப்பார்த்திருந்தது அது!

- ப்ரியன்.

எல்லா காதலர்களும்
கவிஞர்கல்ல!
ஆனால்,
எல்லா கவிஞர்களும்
காதலர்கள்!

- ப்ரியன்.

நீ
வாராததால் ஏமாந்து
அழும் காதலை
கொஞ்சம் தொட்டிலில்
இட்டு ஆட்டிவிட்டுப் போ!

- ப்ரியன்.

உன் வீட்டுன் வாசலில்
தொடங்கும்
என் உயிருக்கான
வாசல்!

- ப்ரியன்.

என்னச் சொல்லி
தேற்றுவது
நீ வராததால்
ஏமாந்து அழும்
என் காதலை!

- ப்ரியன்.

என்னைக் காதலிப்பதால்
உனக்கு என்ன மிச்சம்
என என்னை கேள்வி கேட்பவளே!
காதலே மிச்சம்தானே அடி
எனக்கு!

- ப்ரியன்.

காதலி!

இல்லையென்றால்,
உந்தன் உயிரும்
எந்தன் உயிரும்
எவ்விடத்தில்
முடிச்சிடப்பட்டிருக்கிறதென
பார்த்து பிரி!

- ப்ரியன்.

என் இதயத்தையும்
உன் இதயத்தையும்
விளையாடவிட்டு
அமர்ந்து
வேடிக்கைப் பார்க்கிறாள்
அம்மா காதல்!

- ப்ரியன்.

வாராதே என்கிறாய்
தள்ளிப் போ என்கிறாய்
நீ எவ்வளவுதான்
உன்னை விட்டு என்னை விலகச் சொன்னாலும்
உன்னையே கட்டிக் கொண்டு அழுகிறது
பாழாய்ப் போன
என் காதல் மனசு!

- ப்ரியன்.

தூக்கிப் போடு!
உதைத்துப் பார்!
உனக்கான பந்துதான்
என் இதயம்!
ஆனால்,
கொஞ்சம் மெதுவாக
அது ஒன்றும்
பூப்பந்து அல்ல
கண்ணாடிப் பந்து!

- ப்ரியன்.

வா காதலிக்கக் கற்றுத் தருகிறேன்

வா,
அந்தப் புல்லின்
தவம் கலையா வண்ணம்
மெதுவாக வந்து
அருகில் அமர்!

எதுவும் பேசாதே!
சின்ன முணுமுணுப்புக் கூட
வேண்டாம்!
மெளனம் தாய்மொழியாக்கு!

அலையென துள்ளிவரும்
எண்ண அலைகளை
அள்ளி
தூரப் போடு!

வா,
கொஞ்சம் நெருங்கி வா
மூச்சோடு மூச்சு முட்டி
இருவர் இருதயமும்
தகிக்கும் வரை
நெருங்கி வா!

உன் பெயர் மற!
என் பெயர் மறக்கடி!

மெலிதாய் சிரி!

நீ ஆண்
நான் பெண்
என்பது
துடைத்துப் போடு!

எக்காலம்
இக்காலம்
கேள்வி தொலை!

பார்
பார்
பார்த்துக் கொண்டே
இரு!

உன் இரு விழியில்
உயிர் கசிந்து ஒழுகி
என்னுயிரில் கலந்து
போகும் வரை
பார்த்துக் கொண்டே
இரு!

பசிக்காவிட்டாலும்
கண்களால்
கண்கள் பார்த்து
என் உயிர் புசி!
உன்னை
புசிக்க எனக்கு
கற்றுக் கொடு!

பொறு,
நீயும் நானும்
தின்றுத் தின்று
தீரும் கணம்
மரித்து
சொர்க்கம் போவோம்!

அங்கேயும்,
இப்படியே
காதல் தொடர்வோம்!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள் - 2

கொஞ்சம் சீக்கிரம்
வா!
சொர்க்கக் கடலில்
படகு வலிக்க
பெரிய துடுப்புடன்
காத்திருக்கிறான்
காதல் கடவுள்!

- ப்ரியன்.

என் கூந்தலின் நீளம்
உன் விரல்கள்
உள் புகுந்து
அளக்க;
அறிகிறேன் நான்!

- ப்ரியன்.

காதலியின்
கொலுசு சிணுங்களிலும்
கண்ணாடி வளையல்களின்
உடைபடும் சப்தங்களிலும்
நெஞ்சு முட்டும்
வெப்ப மூச்சிலும்
மெதுவாக நெய்யப்படுகிறது
இரவு!

- ப்ரியன்.

வருவாய் என
எண்ணினேன்!
வரவில்லை நீ!
வரமாட்டேன் என
நினைக்கிறேன்!
கண்டிப்பாக வருவாய் தானே!

- ப்ரியன்.

அவளுக்காக ஒரு
செடி நட்டு வளர்த்து வந்தேன்!
பூத்ததும்
பூ கிள்ளி தலையில் சூடி
செடியை தனியே
தவிக்கவிட்டுப் போகிறாள்!

- ப்ரியன்.

அவன் வருவதாய் சொல்லி
வராத நாட்களில்
அழுது அழுது
வெளிறி நீலம்
கரைகிறது வானம்!

- ப்ரியன்.

உன் கண்களின்
ஆழத்தின் தொலைந்த
என்னை!
அதன் இமை மேடுகளில்
தேடிக் கொண்டிருக்கிறேன்!

- ப்ரியன்.

காலை எழுந்து
சோம்பல் முறித்து
கூந்தலில் கட்டி முடிக்கிறாய்!
நம்முடன் விழித்தே
பயணித்த இரவையும்!
கூந்தலில் சிக்கி தொலைந்த
என்னையும்!

- ப்ரியன்.

நான் அமர்ந்திருந்த
மரத்தின்
கார்கால தளிர்கள்
பழுப்பாகி உதிர்கின்றன
இன்னுமா வரவில்லை
நீ!

- ப்ரியன்.

பழைய என் பாலிய
கதைகளில்
ஏழுகடல் ஏழுமலை தாண்டி
பாதுகாக்கப்படும் உயிர்!
என்னுடையதை எங்கே
ஒளித்துவைத்திருக்கிறாய்!

- ப்ரியன்.

காற்றை வெட்டி
ரணமாக்குகின்றன
கூரான மூங்கில் இலைகள்!
என் மனதை
உன் நினைவுகள்!

- ப்ரியன்.

சந்திரகிரகணத்து அன்று
மட்டுமல்ல!
ஒவ்வொரு முறை
இரவில் நீ
வெளி வரும்போதெல்லாம்
விழுங்கப்படுகிறது
நிலவு!

- ப்ரியன்.

கடற்கரையில் காத்திருந்தேன்
வாராத உனக்காக
விட்ட பெருமூச்சில்
ஆவியாகிப் போனது
கடல்!

- ப்ரியன்.

நீ வர நேரமாகும்
நாட்களில் தெரிகிறது!
மரம் விட்டு
மடி விழும்
இலைகளின் நேசம்!

- ப்ரியன்.

உன் மடியில்
குழந்தையாக தவழ ஆசை
இன்று உள்புகுத்தி
நாளைப் பிள்ளையாய்ப்
பெற்றுக் கொள்ளேன்
என்னை!

- ப்ரியன்.

இரவில்
நீ மொட்டைமாடியிலிருந்து
எட்டிப் பார்த்தால்தான்
மொட்டு வெடிப்பேன் என
அடம் பிடிக்கிறது
என் வீட்டு மல்லிகை!

- ப்ரியன்.

எல்லா நதிகளும்
மலைக்கிடையில் தொடங்குகின்றன!
என் உயிர் நதி மட்டும்
ஏனோ,
உன் மார்புக்கிடையில்
தொடங்குகிறது!

- ப்ரியன்.

நேரமாகி அவன் வந்ததும்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிப் போகின்றன
அதுவரை துணையாயிருந்த
கண்ணீர் துளிகள்!

- ப்ரியன்.

நகரத்து ஆசாமி

பக்கத்துவீட்டு பாட்டியின்
சாவிற்கு மெதுவாக
அழச்சொல்லி கத்திவிட்டு
தற்காலிகமாக மரணமடைய
தாராளமாய்
கட்டில்பாடையில்
சரிகிறான்
நகரத்து ஆசாமி!

- ப்ரியன்.

நிழல்

அந்தியில் என்னுடன்
சேர்ந்து சாய்ந்து அமர்ந்த
நிழல்
இரவில் கிளம்பி
வர மறுக்கிறது
மரத்தைவிட்டு!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள்

இலையுதிர்கால இலைகளாய்
மனத்தரையெங்கும்
விரிந்து கிடக்கின்றன
உன் நினைவுகள்!

- ப்ரியன்.

இலைகள் உதிர்த்து
போர்வை ஒன்றை
பூமிக்கு போர்த்திருக்கின்றன
இலையுதிர்கால மரங்கள்!
வா,
கைகோர்த்து;
இலைகளின்
மனம் சாந்தியடைய
ஒரு சரக்சரக்
நடை பயிலலாம்!

- ப்ரியன்.

அவளுக்கான காத்திருப்பில்
இலையுதிர்க்கும் மரமொன்றைத்
திட்டித்தீர்ப்பேன்!
மண்முத்தமிடும் இலையின்
இரைச்சலில்
அவள் கொலுசு
நாதம் கெடுமென!

- ப்ரியன்.

நீ வர நேரமாகும்
நாட்களில்
என் மடி தங்கி
என்னைக் கொஞ்சிக்
கொண்டிருக்கும்
என்னால் உன் பெயர்
சூட்டப்பட்ட
இலை ஒன்று.

- ப்ரியன்.

நேரமானதற்காக
கோபித்துக் கொள்கிறாய்!
அக்கணத்தில்
மறந்தும் போகிறாய்
நீ சாய்ந்திருந்த
மரத்தின் தண்டாய்
நான் உன்னை
தாங்கியிருந்தை!

- ப்ரியன்.

என் வீட்டில் ஒரு புத்தம் புது
பூ பூக்கிறது!
நீயே வந்து
பறித்துக் கொண்டால்
நீ நண்பி!
நான் பறித்துத்
தரும்வரை காத்திருந்தால்
நீ காதலி!

- ப்ரியன்.

காதல் நினைவுகள்

என் இதயம் தோண்டி
அகழ்வாராய்ச்சி ஒன்று
நிகழ்த்தப்பட்டது!

வெட்டிய பகுதியெங்கும்
அறைகள்!

அறைகள் கொள்ளாமல்
முழுவதும்
முதுமக்கள் தாழிகள்!

மெல்ல நகர்ந்து
தைரியம் கொண்டு
ஒரு முதுமக்கள் தாழி
திறக்கின்றேன்!

பட்சிகளாய்
தலையைச் சுற்றிப்
பறக்கத் தொடங்குகின்றன
இதுவரை
முதுமக்கள் தாழி - உள்
உறங்கிய உன்
நினைவுகள்!

- ப்ரியன்.

கல் தேடும் மனிதன்

நாயைக் கண்டால்
கல் தேடும் மனிதன்!
இவனைக் கண்டால்
யார் கல்
தேடுவது?

- ப்ரியன்.

உயிர்ச் சிதறல்

உன்னுடனான
முதல் சந்திப்பில்
ரோசாவின்
இதழ் இதழாய்
சிதறிய என்னை;
என் உயிரை!

வெகுநாள் செலவில்
பொறுக்கிப் பொறுக்கி
சேர்த்து
ஒட்டிக் கொண்டிருந்தேன்!

எதிப்பாரா திசையிலிருந்து
வரும் புயல் போல்
எட்டிப் பார்த்து
புன்முறுவல் சிந்தி
ஒரு வினாடியில்
மீண்டும்
சிதறடித்துச் செல்கிறாய்!

மீண்டும் உயிர் இதழ்
தேடி சேர்க்கவோ;
சிதறவோ என்னால்
இயலாது!

சிதறடித்தலுடன்
சேர்த்தலையும்
இனி,
நீயே கவனித்துக் கொள்!

- ப்ரியன்.

நிலா

வானத்து வெண்ணொளியில்
மொட்டைமாடி குளித்திருக்க!
வெண்ணொளி தரு நிலாவின்
தண்மையில் பூமி குளிர்ந்திருக்க!

மொட்டை மாடியில்
வேகமெடுத்து கிளம்பியது
அரட்டை!
பக்கத்துவீட்டு பத்மாவை
பார்த்து சிரித்து!
ஊர் தேசம் எல்லாம் சுற்றி
வானில்,நிலாவில்
முட்டி நின்றது அது!

மேடும் பள்ளமும் நிறைந்த
காற்றும் உயிருமில்லா
பெரிய உருண்டை கல்
என்று பகன்றான் ஒருவன்!
கூடுதல் தகவலாய்
பசிபிக் பெருங்கடலில் இருந்து
பிய்த்தெரியப் பட்ட பூமியின்
பகுதியென்றான் அவனே!

வானமகள் தினம் தினம்
அவளே அழித்து
அவளே விதவிதமாய்
இட்டுக் கொள்ளும்
வெள்ளைப் பொட்டென்றான் ஒருவன்!
நல்ல கற்பனைதான்!

பாட்டி வடை சுட்ட கதையும்
முயலின் தியாக கதையையும்
கலந்து சொல்லிக்
குழப்பிக் கொண்டு போனான்
மிஞ்சியவன்!

என் முறை வந்தது
"நிலா" அதுவென்றேன்!
அதுவை அதுவாகவே பார்த்தல்
அழகென்றேன்!
ஒருமாதிரிப் பார்த்து
உறங்கப் போனார்கள்!
இருட்டில் எவனோ
என்னைப் பற்றி முணுமுணுத்தான்
குருட்டு கண்காரன் என்றான்!

உறக்கம் கண்ணில் ஒட்டாமல்
கைப்பிடிச் சுவர் பற்றி
சாலையைப் பார்த்திருந்தேன்!
நேற்றைய மழையில்
தேங்கிய நீரில் ஒற்றையிலை
உதிர்ந்து விழ!
நீரில் தங்கிய நிலா
மெல்ல தளும்பியது!

தன்னைத் நிலாவாகப்
பார்த்தமைக்கு
நன்றிச் சொல்லி
விழி
தளுதளுத்ததாய் தெரிந்தது
என் "குருட்டுக் கண்களுக்கு"!

- ப்ரியன்.

எறும்பு

வரிசை தப்பிய எறும்பு ஒன்று
என்னருகே ஊர்ந்து வந்தது!
அச்சின்ன உடல் பெரிதாக
ஆட ஆட என் மேலேறுகிறது
அவ்வெறும்பு!

நகர்ந்தால் நசுங்கிவிடுமென
சுட்டுவிரலில் எட்டி எடுக்கிறேன்!
பிரயோகித்த சின்ன வேகத்தில்
பற்றிய ஒற்றை தானியம் தொலைக்கிறது
அவ்வெறும்பு!

தொலைத்த தானியம் தேடும்
அதனை கைக்குள் மூடி
தானியம் தேடி எடுத்து அருகில்
கொண்டுச் செல்லும் நேரம் கவனிக்கிறேன்
மூடிவைத்த கஷ்டத்திலோ,
தானிய நஷ்டத்திலோ
கடிக்கத் தயாராகிறது
அவ்வெறும்பு!

பாட்டி சொன்ன
கடித்த எறும்பு மரித்துப் போகும்!
தகவல் மனதில் முந்தி நிற்க
எறும்பை தரையில்விட்டு
தானியம் அருகில் வைத்தேன்
அவ்விடமே நின்று சுற்றிச் சுற்றி வந்த
அவ்வெறும்பு தானியத்தை
நான்கு முறைச் சுற்றி
பின் பக்கம் வந்து
சுமந்து நகர்ந்தது!
என்னைக் கடித்தலை மறந்து!

கண்டிப்பாக
நான் - மனிதன்
அவ்வெறும்பாக
இருந்திருந்தால்
தானியம் விட்டு
கடித்துதான் நகர்ந்திருப்பேன்!

- ப்ரியன்.

ஆசிரியன்

அன்னைக்கும் அப்பனுக்கும்
அடுத்து வைத்து!
தெய்வத்திற்கு முன்னே
வைத்தது உலகம்
உன்னை! - அய்யனே
என்னுயிரில் முன்னே
வைத்தேன் உன்னை!

அன்னை சுட்டினாள்
உயிர்வித்தளித்த அப்பனை!
அய்யனே! - நீ சுட்டினாய்
உணர்வளர்க்கும் அறிவை
என் தமிழை!

தாய்க்கு மகன்
தந்தைக்கு மகள்
செல்லம்!
குருவே உனக்கு
இருபாலருமே
வெல்லம்!
கட்டி வெல்லம்!

தாய்க்கு தந்தைக்கு
உற்றார் உறவினர்க்கு
என்னிடத்தில் உண்டு எண்ணிலடங்கா
எதிர்ப்பார்ப்புகள்!
உன்னிலும் உண்டு
என்னிடத்திலான எதிர்ப்பார்ப்புகள்
என்றாலும் அவை நீ
காணும் என் எதிர்காலங்கள்!

உன் சூரியஅறிவில்
கடன் வாங்கி
சுற்றித் திரியும்
சின்னச் சின்ன
மின்மினிகள் நாங்கள்!

ஆசிரியனாய் இருந்து
முதல்குடிமகனாய் உயர்ந்தவனின்
பிறந்தநாளில் கண்டார்கள் - உனக்கு
ஆசிரியர்தினம் என்று ஒன்று!
அறியாப்பிள்ளை உரக்கச் சொல்வேன்
பாரதத்தில் மட்டும்தான்
இதுவென்று!

அரவணைத்து அன்னையானாய்!
நல்வழி புகுத்தி அப்பனானாய்!
ஆலயத்திற்கு ஒப்பான - பள்ளியில் அமர்ந்து
தெய்வமானாய்!
மூன்றும் சேர்ந்ததால் நீ
குருவானாய்!

அருவாய் திரிந்தவரை - நல்
அறிவால் சமுகம் காக்கும்
எருவாய் மாற்றும்
குருவே வாழ்த்த வந்தேன்!
சிறுவன் இச்சிறுவன்
உருகி நின்றேன் - நின்
பெருமை கண்டு
உருகி நின்றேன்!

முதல் வகுப்பில் நீ
சொல்லித்தந்த பாடம் தான்!
மீண்டுமொருமுறை
அதே கூட்டுக் குரலில்
வணக்க்க்க்ம் அய்ய்ய்ய்யா!

- ப்ரியன்.

புரியா உலகம்

எவனோ ஒருவன்
தினம் தினம்
ஒரு கதவு தட்டி
இராப்பிச்சைக்
கேட்கிறான் என
எல்லோரும்
பேசிக் கொண்டார்கள்!

நேற்று பக்கத்து வீட்டு
பக்தவசலம் வீடாம்!

அப்படி என்றால்
இன்று என் வீடு!

தட்டிக் கேட்டுதான்
நீ பெறவேண்டுமா?
உனக்கு வேண்டியதை
நீயே எடுத்துக் கொள்!

வாசல் கதவு திறந்து
வைத்து தூங்கி போனேன்!

எவனும் வந்து
போனதுக்கான
சுவடு காணோம்
காலை!

மெல்ல சோம்பல் முறித்தபடி
வெளியே வந்தேன்!

என்னை கைக்காட்டிப் பேசிக்
கொண்டிருந்தார்கள்!

கஞ்சன்,
இவன் வீட்டு
கதவு தட்டி சிரமபடுத்துவானென்று
திறந்து வைத்து தூங்கியதால்
அடுத்த வீட்டு கதவு தட்டினானாம்
இராப்பிச்சை நேற்றைய
இரவு!

எனக்கு இன்னமும்
உலகம் விளங்கவில்லை!
அவர்களுக்கும்
என்னை!

- ப்ரியன்.

அன்புடன் - கவியரங்க கவிதை

அன்புடன் குழுமத்தில் கவியரங்கத்திற்காக படைத்த கவிதை இது

<அன்புடன் குழுமம்> -> http://groups.google.co.in/group/anbudan

என்னை உலகிற்கும்
உலகத்திற்கு என்னையும்
அறிமுகம் செய்த
அன்னைக்கு முதல் வணக்கம்!

தமையனாய் சில நேரம்
வயதொத்த தோழனாய் சில நேரம்
நல்லாசிரியனாய் சில நேரம்
பாசமிகு தந்தையாய் சில நேரம்
தரமான மனிதனாய்
வார்த்த எந்தைக்கு அடுத்த வணக்கம்!

தோளோடு தோள் நின்று
தோழமையாய் என்னை
ஆளாக்கிய என்
ஆசான்களுக்கு அடுத்த வணக்கம்!

தாய்ப் பாலோடு
உனைப் பருகவில்லை!
தத்தித் தத்தி நடக்கையில்
துணைக்கு உனைப்
பற்றிக் கொள்ளவில்லை!
பத்து வயதில்கூட
தடவித் தடவித்தான் படித்தேன்
தமிழே உனை
தடவித் தடவித்தான் படித்தேன்!
தாராளமான உன்மடியில்
தஞ்சம் தந்து - எனைத்
தத்தெடுத்துக் கொண்ட
பெருமைமிகு
என் தமிழே
உனக்கு "பெரு"வணக்கம்!

உன்னில் நான் அடக்கம்!
என்னில் நீ அடக்கம்!
காதலியிடம் பேசும் வசனமில்லை!
அய்யனே பொய்மை
கொஞ்சமும் இல்லா மெய்யனே
என் அப்பனே!
பாரத கதையெழுத தந்தம்
உடைத்த கவி
பித்தனே!
முழு முதல் முதல்வனே!
பழத்திற்கு முந்தியவனே!
விக்கனம் விலக்கி
"விக்னேஷ்" என பெயர் கொண்ட
விநாயகனே!
என் குண்டனே!
உனக்கும்
எனக்கும் சேர்த்தொரு
வணக்கம்!

அறியா பிள்ளைக்கு
ஆறுதல் கரம் தந்து
தமிழ் கடலில் நீந்த
கற்றுத் தந்து கொண்டிருக்கும்
மின் தமிழ்ச் சங்கமே!
என்னை அன்புடன்
அரவணைத்துக் கொண்ட
"அன்புடன்" குடும்பமே
உனக்கொரு வணக்கம்!

தலைமைக்கு பெருமை சேர்க்கும்
இரவா விற்கு
தனி வணக்கம்!

முன்னிலை வகிக்கும்
வேந்தனுக்கு
ஒரு வணக்கம்!

கவிமழைப் பொழிகவிஞர்களுக்கு
சிறப்பு வணக்கம்!

பார்வையாளர்களாய் அமர்ந்து
சீர் தூக்கி
கவிதைகளில் ஏர் ஓட்டி
கவியரங்கத்தை சிறப்பிக்கும்
உள்ளங்களுக்கு
உவகை வணக்கம்!

வாராத மழை
வெளி சிந்த!
தமிழ் எழுது
எழுது என உந்த!
இதோ "வண்ணங்களில் என் எண்ணங்கள்"
வானுடைந்து மண்
விழுந்த சில
வானவில் சில்லுகள்!

வண்ணங்களில் என் எண்ணங்கள்
********************
- ப்ரியன்.

நீலம் ஒரு போலி
**********

நாம்
வான் நீலம் கண்டு வாழ்த்துவது இல்லை
கடல் நீலம் கண்டு களிப்பெய்துவதில்லை
கண்ணன் கருநீலம் கண்டு கும்பிடப்புகுவதில்லை
கண்கள் நீலம் கண்டு கவிப்பாடித் துதிக்கின்றோம்!
காதலியின்
கண்கள் நீலம் கண்டு கவிப்பாடித் துதிக்கின்றோம்!
எல்லோரும் அறிவதில்லை
அக்கண்களில் உள்ள
விஷத்தின் வண்ணமும் நீலமென்று
நம் மனதைக் கைது செய்யும் நீலத்தில்
‘விஷயம்’ இருக்கின்றது
விஷமும் இருக்கின்றது.
நீலம் ஒரு போலி
நீலம் வெறும் நிழல்
காரணத்தைக் கேளுங்கள்
சொட்டு நீலம் சேர்ப்பது
துணிகளின் ‘தூய வெண்மைக்கு’
நீலத்தின் வேஷம்
வெயிலில் வெளுத்துப் போய்விடுகிகிறது!
ஆம்!
நீலம் ஒரு போலி
நீலம் வெறும் நிழல்!


செங்குருதி அழகா?
***********

குங்குமச் சிவப்பழகு
செம்பருத்திப் பூவழகு
செம்மண் நிலமழகு
செந்தாமரை அழகு
செங்கதிரோன் அழகு
செவ்விதழ் அழகு
அவள் செவ்விதழ் தானுமொரு அழகு
செங்குருவி தனி அழகு
செங்குருதி அழகென்று
கருதுவோர் யாருமுண்டோ?
நம் தமையர்
ஈழத்தமிழர்
செங்குருதி அழகென்று
கருதுவோர் யாருமுண்டோ?
தமிழ்த் தாயின் குருதி கண்டு
வெறுக்கின்றேன் சிவப்பை - நீங்கள்
அறிவீர்கள் என் தவிப்பை!
வன்முறைக் கலாச்சாரம்
நிலவும் நாட்டில்
சிவப்புநிறம்,சீவ நதியாய் ஓடும்!
சில சிவப்பில் தியாகம் தென்படலாம்
அதன்பின் தீமையும் இருக்கின்றதே!


மஞ்சள் மெல்லிய சோகம்
****************

மஞ்சளை விரும்பாத மனிதருண்டோ?
மங்கலம் விரும்பாத பெண்மையுண்டோ?

கழுத்தில் மஞ்சள்
மங்கலத்தின் அடையாளம்
கண்களின் மஞ்சள்
காமாலையின் அடையாளம்
காமாலைக் கண்களுக்குக்
காண்பதெல்லாம் மஞ்சள்
குற்ற நெஞ்சங்களுக்கு
காண்பதெல்லாம் குற்றம்
மஞ்சள்,
மெல்லியதொரு சோகம்
மஞ்சள் வண்ணத்தில் நிறமில்லை
மஞ்சள் வண்ணத்தில் கனமான நிறமில்லை
நிறமிருந்தால் திடமில்லை
திடமிருந்தால் சுவையில்லை

சுவைத்து ரசிக்க உதவா மஞ்சள்
இந்த அவைக்கெதற்கு?

மஞ்சள் மெல்லியதொரு சோகம்
சோகம் நமக்கு வேண்டாம்
வேண்டுவதெல்லாம் சுக உற்சாகம்!


இருட்டோ இருட்டு
***********

இருட்டின் நிறம் கருப்பு
கருப்பின் துணை இருட்டு
கருப்பிருட்டுக் கருவறையில்
குடியிருந்த காரணத்தால் என்னவோ
மனித மனங்களெல்லாம் ஒரே கருப்பு
பிறர் மீது
கருப்பைப் பூசிவிடத் துடிப்பு
கண்ணுக்கு கரும்’மை’ அழகுதான்
ஒவ்வாமை ஆகாத வரையில்
கருமை ஒரு வெறுமை
கருமை ஒளி பிறக்க ஓடிவிடும்
இவ்வளவு ஏன்?
கருமைக்கு வயது ஏற ஏற
நரை ஏறும்
கருப்பின் முன்னே
வண்ணங்கள் பல வந்தாலும்
வலுவிழந்து போய்விடும்
வானவில்லே வந்தாலும்
பொலிவிழந்து போய்விடும்
இருட்டு மட்டும் இங்கே வந்தால்
இதுவே எங்கோ போய்விடும்
இருட்டு மட்டும் இங்கே வந்தால்
இக்கருப்பே எங்கோ போய்விடும்
இக்கருப்பு
தன் பொருட்டு பிறரை அழிக்கும்
பாங்கை எப்படிப் பெற்றது?
மனிதனோடு சேர்ந்த வகையில்
மாசு இதைப் பெற்றது!

கருப்பு
குற்றத்தின் குரல்
மன அழுக்கின் மறுபிறவி
எதிர்ப்பின் அடையாளம்
துக்கத்தின் துணைவன்
பயத்தின் பரிணாமம்.


ப’சுமை’
*****

பசுமை கண்களுக்குக் குளுமை
வறட்சி கண்களுக்குச் சுமை
பசுமைப் புரட்சி பற்றிப் பேசுகின்றோம்
பாயும் காவேரி வந்து சேர்ந்ததா?
தூரத்துப் பச்சை கண்களுக்குக் தண்மை
என்பார்கள்.
கர்நாடகப் பச்சை நம் கண்களுக்கு ஒவ்வாமை
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள்
உண்மைதான்
காவிரிக்கு அக்கரையில் பச்சைதான்
பச்சைப் பயிர்கள் வாடி வதங்கி
பாவ உயிர்களாய் நசுங்கி
பரிதவிக்கும் நிலை - இங்கு
பச்சைத் தண்ணீர்க்கே விலை!
இங்குள்ள தாவரங்களில்
குளோரோபில்கள் குறைந்துவிட்டன
சாந்தோபில்கள் நிறைந்துவிட்டன

பச்சை குத்தும் அரசியல்வாதிகள்
பச்சைத் துரோகிகள்
நம் சுட்டுவிரலில்,
பச்சை குத்தும் அரசியல்வாதிகள்
பச்சைத் துரோகிகள்
பச்சை ரத்தம் குடிக்கத் துடிக்கும்
மக்கள் விரோதிகள்
அவர்கள்,
பச்சை ரத்தம் குடிக்கத் துடிக்கும்
மக்கள் விரோதிகள்
பச்சைமரம் வெட்டும் கயவர்
மழை குறைக்கும் கூட்டம்
பச்சைமரம் வெட்டி
மேக கர்ப்பத்தைக் கலைக்கும் கயவர்
மழை குறைத்துப் பசியால்
உயிர்தின்னும் கூட்டம்
பச்சை வசனம் பேசும் நடிகர்
குழிபறிக்கும் கூட்டம்.
பச்சை பச்சையாய்
வசனம் பேசும் நடிகர்
இளைஞர்களுக்கு
குழிபறிக்கும் கூட்டம்.


வெண்மைதான் வண்ணம்
***************

தூய உள்ளங்களே
நீங்கள் வாழ்க
சத்திய மொழிகளே
நீங்கள் வெல்க
எளிய மனங்களே
நீங்கள் வாழ்க
ஒளி பொருந்திய விழிகளே
நீங்கள் வெல்க

தூய்மை வாய்மை எளிமை - இம்
மூன்றின் முத்தாய்ப்புதான் வெண்மை

வெண்மை வண்ணங்களின் தலைவன்
எல்லா வண்ணங்களின் தகப்பன்
வெள்ளொளிதான் உயிர்களின் உதயத்திற்காதாரம்
வெண்மைதான் பிறவண்ணங்களின் மூலாதாரம்

சமாதானப் புறாவும் வெண்மை
சங்கு சுட்டாலும் வெண்மை
காராம் பசுவாக இருந்தாலும்
கறப்பது வெண் பால்தான்!

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிப் போன வள்ளலாரும்
தேடிச் சுதந்திரம் நமக்களித்த
தெய்வப் பிறவி அடிகளாரும்
ஆதரித்தது வெண்மையைத்தான் - அவர்கள்
அணிந்தது வெள்ளுடைதான்.

வெண்மைதான் வண்ணம்
வெண்மைதான் சிறப்பு
வெண்மைதான் அன்பு
வெண்மைதான் உயிர்


நீலப்படமுண்டு சிவப்பு விளக்குண்டு
மஞ்சள் பத்திரிக்கையுண்டு கருப்புப் பணமுண்டு
பச்சை வசனமுண்டு இதுபோல் பலவுண்டு
இவையெல்லாம் சமுதாய அலங்கோலங்கள்
இவற்றிற்குத் துணை நிற்கும் இவ்வண்ணங்கள்
இவை சேராத இடம் சேர்ந்து
தம்மை - தம் தன்மை இழந்துவிட்டன

தனித்திருந்து ஒளிபொருந்தி
தனித்தன்மையுடன் திகழும்
வெள்ளைதான் சிறந்த வண்ணம்
இதுவே என் ‘வெள்ளை அறிக்கை’

கவிஞன்_காதலன்

*ஒரு கரு மூன்று கவிதைகள் - ஒரு சிறு முயற்சி*

நான் கவிஞனாக இருந்திருந்தால்
நிலா போல் சூரிய கதிர்களை தின்று
ஒளி கொடுக்கின்றது உன் முகம் என்றிருப்பேன்!
காதலனாய் இருப்பதினால்
சூரியன் மட்டுமல்ல உன் முகமும்
தானே பிரகாசிக்கக் கூடிய
ஆற்றல் கொண்டதென என்றுரைக்கின்றேன்!

- ப்ரியன்.

சூரியக் கதிர்கள் தின்று துப்பும்
நிலா உன் முகமென்றேன்
கவிஞன் என்றார்கள்!

இல்லையில்லை,
சூரியனுக்கு அடுத்து
உன் முகமே தானே
பிரகாசிக்கக் கூடியதென்றேன்
பித்து காதலன் என்கிறார்கள்!

- ப்ரியன்.

சூரியக் கதிர்கள் தின்று துப்பும்
நிலா உன் முகமென்றேன்
கவிஞன் என்றார்கள்!

இல்லையில்லை,
சூரியனுக்கு அடுத்து
உன் முகம்,தானே
பிரகாசிக்கக் கூடியதென்றேன்;
பித்து காதலன் என்கிறார்கள்!

ம் மென வெட்கப் பூ பூத்துவிடு,
சூரியனுக்கே ஒளிப் பிச்சையிடுவது
உன் முகமென
நிரூப்பித்துக் காட்டுகின்றேன்!

- ப்ரியன்.

புத்தகப் பரிசு

நீ பரிசாய்
அளித்ததால் என்னவோ -
புத்தகத்தையும் தாண்டி
அதை
எழுதியவனையும்
கொஞ்சம் பிடித்துப்
போனதடி எனக்கு!

- ப்ரியன்.

ஆசிர்வதி

உனக்காக எந்தன்
இதயம் ஒற்றைக்கால் தவம்
புரிந்து காத்திருக்கின்றது
வா,
வந்து உன் கரம் தொட்டு
அதனை ஆசிர்வதித்துவிட்டு போ!

ஆசிர்வதிப்பது உந்தன் இடது
கரமானாலும் பரவாயில்லை!

- ப்ரியன்.

உயிர்மெய்

உயிராய் நீ
மெய்யாய் நான்
உயிர்மெய்யாய்
நம் காதல்!

- ப்ரியன்.

வானவில் கோலங்கள்

நீ வருவதாய்
சொல்லப்படுகின்ற நாட்களில்
வானவில்கள்
என் வீட்டின் வாசலில்
கோலங்கள் ஆகின்றன!

- ப்ரியன்.

காதல் தழும்புகள்!

உன் கண்கள்
தந்த சாட்டையடியில்
என் நெஞ்சமெல்லாம்
காதல் தழும்புகள்!

- ப்ரியன்.

இயற்கை பாடம்

தூரத்தில் நின்று
அம்மரத்தை வெறித்திருந்தேன்!

சென்ற வருடத்தின்
காய்ச்சலுக்கே
மரித்திருக்க வேண்டிய
மரம்
தாங்கிப் பிடித்திருக்கிறது
இலைகளையோ
கிளைகளையோ அல்ல
உயிரை மட்டும்!

எப்போதாவது
எட்டிப் பார்க்கும்
மேகமொன்று தூரத்தில்
வருகின்றதாய் அறிகுறி!

பக்கம் வந்த
மேகம் பாவப் பட்டு
மரத்தின் பாதம் மட்டும்
நனைத்து நகர்கின்றது!

நீர்,
ஆணி வேர்
தொட்ட கணம்
சிலிர்த்து ஆயுத்தமாகிறது
மரம்;
அடுத்த தளிர் பிரசவத்திற்கு!

உயிர் தாங்கி
நிற்கும் மரத்தின் - நம்பிக்கை

மேகம் வந்தது - அதிர்ஷ்டம்

மழை தந்த மறுபிறவி - சமயத்தில் வந்த உதவி

மெல்ல மேற்கே ஆதவன்
அடைக்கலம் ஆக
என் கிழக்கில் விடியல்;

மெல்ல எனக்கு
பாடம் சொல்லி விட்டு
அடுத்த பாடத்திற்கு
ஆயுத்தமாகிறது இயற்கை!

பாடம்:

நம்பிக்கை - அதிர்ஷ்டம் - உதவி
இப்படித் தான் உயிரை
கட்டி பிடித்து
வைத்திருக்கிறது
இத்தனை நாள்
உலகம்! - இன்னமும்!!

- ப்ரியன்.

கவிதை எழுது...

எல்லா நாளும்
கவிதை எழுதிக்
காத்துக் கிடந்தேன்
உன்னை கண்ட
அந்த நாளில்தான்
கவிதை என்னை எழுதியது!

- ப்ரியன்.

வழிமேல் விழி

உன் வருகைக்காக
ஒருபோதும்
வழிமேல் விழி வைத்து
காத்திருந்ததில்லை
அவ்விழிகளில் நீ
இருப்பதினால்!

- ப்ரியன்.

நட்"பூ"...

துவண்ட கணம்
எனக்கு தோள்
சாய இடம் கொடுக்கும்
நட்பிற்கும்!

தவறும் கணம்
திட்டித் திட்டி
நேர் செய்யும்
தோழமைக்கும்!

என்
சந்தோசமெல்லாம் தனிமையில்
சுகிக்க விட்டு!
என்
துக்கமெல்லாம் கூடிப் பக்ரிதல் பொருட்டு
ஓடோடி வரும்
சினேகத்திற்கும்!

நட்பு, சினேகம் , தோழமை , நண்பு , நேசம்
என சில சொல்லிருக்கலாம் அப்பந்ததிற்கு
எனக்கு அவை
அகரவரிசைப் படிப் பார்த்தால்
நூறு நூறு சொற்கள்
உங்களின் பெயர் வடிவத்தில்!

நட்புக்கு ஒரு தினமிருக்கலாம்
ஆனால்,
உங்களிடம் கதைக்கும் நாள் ஓவ்வொன்றூம்
எனக்கு நட்பு தினமே!

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

- ப்ரியன்.

நினைவு

என் காதலியை வற்புறுத்தி கேட்டதற்கு அவள் சமைத்த கவிதை :

அவள் : படித்துவிட்டு சிரிக்க கூடாது!

நான் : கண்டிப்பாக சிரிப்பேன்.

அவள் : ம்ம்ம் போடா...காட்டமாட்டேன்...

நான் : காட்ட வேண்டாம் கொஞ்சம் திரும்பு...உன் நெஞ்சிலிருந்து நானே படித்துக்கொள்கிறேன்...

அவள் : முடியாது (சொல்லியபடி திரும்ப நான் படித்த அவள் வரைந்த கவிதை)

என்னை நினைத்து
ஒரு கவிதை
எழுது என்றான்...
அவன் நினைவே
ஒரு கவிதை
என்பதறியாமல்!

நான் : டேய்...நல்ல வந்திருக்கு

அவள் : பொய்...எனக்காக பொய் சொல்ல வேண்டாம்

நான் : பொய்தான்...அழகிடம் வெட்கத்தால் இன்னமும் அழகூட்ட பொய் சொல்லலாம்

அவள் : பொறுக்கி...

நான் : ஆமாம் நான் பொறுக்கி...பொறுக்கி...கிடைத்த தெய்வம் நீ

அய்யோ தாங்கலே!
கொஞ்சம் நிறுத்தேண்டா
கத்திக் கொண்டு ஓடுகிறது காதல்...

முடிந்தால் யாரவது
காதலை தடுத்து நிறுத்தி
என்னிடம் ஒப்படையுங்களேன்
இவள் அழகிடம்
என்னை சிறைபடுத்தியதற்கு
இன்னும் இப்படி பேசிப் பேசி
பல தண்டனைகள்
தரவேண்டும் காதலுக்கு!

- ப்ரியன்.

முத்தம் - கடன்

கடன் வாங்கியும் பழக்கமில்லை
கொடுத்தும் வழக்கமில்லை
எனக்கு!

முதல் புன்னகை சிந்தினாய்
மறு புன்னகை பூத்தேன்!

கண்ணோடு கண் பார்த்தாய்
மறு பார்வை பரிசாய் தந்தேன்!

சில நாள் கழிந்து,
இதயம் உனக்கு கொடுத்தேன் என்றாய்
திருப்ப இயலாது எனது வைத்துக் கொள்
என சமாளித்தேன்!

இன்று நான்
முத்தம் தருவதாய் யோசனை
கண்டிப்பாக
நீ திருப்பியாக வேண்டும்!

ஏனெனில்,
கடன் வாங்கியும் பழக்கமில்லை
கொடுத்தும் வழக்கமில்லை
எனக்கு!

கொஞ்சம் பொறு கணக்கிலும்
நான் கொஞ்சம் சுமார்தான்;
ஒன்று கொடுத்து
இரண்டு கேட்டாலும் கேட்பேன்!

- ப்ரியன்.

மந்திரி வந்தார்

மந்திரி வந்தார்
எங்கள் ஊர்
மந்திரி வந்தார்;

போலீசு படைசூழ
தொண்டர்கள் துதி பாட
எங்கள் ஊர்
மந்திரி வந்தார்;

வாராத மழை வந்தது போல
கார்கள் ஈசல்
கூட்டத்துடன்
மந்திரி வந்தார்;

பன்னிகள் மேய்ந்து திரிந்த
எங்கள் சாலைகள்
பளிங்கு சாலைகளாக
மந்திரி வந்தார்;

பெருமாளை சேவிக்கும்
பக்தனைப் போல
கும்பிட்டபடி
மந்திரி வந்தார்;

பணிவுக்கு புது இலக்கணம்
வகுத்தவர் போல
பெரியவர்கள் கால் தொட்டு
சின்னவர்கள் கை தொட்டு
பாட்டிகள் கூச்சம் கூட்ட
புகைப்பட கலைஞர்கள் நடுவினில்
மந்திரி வந்தார்;

அஞ்சுக்கும் பத்துக்கும்
அல்லாடும் எங்களுக்கு
வாரி வாரி
அம்பதும் நூறும் தர
எங்கள் மந்திரி வந்தார்;

தினம் தினம்
வாழ்க்கை கூத்தாடும் எங்களுக்கு
கரகாட்டமும் பொய்க்கால் ஆட்டமும்
ஓசியில காட்ட
எங்கள் மந்திரி வந்தார்;

ஒரு கார் கண்டால்
புழுதி பறக்கும் ரோட்டில்
ஒரு கையில் டவுசர் பிடித்து
துரத்தி ஓடும் பிள்ளைகளுக்கு
கார் பவனி காட்ட
எங்கள் மந்திரி வந்தார்;

அடுத்த மாசம்
எலெக்சன்னு டீக்கடை
ரேடியோவில கேட்டதை
நியாபக படுத்தி போக
எங்கள் மந்திரி வந்தார்;

எல்லாதுக்கும் மேல
நான் இன்னும் உசிரோடதான்
இருக்கேன்; - அதனால
உங்க வோட்டு
எனக்குத்தான் என
சொல்லிவிட்டு போக
எங்கள் மந்திரி வந்தார்;

- ப்ரியன்.

உயிர் பறிக்கிறது காதல்!

தொட்டுத் தொட்டு
நீ பேச
விட்டு விட்டு
என் உயிர் பறிக்கிறது
காதல்!

- ப்ரியன்.

பிதற்றல் கடிதம்

காதல் காய்ச்சல் கண்டவன்
காய்ச்சல் முற்றலில்
வரையும்
பிதற்றல் கடிதம்தான்
கவிதை நடை
எதிர்பார்த்து ஏமாந்துவிடாதே!

அன்பே எனத்தெரியாது!
ஆருயிரே என பிணற்ற தெரியாது!
என் சொத்தே
என் பல் சொத்தையே
என உனை நகைக்க
வைக்க தெரியாது!

ஆனாலும்,
என் உயிர்
மொத்தமே நீதானடி...

உனை கண்ட அந்த
நொடிக்கு பின்தான்
அறிந்தேன்
என்னுள்ளும்
இதயம் என்று
ஒன்றிருப்பது!

கண்டுகொண்ட கணம் மட்டும் தான்
அது எனக்கு சொந்தமாயிருந்தது!
அப்போதே அது - சொல்லாமல்
உன் பின்னால்
சென்றாகிவிட்டது!

உன்னிடம் எது பிடிக்கும் என
தனியாய் கேட்க்காதே!

உன் கொடியிடை
தொடும் முடி பிடிக்கும்!
யாழ் கொஞ்சும்
குரல் பிடிக்கும்!
காற்றுக்கு வலிக்குமென
மெல்ல மூச்சு விடும்
நாசி பிடிக்கும்!
உள் மிடறும் தண்ணீரை
வெளி காட்டும் கழுத்து பிடிக்கும்!
சென்சாரில் சிக்கும்
சில பாகங்கள் பிடிக்கும்!
பேணிப் பேணி நீ வளர்க்கும்
உன் செல்ல சின்ன
தொப்பையும் பிடிக்கும்!
மெல்ல மெல்ல அடி வைத்து
உன் அடி பூமியில்
வரையும் ஓவியங்கள்
இல்லை காவியங்கள் பிடிக்கும்!
சின்ன சின்ன குழந்தைகளுடன்
கொஞ்சி விளையாடும்
உன் சின்னபிள்ளைதனம்
பிடிக்கும்!

மொத்தத்தில் சொல்ல போனால்
என்னை கொள்ளைக் கொண்டதனால்
காரணப்பெயர் கொண்ட - உன்
கொள்ளையழகு பிடிக்கும்!

இப்படியே சொல்லி
கிடந்தால் சீக்கிரத்தில் - எனக்கு
பைத்தியமும் பிடிக்கும்!

அதனாலே வரைகின்றேன்
இம்மடல்!
உனக்கும்
பைத்தியம் பிடிக்குமென்றால்
வா!
நம் கல்லூரி திடல்!

ஒற்றை மரத்தடியில்
காத்திருப்பேன்!
உயிரெல்லாம் சேர்த்து
பூத்திருப்பேன்!

வந்தால்,
உன் மடியில் விழும்
முதல் பூவாவேன்!
வராவிட்டால்?
என்னடி அம்மரத்தில்
ஒரு வேராவேன்!

- ப்ரியன்.

அவன்...அவள்...அவர்கள்...

முதல் சந்திப்பில்
இதயம் தொலைத்து
அவசர அவசரமாய்
தேடி எடுக்கையில்
மாற்றி எடுத்து
பரிதவித்த
அவனின்
அவளின்
அவர்களின்
டைரியிலிருந்து ;
அவர்கள் அறியாமல்
திருடப்பட்ட
சில குறிப்புகள்
இங்கு!

- ப்ரியன்.

வலைப்பூ : http://priyan4u.blogspot.com
மின்னஞ்சல்: mailtoviki@gmail.com

அவன்...அவள்...அவர்கள்
**********************

அவன்:
******
ஒரு அந்திப்பொழுதில்
கடல் ருசிக்கையில்
நீ,கடல் விளையாடும்
பிள்ளைகள் ரசித்திருந்தாய்!
கடல் சுகிக்க வந்தவன்
கடல்கன்னி ருசிக்க ஆரம்பித்தேன்!
கண்ட நீ வீசிய
அலட்சிய பார்வையில்
பிடித்துப் போனது உன்னை
எனக்கு!

அவள்:
******
உன் பார்வையில்
என் உயிர்
கசிய கண்டேன்.
அய்யயோ தவிர்த்தேன்
அதனால் இப்போது
தவிக்கின்றேன்!

அவன்:
******
உனையேதானே பார்த்துக்
கிடந்தேன்!
எந்நொடி எழுந்து போனாய்?
கடற்கரையை தவிக்கவிட்டு!
என்றாலும் என் மனதில்
உட்கார்ந்துகொண்டு!

அவள்:
******

உன் விழி சிமிட்ட
எடுத்துக்கொண்ட
அச்சமயத்தில்
எழுந்து ஓடிவந்தேன்!
நீ மட்டும்
சம்மணம் போட்டு
அமர்ந்து கிடக்கிறாய்
நெஞ்சினில்!

அவன்:
******
உனக்கும் என்போல்
இரசனைதான் போலும்
கடல் சுகிக்க வந்து
பிள்ளைகள் குறும்பு ரசித்து
எனை இன்று
தத்தளிக்க விட்டு போனாய்!
சுய அறிமுகம் செய்திருக்கலாம்!!

அவள்:
******
நல்லவன்தான் போலும்
கடல் சுகிக்க வந்து
எனை மட்டுமே பார்த்துகிடந்தான்
மற்றைப் பெண்கள் மேல் - உன்
கண்கள் மேயவில்லை!
நீ நல்லவன்தான் போலும்!
என்ன சார் பார்க்கின்றீர் என
பெயராவது கேட்டு தொலைத்திருக்கலாம்!!

அவன்:
******
உனக்காகத்தான்
இத்தனைக்காலம்
காத்திருந்ததா? - மனம்
கண்டவுடன்
உன்னை வந்து
கட்டிக்கொண்டதே?


அவள்:
******
உனக்காகத்தான்
காத்திருந்ததா?
என் பெண்மையுள்
மென்மையாய்
ஒற்றைப் பூ
பூக்கின்றதே!

அவன்:
******
இந்த ஊர்தானா நீ?
என்ன பேராய் இருக்கும்?
காதலே! - உலகின் வைத்தியமில்லா
பைத்தியமே
உந்தன்
விலாசம் மெல்ல மெல்ல
அறிகின்றேன்!
சீக்கிரம் வந்துவிடுவேன்!

அவள்:
******
நீ எந்த ஊரடா?
ஏது உந்தன் பேரடா?
போடா எதுவானால் என்ன?
காட்டிவிட்டாய் பைத்தியங்கள்
வசிக்கும் ஊருக்கான
வழி!

அவன்:
******
ஐயோ!
கடவுளே!
ஏனய்யா அவளை
கண்முன் காட்டினீர்?
வெறும் ஆண்மகனாய்தானே இருந்தேன்
அவளைக் காணும் வரை!
கண் விபத்து நிகழ்ந்த சில நொடியில்
போய்விட்டாள் அவளின்
பெண்மையில் கொஞ்சம் என்னில் புகுத்தி!
பார்,
இங்கு நான்
அழுது கொண்டிருக்கிறேன்
பெண்மகளைப் போல!

அவள்:
******
ஏன் கடவுளே
அவனை என்முன்
அழைத்து வந்தாய்?
பார்,
இந்த தாள் முழுவதும்
எழுதியதை
தொட்டுத் தொட்டு
மையின் தரம்
பரிசோதித்து பார்க்கிறது
என் கண்ண்¢ர் துளிகள்!

அவன்:
******
இனி உன்னைப் பற்றி
நினைந்து வருந்தபோவதில்லை!

"ஒன்றை நீ விரும்புவதானால்
அதை அதன் வழி விட்டுவிடு
உன்னுடையதானால் உன்னிடம்
திரும்ப வரும்!
இல்லையானால் இல்லை!"

அவள்:
******
அடேய்!
என்ன காரணம் கொண்டும்
உன்னைப் பற்றி
என் மனம் ஒரு போதும்
இனி நினையாது!

"If you love something, let it go,
If it comes back to you, It's yours
but if it doesn't, it never was"

காதல்:
******
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது
கிடைக்காமலிருக்கிறது கிடைக்காது!

கடவுள்:
*******
என் கணக்கு வழக்கை
மாற்றியெழுதிய கயவன் நீ!
அவர்கள் இன்னும் சிலநாள்
கழித்தே சந்தித்திருக்க வேண்டும்!
அதன் பின்னே - அவர்களைப் பற்றி
அவர்கள் சிந்தித்திருக்க வேண்டும்!

காதல்:
******
அதனாலென்ன?

கடவுள்:
*******
முந்திக் கெடுத்த
முந்திரிக் கொட்டையே...
உன்னால் என் கணக்குவழக்குகள்
பாழானதுகளே!
அதனால்,அவர்களுக்கு
தரப்போகிறேன் ஒரு மிகப்பெரிய
தண்டனை!

காதல்:
******
ஐய்யகோ!
நான் செய்த பிழைக்கு - என்
பிள்ளைகளுக்கு தண்டனையா?
அடாது!
எனக்கே தாருங்கள்


கடவுள்:
*******
உனை தண்டித்தலும்
அவர்களை தண்டித்தலும்
ஒன்றுதான்!


அவன்:
******
அலுவலகத்தில் முதல்நாள்
ஆயிரம் கனவுகள்!
கேட்டு கேட்டு
வழிகண்டு
பயிற்சி அறை
நுழையும் கணம்
இரு விழிகள் எனைப்
பார்த்திருந்தன - அவை
சத்தியமாய்
உன் விழிகள்!

அவள்:
******
என் கண்மணிகளே
எப்படி கண்டீர்கள்?
வரப்போவது அவனென்று
அக்கணம் தானே
வாசல் பக்கம் பார்த்தீர்கள்!

அவன்:
******
முகமெல்லாம் மத்தாப்பு
உயிரெல்லாம் பூப்பு
அந்த அறையில்
யாரும் அறியாமல்
மெல்ல பறக்கத் தொடங்கினேன்
நான்!


அவள்:
******
கண்ணும் கண்ணும்
நோக்கியதில்!
என் உயிரெல்லாம்
உறிஞ்சப்பட்டது
பஞ்சாகப் பறக்கிறேன்
நானே நான்!


அவன்:
******
இரு நொடிக்கு
ஒன்று என
கணக்கு வைத்து
கண்கள் எடுத்தன
உனை ஆயிரமாயிரம்
புகைப்படங்கள்
அதில் ஓவ்வொன்றிலும்
காணக்கண்டேன்
உந்தன் உயிர்துளிகள்!

அவள்:
******
தெரியாத உன்
பெயரை ஆயிரமாயிரம்முறை
எழுத்தாணிக் கொண்டு
கீறி கீறி இதயம் முழுதும்
எழுதி செல்கிறது
மனம்!
உன் வழியே!

அவன்:
******
உந்தன் அறிமுகப்படலத்தில்
உச்சரித்தாய் திருநாமம்
"ப்ரியா"
கை எனக்கும் அறியாமல்
காகிதத்தில் எழுதியது
"ப்ரியனின் ப்ரியா"!

அவள்:
******
வணக்கம்!
இவன் "ப்ரியன்"
சொல்ல நீ,கேட்டு
மனம் எனை ஊமையாக்கி
சப்தமாய் உள்ளுள்
உச்சரித்துப் பார்த்தது
இல்லை உந்தன் பெயர்
"ப்ரியா ப்ரியன்"!

அவன்:
******
நீயும் நானும்
தனியே பேசியிருக்க
மெளனமாய் ஒட்டு
கேட்டுக் கொண்டிருந்தான் ஒருவன்
அவனைப் பிடித்து தனியே
விசாரித்ததில்
சிரித்து மழுப்பி
ஓடிப்போனான்
பதில்யேதும் பகராமல்!

அவள்:
******
நீ சொன்ன அதே அவன்
நேராய் என் வாசல்கதவு
தட்டினான்!
"காதல்" என் பேரென்றான்...
மறுபேச்சு ஏதுமில்லாமல்
ஓடி ஏறி அமர்ந்துகொண்டான்
என்னுள்
என் அநுமதியில்லாமல்!


அவன்:
******
பிறந்த நாள்,மாதம் சொல்லியவளை
கட்டாயப்படுத்தி
வருடம் கேட்டேன்!
கணக்குப் பார்த்து
மனம் பெருசாய் சுவாசித்தது!

அவள்:
******
உன் மனம்விட்ட
பெருமூச்சில் என் துப்பட்டா
பறந்துவிட பார்த்தது!
பெருமூச்சின் காரணம்
தெளிந்த மனம்
சன்னமாய் சிரித்து வைத்தது!

அவன்:
******
மறைத்து வைத்தல்
பாவமென்று!
மென்று மென்று துப்பினேன்
வார்த்தைகளை கோர்த்துப் பார்த்தால்
"யுகம்யுகமாய்
எரியும் சூரியனாய்
என்னை எரித்து கொண்டிருக்கிறது
உன் நினைவு" - என்றேன்
பதிலேதும் இல்லாமல்
எழுந்து போனாய்!
எந்தன் உயிரை கத்தரித்து
போனாய்!

அவள்:
******
ஏனடா!
இவ்வளவு தாமதம்?
இங்கு நான் எரிந்து எரிந்து
தீர்ந்தே விடும்
நிலையிலிருக்கிறேன்!

அவன்:
******
உனக்கு விருப்பமில்லை
போலும்!
முகம் தெரியா இரவில்
உந்தன் முகம் மறந்து
அழுதால் மனம் ஆறும்
கடற்கரையில் அழுதால்
உப்பளவாவது விஞ்சும்!

அவள்:
******
எனை விட்டால்
அவனுக்கு அழ மடி?
இருக்கிறதே
கடல் மடி!

அவர்கள்:
********
அலைத்தொடும் தூரத்திலிருந்து
ஒரு அடி தள்ளியிருந்தவனை
ஒரு பூங்கை கோர்த்தது
தோள் சாய்ந்தது!
பார்க்காமல்,பேசாமல்
உன் வாசம் நுகராமல்
உணர்ந்தேன் "ப்ரியா".

நீ !பார்வையால்
"ப்ரியா" வென விழித்த நொடி
தலை மேலும் கீழும்
காற்றை வெட்டி சொன்னது!
ஆமாம்! நானும்தான்!

இருவரும் கண்ணீர்துடைத்து
மேல் வானம் பார்க்க!
தாயலையை தவிக்கவிட்டு
நம் அடி வந்து
நனைத்துவிட்டுப் போனது
குறும்பு குட்டி அலையொன்று!

காதல்:
******
ஹா!ஹா!ஹா!ஹா!
தண்டனை என்று
ஒன்றும் தராமல் விட்டீர்!

கடவுள்:
*******
தந்தேன் காதலே!
அறியாமல் விட்டாய் நீ!
சில நாள் கழித்து
சேர வேண்டியவர்களை
முன்னமே சேர்த்து வைத்தேன்!
காதலைவிட பெரிய
தண்டனை இல்லை
இருவருக்கும்!

- ப்ரியன்.

பார்வை

உன் பார்வை
என் விழியில்
செய்த நுண்ணிய;
மிக நுண்ணிய
ஓட்டையின் வழியே
முழுதாய் உள் புக்கு
என்னை
நிரப்பிவிடப் பார்க்கிறது
காதல் கடல்!

- ப்ரியன்.

மரம் கனவு

மேடானப் அப்பகுதியில்
ஒற்றை மரம்
துணையில்லாமல்!

பறவைகளின் பட்சிகளின்
குரல்களுக்கு மட்டும்
குறைவில்லாமல்!

ஒரு
நட்டநடு நிசியில்
நன்றாக உலகம் உறங்க
திடீரென தானே வேர்களை
பூமியிலிருந்து வெட்டி
மேலே பறக்கத் தொடங்குறது
மரம்!

திடுக்கிட்டுப் பார்க்கிறேன்
கொஞ்ச நேரம்
பேயரைந்தவன் போல்
பேச்சுவராமல்!

பறவைகளின் கதி
என்னவாகுமோ?
நித்திரையிலிருக்கும் பறவைகளை
எழுப்ப கத்தி கத்தி
வார்த்தை தொலைக்கிறேன்
சப்தம் மட்டும் வந்தபாடில்லை!

கை தூக்கி
மரம் பறக்கிறது
பட்சிகளுக்கு சைகை
காட்டுகையில்;
எந்திரிங்க அலுவலகத்துக்கு
நேரமாயிடும் மனைவின்
குயில் குரல் கேட்டு
விழித்தெழுகிறேன்!

சுற்றும் முற்றும்
பார்த்ததும் முடிவாகிறது
கண்டது கனவென்பது!

என்றாலும்,
பறக்கும் மரம்
பறவைகளின் கதி
நினைத்து தொலைக்கும்
மனது;
அடுத்த கனவு காணும் வரை!

- ப்ரியன்.

நீயும்???

நாம் சந்தித்த அந்நொடி

என் கண்கள்
உந்தன் கண்களை
காதலிக்கத் தொடங்கியது!

என் சுவாசம் - காற்றில்
உந்தன் மூச்சைப்
பிரித்தறிய கற்றுக்கொண்டது!

என் இதயம்
உனக்கும் சேர்த்து துடிக்க
பழகிக் கொண்டது!

இதை கண்ட
நான் கண்டு கொண்டேன்
நம் சந்திப்பிற்க்கு முன்னமே
நான் உன்னை காதலித்ததை!

நீயும்???

- ப்ரியன்.

சின்ன வயது நாங்கள்!

முன்னொன்று
பின்னொன்று
அதை தாங்க
தாங்கு சக்கரம்
மற்றிரண்டு!
இதுவெல்லாம் போதாதென்று
என்கால்கள் வேறு
அந்த பக்கம்
இந்த பக்கம் சாயும்
மிதிவண்டியின்
சமநிலை காக்க!

தத்தக்கா பித்தக்கா
நடையில்
தங்கை வந்து
தொற்றிக் கொள்ள
சத்தம் போட்டு
ஊரை கூட்டி
ஓட ஆரம்பிப்போம்
இரண்டு சக்கர
குட்டி மிதிவண்டியும்
ஓட்டுவதாய் சொல்லி
ஓடும் நானும்!

அண்ணா வேகம்
இன்னும் வேகம்
சொல்லி சொல்லி சிரிக்கும்
தங்கத்தின் சிரிப்பொலி
மயக்கத்தில்
தலை தெரிக்க ஓடும்
என்காலுடன் சேர்த்து
ஆறுகால் மிதிவண்டி குதிரை!

சந்தோசமாக ஓடும்வண்டி
குப்பற சாயும்
வழி கிடக்கும்
ஒற்றை கல் தட்டி!

அம்ம்ம்ம்ம்ம்மா என்றபடி
தங்கை சாய
அவளை தாங்க நான் சாய
மிதிவண்டி கிடக்கும் அடிபட்டு
சப்தம் கேட்டு வந்த அன்னை
கையில் சிராய்ப்பு
முட்டியில் அடி!
சொல்லி
எடுப்பாள் தடி
வேகமாய் ஓட்டிய எனை தண்டிக்க
தடி எனை தாக்க வரும் முன்
அம்மா வலிக்கல அம்மா
வலி பொருத்து
கண்வழி நீர் வழிய
தங்கை!

இன்னொருமுறை இப்பிடி பண்ணுனே
பிச்சுடுவேன்
நூறாவதுமுறை சொல்லி
தங்கை காயத்திற்கு
மருந்து தர செல்வாள்
அருமை அம்மா!

மருந்து வரும் முன்
காயம் தடவி
வலிக்குதா என கேட்டகையில்
ம்ம்ம்...இன்னொரு ரவுண்ட்
அழைச்சிட்டு போண்ணா
மழலையில் வந்த வலி காணாமல்
போகும் இருவரின் ரணம்!

ஆரவாரமாய்
தொடங்கும் அடுத்த ஆட்டம்
விழுந்து விழுந்து எழுந்தாலும்
அது எங்களுக்கு கொண்டாட்டம்!
எங்களின் பாசம் கண்ட
அம்மாவின் கண்ணில் தெரியும்
சந்தோசம்!

இப்போதும்
நானும் தங்கையும் சேர்ந்து
நடக்கையில்
எங்காவது எப்போதாவது
கண்ணில் தட்டுபடும்
எங்கள்
சின்ன வயது நாங்கள்!

- ப்ரியன்.

தூக்கமில்லா இரவு

மொட்டை மாடி;
முதல் தள அறை - அடுத்து
கீழ் தளம்
மாறி மாறி எங்கு படுத்தாலும்
தூக்கம்,வாடா வா
வந்து பிடி பார்க்கலாம் என
கண்ணாமூச்சி காட்ட!

கணிப்பொறி தட்டி வெறுத்து!

தொலைக்காட்சிப் பெட்டியில்
நூற்று இருபத்து எட்டு
சேனல்களும் தாண்டி!

எங்கோ குரைக்கும்
நாயின் ஓசைக்கு
காரணம் தேடி!

மதியம் தூங்கி தொலைத்ததின்
தாக்கம் என்ற
ஒன்றரை பருமன் மூளையின்
புத்திசாலிதனத்தை மெச்சி!

பிடிக்காத;
புரியாத
புத்தகத்தை
படித்து முடித்து!

மணி இரண்டு
நாளை கலந்துரையாடல் வேறு!
தூங்குடா என்ற
மனதின்
கட்டளை காப்பாற்ற முடியாமல்
தவித்து!

சரி,இது ஒன்றுதான்
பாக்கி என
"தூக்கமில்லா இரவு"
தலைப்பிட்டு எழுத
தொடங்குகையில்
எங்கிருந்தோ பறந்து வந்து
விமானம் போல் மெல்ல
என் மேல் இறங்கி
மயக்கத்தில் ஆழ்த்தும்
உறக்கம்!

- ப்ரியன்.

உன் பலம்

நீ!
நதிமூலத்தின்
முதல்துளி போல்
பரிசுத்தமானவன்!

நீ!
காடு கடையும்
வெள்ளம் போல்
வேகமானவன்!

நீ!
மலை தொங்கும்
அருவி போல்
பலமானவன்!

நீ!
சமவெளி தங்கும்
ஆறு போல்
வியஸ்திரமானவன்!

நீ!
ஆறு சேர்க்கும்
மண் போல்
சத்தானவன்!

நீ!
கடல் புகும்
நதி போல்
அமைதியானவன்!

நீ!
நதி சேர்த்துக் கொண்ட
கடல் போல்
ஆழமானவன்!

நீ!
கட்டியிழுக்க
காத்திருக்கின்றன
ஆயிரம் இமயங்கள்!

நீ!
உடைத்துப் போட
பார்த்திருக்கின்றன
திசைகள்!

நீ!
பறித்து விளையாடவே
படைக்கப் பட்டிருக்கின்றன
விண்மீன்கள்!

நீ!
நடக்கும் நடையில்
பொடிபடவே பரவிக் கிடக்கின்றன
தடைகள்!

உன்னை
உன்னையேதான் தர கேட்டான்
விவேகானந்தன்
ஒற்றை நூற்றாண்டுக்கு முன்!

நீ!
தோல்வி கண்டு
துவண்டு போனால்
அதுவே ஆகும்
உனக்கு சாக்காடு!

நீ!
தோல்வி முதல் படியாக்கி
ஏறி மிதித்து
வெற்றி தொட்டு பறித்தால்
உலகம் உருவாக்கிக் கொடுக்கும்
உனக்கொரு பூக்காடு!

வா,
உன் பலம் கொண்டு
தோல்விகளுக்கு எதிராய்
ஒரு வழக்காடு!

- ப்ரியன்.

முத்து

என் விழியில்
பத்திரமாய் விழுந்து
முத்தாய் முளைத்த
ஒற்றை மழைத்துளி
நீ!

*****************

என் உயிர்விதையை
உன் கடலுள்
பத்திரப்படுத்தி நீ
சமைத்த முத்து
நம் குழந்தை!

*****************

என்னுள் விழுந்த
உன் அழகை
மொத்தமாய் சொல்லமுடியாமல்
குட்டி குட்டியாய் சொல்லி
நான் படைத்த முத்துக்கள்
என் கவிதைகள்!

ஊடல்

உந்தன் கோபங்களும்
அது தொடரும் பேசாமையும்
இரணம் எனக்கு!
என்றாலும்,
பின் வரும்
சரணடைதல் பிடிக்கும்;
அதற்காகவே வேண்டுமாகிறது
உன் கோபங்களும்,பேசாமையும்
சில நேரங்களில்!

- ப்ரியன்.

சுய ஆறுதல் மொழி

கவிதைக் குறிப்பு
தொலைந்த
முதல்நிமிட மனபாரம்
தொடர்ந்து
மெதுவாகத் தோன்றும்
அக்கவிதை எனக்கு
விதிக்கப் பட்டதல்ல என்ற
சுய ஆறுதல் மொழி...

- ப்ரியன்.

காமத்துப்பால்

குறள் கூறும்
காமத்துப்பாலில்
முதல் அடி நீ
இரண்டாம் அடி நான்!

- ப்ரியன்.

நாட்குறிப்பு

என் நாட்குறிப்பை
நான் அறியாமல்
ரகசியமாய் திறந்து
அவள் நினைவை
பத்திரமாய் எழுதிவைக்கும்
காதல்!

- ப்ரியன்.

என் உலகம்

நீ என் உலகம் என்றேன்
நான்!
ம்...ஹ¤ம் நீ மட்டுமே
என் உலகம் என்று
திணர வைக்கிறாய் நீ!

- ப்ரியன்.

கிசு கிசு

உன் பெயரை நானும்
என் பெயரை நீயும்
ஒரே மரத்தில்
ரகசியமாய்
செதுக்கி வைத்ததில்
ஊர் முழுக்க
"கிசு கிசு" ஆகிப் போனது
நம் காதல்!

- ப்ரியன்.

வெட்கம்

கொஞ்சம் பொறு என
ரோஜாவை எடுத்து நீட்ட;
உன்னைவிட அழகாய்
வெட்கத்தில்
சிவக்கத் தெரியவில்லை
ரோஜாவிற்கு!

- ப்ரியன்.

என்னைத் தேடல்

என்னை நான்
தொலைத்துவிட்டேன்
அது உன்னிடம்தான்
இருக்கவேண்டும்
கொஞ்சம் தேடிப்பார்த்துச்
சொல்லேன்!

- ப்ரியன்.

மெளனம்

முதல் சந்திப்பில்
மெளனத்தையே பதிலாக
தந்தாய்...
ஆனாலும் உன் மனதில்
எழுந்த வார்த்தைகள்
கேட்கத்தான்
செய்தது எனக்கு !

- ப்ரியன்.

வராதே

"என் அருகே வராதே"
என்கிறாய்!
உன்னையே கட்டிக்கொண்டு
திரியும் இவன் காதலை
என்ன செய்வாய்?

- ப்ரியன்.

கலைடாஸ்கோப்

கலைடாஸ்கோப் பற்றிய
என் சின்னவயது சந்தேகத்திற்கு;
கண்ணாடி வளையல்
அணிந்த
அவளின் கைகளை
அப்படியும் இப்படியும்
திருப்பிக் காட்டி
இப்போது புரிய வைக்கப்
பார்க்கிறது காதல்!

- ப்ரியன்.

ஊஞ்சல் ஆடுகிறது காதல்!

அவளின் இதயத்தில்
ஒருமுனைக் கட்டி
எந்தன் நெஞ்சத்தில்
மறுமுனைக் கட்டி
பத்திரமாய்
சுகமாய்
ஊஞ்சல் ஆடுகிறது
காதல்!

- ப்ரியன்.

அழிச்சாட்டம் செய்கிறது என் காதல் குழந்தை

அதோப் பார்
நீதான் வந்து தொட்டுத்
தூக்க வேண்டுமென்று
உருண்டு பிறண்டு
கைகால் உதைத்து
கத்தி அழிச்சாட்டம் செய்கிறது
என் காதல் குழந்தை!

- ப்ரியன்.

ஆச்சரியம் காட்டுகிறது என் காதல்

உலகில் உள்ள
அழகான பொருட்களுடன்
எல்லாம் அவளை
ஒப்பிட்டுப் பார்த்து
அவளுக்கு ஈடு அவளே என
ஆச்சரியம் காட்டுகிறது
என் காதல்!

- ப்ரியன்.

கண்டுகெண்டது காதல்

என்னை நானாகத்
தொலைத்த இடத்தில்
தன்னை தானாக
கண்டெடுத்துக்
கொண்டது காதல்!

- ப்ரியன்.

எரிச்சலூட்டும் காதல்

உதயன் கையசைத்து
புறப்படும் அழகு மாலையில்
அவள் கைப் பற்றி
கடல் நுரையில்
கால் நனைத்து
கடல் சுகிக்க அமர்ந்து
தூரம் நகரும் படகொன்றினை
சிவந்த வானின் அழகோடு
காட்டும் சாக்கில் மேல்சாய்ந்து
கன்னம் உரசி 'இச்' வைக்க எத்தனிக்க
மூக்கு வியர்த்து
இடையில் வந்தமர்ந்து
இது எல்லாம் அப்புறம்ம்ம்ம்ம்ம்ம் தான்
என நீட்டிச் சொல்லி
எரிச்சலூட்டும் காதல்!

- ப்ரியன்.

காதலும் கடவுளும்

காதலை ஒருபக்கம் வைத்து
தன்னை மறுப்பக்கம் வைத்து
யார் வேண்டும் என்றான் கடவுள்!
கடவுளை மறுதலித்து
காதலை எடுத்துக் கொள்ள
ஏமாற்றத்தில் அடிக்க பின்
துரத்துகிறான் கடவுள்!
பத்திரமாய் நான்
கட்டிக்கொண்ட சந்தோசத்தில்
துரத்தும் கடவுளைப் பார்த்து ஒரு
கேலிப் புன்னகை சிந்துகிறது
என் காதல்!

- ப்ரியன்.

கிறுக்குகிறது காதல்

நான் இறப்பதற்குள்
அவளைப் பற்றி
ஒரு குயர் நோட்டு அளவாவது
எழுதிமுடிக்க வேண்டும் என
மும்முரமாய் கண்டதையெல்லாம்
கிறுக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது
என் காதல்!

- ப்ரியன்.

காதல் மனசு

காகிதம் பேனா இரண்டும்
கையிலிருந்தும் கவிதை தோன்றா
ஒர் அந்திமாலையில்
அவள் கொலுசு சப்தம்
கேட்ட கணம்
ஹை கவிதை வருது என
எனைவிட்டு
எட்டிக் குதித்து ஒடுகிறது
என் காதல் மனசு!

- ப்ரியன்.

காதலின் உள்ளிருப்பு போராட்டம்

அவளைப் பற்றி
கவிதை கிறுக்க உபயோகிக்காத
அழகான வார்த்தைகளையெல்லாம்
கூட்டி வைத்து
எனக்கு எதிராக
ஓர் உள்ளிருப்பு
போராட்டம் நிகழ்த்துகிறது
என் காதல்!

- ப்ரியன்.

காத்திருக்கிறது காதல்

மலையின் ஆழ்சரிவுகளில்
சருகுகள் சரக் சரக் சத்ததில்
தளிர் பற்றி
வழுக்குப் பாறைக் கடந்து
அங்கங்கே தொங்கும் பாம்புகள் துரத்தி
சில்லென வெண்ணாடைத் தரித்த அருவி நனைந்து
கறும்குகைப் புகுந்து
கைக்கு எட்டிய பாறை விளிம்பு தொட்டு
அப்பக்கம் எட்டிப் பார்க்கையில்
அவளுடன் சேர்ந்து எனக்காக கைநீட்டிக்
காத்திருக்கிறது காதல்!

- ப்ரியன்.

தவழும் காதல்

தூரத்தில் அமர்ந்து
கைநீட்டும் தாயைப் பார்த்து
பொக்கைவாயில் எச்சில் வழிய
வேகமாய் தவழ்ந்துச் செல்லும்
குழந்தைப் போல்;
அவளைக் கண்டால்
தவழ்ந்து அவளை நோக்கி
வேகமாய் முன்னேறுகிறது
என் காதல்!

- ப்ரியன்.

காதல் விழா

அவள் பார்வைப்பட்ட
நாளையெல்லாம்
பண்டிகை தினம் எனக்
நாட்குறிப்பில் குறித்துவைத்து
விழா எடுத்துக் கொண்டாட
மெல்ல தயாராகிவிட்டது
என் காதல்!

- ப்ரியன்

ஓரு நிலவும் ஓராயிரம் சூரியன்களும

ஒரு நிலவைக் காட்டி
என்னுள்
ஒரு ஆயிரம்
சூரியன்களுக்கு
ஒளிப் பிச்சையிடுகிறது
காதல்!

- ப்ரியன்.

பூ அவள் காதல் சிற்பம்

கல்லாக கிடக்கும் என்னை
அவள் கூந்தல்
உதிறும் பூக்கொண்டு
சிற்பமாக வடிக்க
பிரயத்தனம் செய்கிறது
காதல்!

- ப்ரியன்.

கரையும் காதல்

உனைக் காணமுடியா
முற்பகல்களில்
உருகி உருகி
அழுது
கரையத் தொடங்குகிறது
என் காதல்!

- ப்ரியன்.

குழந்தை கிறுக்கிய ஓவியம்

அவள் பெயரை
கிறுக்கி கிறுக்கி
என் இதயச் சுவரெல்லாம்
அழகாக்கிக் கொண்டிருக்கிறது
காதல் குழந்தை!

- ப்ரியன்.

பிம்பம்

முன்னொரு நாளில்
என்னறை கண்ணாடியில்
நீ விட்டுச் சென்ற
பிம்பப் பதிவை
காதலின் சின்னம் எனப்
பிடித்துவைத்து
எனை நிதமும்
சித்ரவதை செய்கிறது
என் காதல்!

- ப்ரியன்.

பாதச்சுவட்டு கவிதை

கடற்கரை மணலில்
நீ பதித்து சென்ற
கால் தடத்தில்
கவிதை கண்டேன் என
கட்டம் கட்டி
பார்த்திருக்கிறது
என் காதல்!

- ப்ரியன்.

கை கட்டி நகர்கிறது காதல்

அவள் விழியில்
தொலைத்த என் உயிரை
தொலைத்த இடம் விடுத்து;
எல்லா இடமும் தேடி
கிட்டவில்லை எனக் கைவிரித்து
கைகட்டி அதுபாட்டிற்கு நகர்கிறது
காதல்!

- ப்ரியன்.

காதல் பூ

அவளுக்கான
மலர் தேடுகையில்
பூந்தொட்டியில்
பூக்களோடு ஒரு பூவாய்
மலர்ந்து
காத்திருக்கும் காதல்!

- ப்ரியன்.

காதலில் தத்தளித்தல்

அவள் விழியில்
விழுந்து தத்தளிப்பவன்
என்னைக்
காப்பாற்றுவது போல் காப்பாற்றி
மீண்டும் அவள் விழியில் தள்ளி
தத்தளிப்பதை
மெல்ல அமர்ந்து பார்த்து
இரசிக்கிறது காதல்!

- ப்ரியன்.

காதல் அகங்காரம்

புறப்பொருளுடன்
தொடங்கும்
என் கவிதைகளில்
எல்லாம் கூட
அகப்பொருள் திணித்து
அகங்காரமாய் சிரிக்கிறது
காதல்!

- ப்ரியன்

தொலைத்ததும் கிடைத்ததும்

என்னை தேடித் தேடி
உன்னிடம் தொலைத்த
என்னைத் தேடித் தேடி
சலித்த கணம்;
கண்டுகொண்டதாய்
நானெனச் சொல்லி
உன்னை தந்து;
தொலையக் காரணமான
உன்னையே கையில் தந்து;
தள்ளி நின்று சத்தமாக
சிரித்து தொலைக்கிறது
காதல்!

- ப்ரியன்.

விழி-காதல்

தொட்டனைத் தூறு
மணற்கேணி
விழிமொழிக்
கற்றனைத் தூறும்
காதல்!

- ப்ரியன்.

காதல் நிரப்பல்

என்னை உறிஞ்சி உறிஞ்சி
என்னையே
மொத்தமாய் உறிஞ்சி
வெளியேற்றி;
உன்னை ஊற்றி
உன் உயிர் மொத்தமும்
ஊற்றி ஊற்றி
என்னை
நிரப்புகிறது காதல்!

- ப்ரியன்.

தொலைதலும் காதலும்

உனைக் கண்ட அந்நாளில்
ஏதோ ஒன்று என்னிடமிருந்து
பிரிந்து தொலைந்து போனது!
கண் தொலைந்த குருடன் போல்
தடவித் தடவி தேடியதுதான் மிச்சம்!
தொலைந்தது எதுவென்று கூட
அறிய மாட்டாமல் போனது!
பின்னொரு நாளில்
மயங்கும் மாலைப் பொழுதினில்
எதிரெதிரே புல் தடவி
நாம் அமர்ந்திருக்க
மெளனத்தின் மத்தியில்
மெல்ல மெல்ல முட்டி முட்டி
அது முளைத்தது!
அருகில் சென்று விசாரித்ததில்
"காதல்" என்று
தன் நாமம் பகன்றது!
மெல்ல விலகி மெளனமாய்
உனை ரசிக்க
"வா! ஒரு கிசுகிசு
சொல்கிறேன்" சட்டையை இழுத்து
காதோடு காதாக
அன்று ஒன்று தொலைந்ததே?
அது உன்னிடமிருந்து மட்டுமல்ல
அவளிடமிருந்தும் களவாடப் பட்டது!
அதுவே உரமாகி இன்று காதலாக
என் உரு பெற்று நிற்கிறது!
நன்றாக பேசுகிறாய் காதலே!
காதலுக்கு பட்டம் தந்து
திரும்பி அமர்ந்த கணம்
இருட்டில் நம்மையும்
நம் மெளனத்தையும் தனிமையில் விட்டு
கத்தி பேச ஆரம்பித்தன
உன்னில் என்னதும்
என்னில் உன்னதும் என
தொலைந்து இக்கணம்
கண்டு கொள்ளப் பட்ட
நம் இதயங்கள்!

- ப்ரியன்.

கோபமும் காதலும்

என்றும் அதிர்ந்து கூட
பேசாதவன்;
திட்டி விட்டேன் கடுமையாய்!

கடைக்கண்ணில் சேரும்
கண்ணீர் துளிக் கண்டு!

பூமிக்கும் ஆகாயத்திற்கும்
குதித்து ஏசியது காதல்
காதலிக்கத்
தகுதியில்லாதவனென்று சொல்லி!

மெல்ல மெல்ல என் முகம் நகர்த்தி
உன் கண் மீது என் கண் பதித்து
முகம் தன்னை கையில் ஏந்தி
இதழ் கொண்டு கண்ணீர் துளி குடிக்க!

ச்சீ!போடா சொல்லி
அணைத்து இறுக்கி கொள்ள
உன் முகம் முழுதும்
வெட்க மருதாணி!

காதலிக்க இவனிடம் தான்
பாடம் படிக்க வேண்டும்
என்று ஏதோ முணுமுணுத்தப் படி
நகர்ந்தது காதல்!

- ப்ரியன்.

வெட்கம்

இன்னும் கொஞ்சம்
அதிகமாக வெட்கம்
காட்டேன்;
வெட்கம் பற்றி
அகராதி தாயாரிக்க வேண்டும்
இங்கிருக்கும்
மிச்சப் பெண்கள்
அறியும் மட்டும்!

- ப்ரியன்.

வாசனை

மழை நின்றும்
கிளைத் தங்கும்
துளிப் போல;
நீ வந்து
நகர்ந்த பின்பும்
மனைத் தங்கும்
வாசனை!!

- ப்ரியன்.

புன்னகை

உன்
முதல் புன்னகையில்
கை நழுவி
மறு மென்னகையில்
காண கிடைத்தது
எனக்கான காதல்!

- ப்ரியன்.

"ஆள்" கட்டி மழை

திடீர் மழையில்
நிழற்குடை கீழ்
ஒதுங்கினாய்
நீயுமொரு பகுதி
மேகமாய்!

ஊரே
சொல்லாமல் வந்த
மழையை வைய்ய!
தேவதை அருகிலிருத்திய
மழைத்தூதனை வாழ்த்தியபடி
நான்!

மின்னல் வெட்டி
திடுமென ஒர் இடி வெடிக்கையில்
நடுங்கித் திரும்பி
முகத்தாமரை மறைத்து
அர்ச்சுனா அர்ச்சுனா
சொல்லியவளை
பார்த்த கண் பார்த்தபடி
நின்றிருந்தவனை
கண்டு மெலிதாய்
வெட்கம் பூத்தாய்!

மழை ஓய்ந்து
எல்லோரும் ஓடிவிட
நான் நீ
துணைக்கு
மரம் தங்கி
சொட்டும்
சில துளிகளும்
நிழற்குடைக்கு
நன்றி பகன்ற படி!

ஏதோ மறந்தவள்
ஞாபகத்திற்கு உதித்தவளாய்
சட்டென குதித்து
ஓடிப் போனாய்!

கனவில் தேவதை
துரத்தும் குழந்தையென
என் கண்கள்
உனைத் தொடர!
பட்டென திரும்பி
சிறுப் புன்னகைப் பூத்தாய்!

அப்போது பெய்யத் தொடங்கியது
இருதயத்தில் மழை!

அந்நிமிஷம் உன் விழி கண்ட
மின்னல் வெட்டில் கட்டுண்டேன் நான்!

ஆலங்கட்டி மழைக்
கேள்விப் பட்டிருக்கிறேன்!

அன்று பெய்தது
"ஆள்" கட்டி மழை!

- ப்ரியன்.

முதல் பக்கமும் ஒரு கவியும்

நீ:
கவிதை தயாரித்து
வெகு நாட்கள் ஆச்சு!
என்னவாயிற்று உங்களுக்கு?
காதல் கோபித்துக்கொண்டதா?

நான்:
கோபித்தாலும் காதல் அழகாகி
காகிதத்தில் இ(ற)ரங்கியிருக்குமே!

நீ:
தமிழ் தீண்டாமல் நின்றதோ?

நான்:
விடமாட்டேனே தள்ளி நின்றால்
கட்டி கொள்வேனே?
அநுபவமில்லையா?

நீ:
உலகின் அழகு மொத்தமும் செத்துப்போனதுகளோ?

நான்:
இல்லையில்லை நீ உயிரோடு முன் நிற்கிறாயே!

நீ:
பின் எதுதான் எழுதாமல் தடுத்தது உங்களை?
நானா?

நான்:
என் கவிதை சுரங்மே நீதானடி
உன் அழகை களவாடித்தானே
கவிதை சேர்க்கிறேன்...

நீ:
அப்புறம் என்னதான் காரணம்?

நான்:
நீ வாங்கி தந்த குறிப்பேடு
தீர்ந்து போனதடி

நீ:
கோடிட்டு காட்டிருந்தால்
முன்னமே தந்திருப்பேனே?

நான்:
சரி தா...
ஆனால்
நிபந்தனை ஒன்று...

நீ:
என்ன அது?

நான்:
முத்தம் பதிக்க வேண்டும்

நீ:
ஆசை தோசை
வேறு கேள்
முடிந்தமட்டும் தருக்கிறேன்

நான்:
கவிதைசுரங்கத்தின் கைபக்குவத்தில்
கவியொன்று வேண்டும் முன் பக்கத்தில்

நீ:
நீ சொல் நான் எழுதுகிறேன்

நான்:
ம்.கூம் அடாது
நீயே யோசித்து எழுது
உன் பெயராயினும்
சம்மதம்...

நீ:
எனக்கும் தமிழுக்கும்
சண்டையடா சண்டை
யார் அழகு என்பதில்
போட்டியடா போட்டி

நான்:
இதுவே கவிதைதானடி

நீ:
கண்டிப்பாக நான்
எழுத வேண்டுமா?

நான்:
நிச்சயமாக...

சொல் கேட்ட மாத்திரத்தில்
குறிப்பேடு எடுத்து
யோசித்து யோசித்து
மறைத்து மறைத்து
எழுதி தந்தகணம்
முகம் முழுவதும் வெட்கத்தின்
சிவப்பு கோடுகள் திட்டுத்திட்டாய்

என்னதான் எழுதியிருப்பாய்
ஆர்வத்தில் பறித்து
வாசித்ததில்

மழலைப் போட்ட
கோலமாய்
"ப்ரியனுடன்ப்ரியா"
வரைந்திருந்தாய்

எழுதிய,எழுதக் காத்திருக்கும்
கவிதைகளெல்லாம்
ஓடி வந்து
உன் காலடியில்
சரண்ஆயின...

உனைக் கட்டிக்கொண்டு
இவள் என் காதலி
பெருமையாய் கத்தினேன்
கவிதைகளுக்கு மட்டும்
கேட்கும்மட்டும்...

- ப்ரியன்.

நிலா

பார்த்து பார்த்து
உனை சமைத்த கணம்
கைவலி பொறுக்கமாட்டாமல்
பிரம்மதேவன் தூரிகை
உதறியதில் சிந்தி
தங்கிவிட்ட ஒற்றைத்துளி
"நிலா"!

- ப்ரியன்.

காதல் நாடகம்!

யோசித்து யோசித்து
ஏதோ எழுதிக் கொண்டிருக்கையில்
பின் நின்று நுனிநாக்கால்
காதுமடல் வருட ஆரம்பித்தாய்!

காகிதம் மேலிருந்த
கவனம் முழுவதும்
காது மடலில் குவிந்த கணம்
வருட்டெனக் கடித்துவைத்தாய்!

கடித்தது நீயென்றாலும்
சின்னதாய் வலிக்கத்தான்
செய்தது!

செல்லமாய் கோபம்
மெலிதாய்
அடித்து வைக்கத் துணிந்தேன்!

எதிர்ப்பார்த்தவள்
பாதுகாப்பான தூரம்
நின்று!
உடைந்துவிட எத்தனிக்கும்
இடையில் இருகை வைத்து
புருவம் தூக்கி
என்னடாவென்றாய்
மெலிதாய் தலைசாய்த்து
புன்னகை பூத்தூவி!

அதுவரை மூக்கின்
மேல்நின்று தவம் செய்த கோபம்
மெதுவாய் கை ஊன்றி
கீழிறங்கி முன்நின்று
அவள் காதலுக்கும்
எனக்கும் ஏழாம் பொருத்தம்
சொல்லி காற்றில்
கரைந்து போனது!

பேசாமல் சில நொடிகள்
நான் நின்றுவிட!
சேயழைக்கும் தாய்ப்போல்
இருகை நீட்டி
வா வா
வாடா செல்லம் என்றாய்!

மந்திரமென காதல்
கட்டிப் போட்டதில்
மழலையென மார்ப்பில்
சாய்ந்து ஒட்டிக்கொள்கிறேன்!

சுகமோ சுகமென
நினைக்கையில்
மெதுவாய் முன்னேறி
காது மடல்
வருட முனைகிறாய்!

சீக்கிரத்தில்,
அரங்கேறும்
மற்றொரு காதல்
நாடகம்!

- ப்ரியன்.

குழந்தை

தப்பு தப்பாய் தமிழ்
வாசிக்க அறிவாய்!
தாறுமாறாய்
எழுதித்தந்தாலும்
தலைவன் எனக்காக
தரமானது என்பாய்!
கவிதை புத்தகங்கள்
காணோமென்று தேடினால்
தலையணை அடியிலிருந்து
எடுத்து நீட்டி இதனால்
என்மேல் உங்கள் கவனம்
குறைக்கின்றது என கோபித்துக்கொள்வாய்!

என்றுமில்லாமல்
இன்று புது வெட்கம்
காட்டி!
பூமியை புரட்டிப்போடும்
புன்னகை சிந்தி!
நாணி கோணி
சிரிப்பால் நனைந்து
எனையும் நனைத்து
தோள் சாய்ந்து
கையில் தந்தாய்;
படித்துவிட்டு
சொன்னேன் அருமையான
கவிதை படைத்தாய்!

சொல்லி முடிக்கும் கணம்
பொக்கைவாய் திறந்து
நம்மிருவர் முகம் நோக்கி
முதல் புன்னகை உதிர்த்தது
கையிலிருந்த கவிதை!
நம் குழந்தை!

- ப்ரியன்.

மரம்

தளிரோடு தளிர்
ரகசியம் பேசி சிரிக்கும்!
கிளையும் முடிந்தமட்டும்
வளைந்து நெளிந்து
குலுங்கி வைக்கும்!
பலமிழந்த பூக்களும்
காய்க்கனியும்
புன்னகை சுமந்து
மண் முத்தமிடும்!
தப்பி நின்ற
தளிரும் பூவும்
அளவு மிகுந்து
சிரித்து தொலைத்ததில்
கண்கடையில்
கண்ணீர் தொக்கி
நிற்கும்!

யாரங்கே மரத்தின்
கால் வேர்களில்
குறுகுறுப்பூட்டுவது!

- ப்ரியன்.

கையோடு கை

இரவு முழுவதும் நடக்கும்
நாளைய சந்திப்பின்
கனவுகளைச் சுமந்து!

காலை சூரியனோடு
உனையும் எழுப்பி
படுக்கையில் கூடக் கிடக்கும்
கைப்பேசி தடவி
காலை வணக்கம்
தவிர்த்து
"உனை நான் காதலிக்கிறேன்"
என்பதில் தொடங்கும்
என் விளையாட்டுகள்!

கடக்கையில்
பார்வை பரிமாறி
நேரம் கிடைக்கையில்
உரையாடி
சாப்பிட்டதில் தொடங்கி
எல்லாமே சொல்லி முடித்திருப்பேன்!

மெதுவாக குட்டி மா என்பாய்
என்னமா என்றால்
ச்சும்மா என்று மனம் சுளுக்க
சிரித்து வைப்பாய்!

சாப்பிட போங்க
செல்லமாய் சொல்லுகையில்
நிரம்பியிருக்கும் பகுதி
வயிறு!

மதியம் பேச்சே
வேறு மாதிரியிருக்கும்
நான் சொல்லுதல் உனக்கு புரியாது
நீ சொல்லுதல் எனக்கு புரியாது
உண்ட மயக்கமல்ல
காலையிலிருந்து நமை நாமே
தின்ற மயக்கம்!

சின்னச் சின்னதாய்
மனஸ்தாபங்கள்
சிணுங்கல்கள்
அதை தொடரும்
மன்னிப்பு கோரல்கள்!

பல நாட்கள்
மன்னிப்பு கிடைக்காமல்
போகும்;
பணி முடிந்து
கையோடு கை பிணைத்து
வீடு திரும்புதலுக்காகவே!

- ப்ரியன்.

முதல் பூ

வெள்ளை
மஞ்சள்
சிவப்பு
வர்ணங்களில் பல
பரவி கிடக்க...
எது வேண்டும்?
கேட்டபடி கசங்கியதை
தலையில் கட்டப் பார்க்கும்
கடைக்காரனைத் தட்டி;
சிவப்பில் விரிந்தும் விரியாததுமாய்
கண்சிமிட்டும் ஒன்றை தேர்ந்து;
மஞ்சள் அழகாயிருக்கும்
வியாபார தந்திரம் தவிர்த்து;
ஒன்றா?பூங்கொத்தா?
தொன தொனப்பை துட்சமாக்கி;
கையடக்கமாய் கத்தரித்து
தரச் சொல்லுகையில்
ரூபாய் எட்டு ஆகும் பரவாயில்லையா?
பத்தாய் கையில் திணித்து
பந்தாய் அவன் ஓடுகையில்
நிதானித்து நின்று கொஞ்சம் சிரித்து வந்தேன்.

அன்றும்,
உனக்கான முதல் பூ வாங்குகையில்
எனைப் பார்த்தும்
யாராவது நகைத்திருப்பார்கள்!!

- ப்ரியன்.

கவிதை ஒர் குழந்தை

காலை ஓட்டத்தில்
கால்சுற்றும் நாய்குட்டியாய்;
அலுவலக அவசரப்
புறப்பாட்டில் அவஸ்த்தையாய்;
கால்மாற்றி காலுறை
நுழைக்கையில் கடுப்பாய்;
படிக்கட்டில் ஒட்டிய
பேருந்துபயணத்தில் இடிக்கும் பயணியாய்;
பாதைக் கடக்கையில்
எதிர் கடக்கும் பள்ளிச்சிட்டாய்;
அலுவலக கலந்துரையாடலில்
சுவற்றில் ஓடியாடும் பல்லியாய்;

கூடவே துரத்தி வந்து
பிடித்துக்கொண்டால்தான் ஆச்சு என
நச்சரிக்கும்!

வேலையெல்லாம் முடித்து
அதற்கென காத்திருக்கையில்;

முடிந்தால் பிடித்துக்கொள்
சொல்லிச் சொல்லி
விலகி ஓடி ஒளியும்
கவிதை;
"ஒர் குழந்தை"!

- ப்ரியன்.

குடைக்குள் மழை

குடைப் பிடித்து
காத்திருக்கிறேன்;
நீயும் வந்தால்
நனைந்து கொண்டே
செல்ல!

- ப்ரியன்.

பரிசு

நேற்று இரவு,வானம் பார்த்துக்கிடந்த கணம் எனக்கே எனக்கான என் ப்ரியா பக்கத்திலிருந்தால் எதை என் பிறந்தநாளுக்கு(அட இன்னிக்குதானுங்கோ!28.03.)பரிசாக என்ன அளிப்பாள்?என எண்ணியபோது தோன்றியது!இதை ப்ரியன் எழுதுனதா படிக்காமே,என் ப்ரியா எழுதுனதா நினைச்சு படிங்கப்பா!


ஏதோ பேச்சுக்குரல்
கேட்டு விழித்தெழுந்தேன்!

"காது கடித்து வாழ்த்துரைப்பாள்!"

"இல்லையில்லை அவன்
விட்டுச் சென்ற கைக்குட்டையில்
இவள் பெயர்
பதித்து தருவாள்!"

"பைத்தியங்களா,
விலையுயர்ந்த கைக்கடிகாரம்
கட்டிவிடுவாள்!"

"இது என்ன சில்லறைப் பரிசுகள்
மணவாளனுக்கு இவைகளா?
ஒற்றை முத்தம் போதாதா?"

கூடிக் குசுக்குசுவென பேசிக்
கொண்டிருந்தன
சின்னச் சின்னதாய்
கைகால் முளைத்த
கவிதைகள்!

இமை விழித்த சப்தம் கேட்டிருக்கும்
ஓடி வந்து சுற்றி நின்று
என்னத் தரப்போகிறாய்!
நச்சரிக்கத் தொடங்கின
பிசாசுகள்!

முத்தமா?
மொத்தமுமா?
கேட்டுவிட்டு
அடிபடாமல் விலகிக் கொண்டது
குறும்புக்கார கவிதையொன்று!
மொத்ததில் வெட்கத்தில்
கொஞ்சம் சிவந்து வைக்க!

அதுவரை விழித்தும்
விழிக்காதவனாய் நடித்தவன்
வெட்கத்தை விட அழகானப் பரிசா?
வாய்ப்பில்லை!! சொல்லி
கன்னத்தில்
உள்ளங்கை வைத்து
வெட்கம் புசிக்க ரம்பித்தாய்!

அப்படி நீ செய்ததில்
இன்னும் கொஞ்சம்
வெட்கத்தில் அதிகம்
சிவந்ததுதான் மிச்சம்!

- ப்ரியன்.

அழகு

அழகான என் கவிதைகளையெல்லாம்
அழைத்து உலகத்தில்
அழகு எதுவென்றேன்?
இதில் என்ன சந்தேகம்
நாங்கள்தான்
முந்திரிக் கொட்டையென
முன்னால்
வந்து நின்றன!

சிரித்துக் கொண்டே
உன் பக்கம்
பார்த்தேன்!
ம்.ம்கூம்.கொஞ்சம் கோபமாய்
கனைத்தாய்!

ஐய்யோ!
இந்த அழகு பிசாசு
இங்கேயா இருக்கிறது
சொல்லி ஓடி ஒளிந்தன
சட்டென கால் கை முளைத்த
கவிதைகள்!

- ப்ரியன்.

நிலா பார்த்தல்

ஊரே நிலா இரசிக்க
காத்துக் கிடக்க!
நிலா மட்டும்
உனை இரசிக்க
காத்துக்கிடக்கிறது!

- ப்ரியன்

தலையணை!

விலை எண்பது
சொன்னக் கடைக்காரனுக்கு
நூறாய் கொடுத்து
சில்லறை அவனுக்கு விட்டு
எடுத்து வந்தேன்!

வழியிலேயே கேட்டது
அவள் தொட்டுக்காட்டிச்
சென்றதால்தானே என்
விலை கூடியது
"வாயாடி" தலையணை!

பத்திரமாய் படுக்கையில்
அமர்த்தி சன்னல் வழியே
பராக்கு பார்த்தவனை
கூப்பிட்டழைத்து எனக்கொருப்
பெயர் வையேன் பாசமுடன் கேட்டது!

உன்னை அல்லா
வேறேதும் அறியா நான்
தேடித் தேடி
கடைசியில் உன்பெயரையே
வைத்தேன் அதற்கும்!!

ஹை!அழகின் பெயர் எனக்கா?
துள்ளிக் குதித்தது
தலையணை!!

படுக்கும் பொழுது
பக்கத்திலிருத்தி பார்த்திருந்தேன்!
ம்.ம்கூம்.கட்டிக்கொள்ள மாட்டாயா?
சிணுங்கி கொண்டே நெருங்கி வந்தது!

பாவம் வலிக்குமென
மெதுவாக கட்டியணைக்க
ஆண்மகனா நீயென
எள்ளி எள்ளி
என்னிறுக்கம் கூட்டியது!

அணைப்பில் சொக்கி நான் நிற்க
கதகதப்பில் தூங்கிப் போனது
தலையணை!
சற்று பொறுத்து
என்னிறுக்கம் அதிகமாகி
நான் உறங்க
அதன் உறக்கம்
கலைந்தது!!

இரவின் இருடெல்லாம் வடிந்துவிட
இரவெல்லாம் விழித்த
கண் மேலும் சிவக்க
அழுது கொண்டிருந்தது
தலையணை!!

உனை பார்க்கும் அவசரத்தில்
அதை அப்படியே விட்டு
அலுவலகம் ஓடிவர!
பகலில் என் நிலவுடன்
நாள் கழிய!
இரவுக்கு இல்லம் கண்டேன்!

பக்கதில் படுத்தபடி
தலையணையை நான் அழைக்க
போடா சொல்லி தள்ளி
படுத்தது தலையணை!

என்னப்பா!தவறுசெய்தேன்??

ம்.ம்கூம்.உனக்கே தெரியாதாக்கும்
ஒற்றை வரி உச்சரித்து
உச்சஸ்த்தனியில் மறுபடியும்
அரம்பத்திலிருந்து அழுகைத்
துவக்கியது!!

கட்டியணைத்ததில்
காயம் கண்டாயா?

காயம் கண்டால்
அழுவேனா???

அப்புறம் என்ன என் கண்ணே??

காலையில் அழுதுகிடந்தேன்
நீ அருகில் வந்து அரவணைப்பாயென்று
அருகில் வராமலேயே ஓடிப்போனாய்!!

ஐய்யோ!!மாபெரும் குற்றமாயிற்றே
என்ன தண்டனை!!

ம்.ம்.ஒற்றை முத்தம் போதும்!!
சொல்லி
முகமலர்ந்தது தலையணை!

வாயாடலில் மட்டுமல்லடி
காதலிப்பதிலும்
உன்னைப் போலவே இருந்து
தொலைக்கின்றன
நீ தொட்டுத்தரும் பொருற்களும்!

- ப்ரியன்.

கைம்பெண்

குங்குமம் தவிர்த்து
ஒட்டுப் பொட்டைத்
தேடும் நேரம்!

மனதுக்குப் பிடித்த
மல்லிகைத் தவிர்த்து
வாசம் குறைந்த மற்றப்பூ
நாடும் நேரம்!

பேருந்தில் முட்டி மோதி
அங்கம் யார்மேலும் படாமல்
செளகரியமாய் ஓரிடம்
கண்டு நிற்கையில்
யவனோ ஒருவன்
கம்பளிப்பூச்சிப் பார்வையில்
மார்பகம் தீண்டப்படும் நேரம்!

மாதாமாதம் விலகி நிற்கும்
முன் இருநாள்
பின் மூன்றுநாள்
பெண்மை பொங்கி
கொல்லும் நேரம்!

ஆசிரியர் அப்பாகிட்டே
கையெழுத்து வாங்கிட்டுவரச் சொன்னாங்க!
அறியாப் பிள்ளைகள்
மதிப்பெண் பதிவேட்டை
நீட்டும் நேரம்!

இவைத் தவிர்த்து
எப்போதாவது
வருகிறது உந்தன்
ஞாபகம்!

என்றாலும் இன்னும்
சில காலம்
உயிருடன் இருந்திருக்கலாம்
நீ!

- ப்ரியன்

பெயர்

மனதில் எழுதி
அடித்து திருத்தி
மாற்றியமைத்த பிறகுதான்
மையுதிர்க்கிறேன்!

என்றாலும் எங்காவது
ஓரிடத்திலாவது நிகழ்ந்தே
தீருகிறது
அடித்தலும் திருத்தலும்
காகிதம் கிழித்தலும்;

வலது ஓரத்தில்
புனைப்பெயரெனச் சொல்லி
சின்னதாய் எழுதிவைக்கும்
உன்பெயர் நீங்கலாக!

- ப்ரியன்.

பாவம்

வீடெங்கும் உறவினர்கள்
வீதியெங்கும் நண்பர்கள்
பெண்கள் தொடர்களைத் தொடர முடியாமல் போனக்

கவலையில் அழுதுவைக்க!
ஆண்கள் ஆவேசமாய் அரசியல் பேச!

சிரித்துக்கொண்டே கையசைத்து
மேல் நோக்கி புறப்படுகிறேன்!

அதிசயம் தேவதூதன்
சொர்க்க வாசல்
திறக்கிறான் எனக்கு!

"அவ்வளவு நல்லவனா நான்?"
கேட்ட கேள்விக்கு

"இல்லையில்லை!
சொர்க்கத்தில் நுழைபவர்கள்
எண்ணிக்கைக் குறைந்துப் போனதில்
வரையறைகள் குறைக்கப்பட்டுவிட்டன!"
சத்தமாய் சிரித்துவிட்டேன் நான்!

உள்ளே நுழைந்தால்
வள்ளுவனும் ஒளவையும்
சத்தமாய் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்
சத்தியமாய் புரியவில்லை;
சுத்தத் தமிழாயிருக்கும்!

சொர்க்கம்
வெறிச்சோடிக் கிடக்க!
பக்கத்திலிருந்த தூதனிடம்
"ஏனப்பா,எங்கே சிவனும்
மற்றையோரும்?"

"இப்போதே காண வேண்டுமா?
இரவுவரைக் காத்திருப்பாயா?"

ஐயோ!மேலோகத்தில் இரவும் பகலும்
சில கோடி ஆண்டுகளல்லவா?

"இப்போதே!"

"கொஞ்சநேரம் நரகத்திலிருக்க
ஆசைப் போலும்!"

"அய்யோ!என்ன சிவனும் திருமாலும்
நரகத்திலா? ஏன்??"

"அவர்களையேக் கேட்டுக்கொள்" சொல்லித்
தள்ளிவிட்டான் அதல பாதாளத்தில்!

சுற்றிலும் தீயெரிய
பேய்கள் சுற்றித் தின்ன துறத்த
ஓடியோடி ஒரு அடியும் இனி நகரமுடியாது
என்ற கணத்தில் நின்றால்,

அங்கே,
சவுக்கடி வாங்குவது
சிவனா?
எண்ணெய் சட்டியில்
சாய்ந்து வெந்துக் கிடப்பது
திருமாலா?
அய்யோ அங்கே
சுற்றிச் சுற்றிச் செக்கிழுப்பது
ஏசுவல்லவா?
நபிகளா?அது
நரமாமிசம் சமைப்பது?

என்னப்பா இதெல்லாம்?
சிவனிடம் கேட்டதிற்கு
ஏசுவும் நபியும் திருமாலும் சிவனும்
கூட்டாய் சொன்னது
"மனிதனின் பாவமேற்று
பாவமேற்று பகுதிநேரம்
நரகத்தில் வெந்துதணிகிறோம்!
விரைவில் முழுநேர வேலையாகும் போல!"
பொலப் பொலவென
கண்ணீர் விட்டார்கள்
கடவுள்கள்!!

கொஞ்சமாய் பாவம் செய்வதைக்
குறைத்துக் கொண்டாலென்ன?

"கண்ணீர் விடும் கடவுள்களுக்காக!!"

- ப்ரியன்.

மோக கணம்

அரைமணி நேரமாச்சு
குளியளறை நுழைந்து
என்ன செய்கிறாய்?இன்னமும்...
சளிப்பிடிக்க போகுது
கொஞ்சிக் கத்திக் கெஞ்சிப் பார்க்கிறாய்...
ம்...ஹ¤ம் வருவதாயில்லை நான்!

தாள்ப்போடா கதவை வேகமாய்
தள்ளி தடுமாறி விழப்போனவளை
தாங்கிக் கொள்கிறேன்!

திட்டிக்கொண்டே பகுதிகுளியலில்
வெளியிழுத்து தலைத்துவட்டுகிறாய்!
ஒரு தாயின் பரிவோடு...

"என்னது நெஞ்சுப்பகுதியில்?"

"நேற்று மோக கணத்தில்
பதிந்த இதழ் சாயமடி என் தங்கமே!"

"ஓ!இது அழியாமல் காக்கத்தான்
இவ்வளவு நேரமா?"
மனம்படித்தவளாய்
"அழுக்கு புருஷா!"
சொல்லியபடி அழுக்கென
துடைக்க துணிகிறாய்!

"ஐயோ!வேண்டாம்!!"

"இது அழுக்குடா!!"

"இல்லையில்லை நாம் கலந்ததுக்கான
அடையாளமடி!!"

"ச்சீய்!அழுக்கான்! சும்மாயிரு" - அதட்டி
மீண்டும் துணிகிறாய்!!

"சரி அழுக்கை
துடைக்காமலே அழகாக்கிவிடு.."

"எப்படி?"
புரியாமல் நீ
நெற்றியில் ஒற்றைக் கேள்வி குறியுடன்!!

"இதழ் அடையாளத்தை
புதுப்பித்து விடடி"

"காலங்காத்தாலே உன்னை..."

வாய் வார்த்தை காற்றில் கலக்கும்முன்
பின்னணைத்து
இதழ் கொண்டு இதழ் மூடுகிறேன்...

திக்கித் திணறி விடுவித்து

அடிக்க துரத்துகிறாய் நீ!!
அடிவாங்க நான் நின்றாலும்
துரத்த முடியாமல் நீ சென்றாலும்

மொத்ததில்
வெகுசீக்கிரத்தில்
நிகழும்
மற்றொரு மோக கணம்!

- ப்ரியன்.

பிரபஞ்சம்

இந்திய எல்லையில்
அத்துமீறிப் பறந்த
பாகிஸ்தான் விமானம்
சுட்டு வீழ்ப்பு!

தமிழ்நாட்டிற்க்கு
தண்ணீர் தர அனுமதியோம்!
கர்நாடக விவசாயிகள்
சாகும் வரை உண்ணாவிரதம்!

ஏரியாவிட்டு ஏரியா வந்து
காதலித்த வாலிபருக்கு
அடி உதை!

வாய்க்கால் தகறாறில்
அண்ணன் தம்பி
வெட்டிக் கொலை!

தாங்கி நிற்கும்
தினத்தந்தி!

சில "அடிகள்"
நிர்ணையிக்கும் ஒருவனின்
வாழ்வையும் சாவையும்!
யாரோ பேசிக்கொண்டு
நடக்கிறார்கள்!

படித்துக்கொண்டும்
கேட்டுக்கொண்டும்
காலியாகிப் போன
டீ தம்ளரை தரையில் வைத்து
மெலிதாய் நகைத்தப் படியே
மெல்ல கடந்துச்
செல்கிறான்
பிரபஞ்சத்தின்
"சொந்தக்காரன்!"

- ப்ரியன்.

கோலம்

மார்கழி முன்பனியில்
நடுங்கிகொண்டே உன் வாசல்
கடந்தவனைக் கண்டு
உள்ளோடிப் போனாய்!

பாதியில் நீ விட்டுப் போனக்
கோலத்தின் பரிதாப
குரல் கேட்டு
திடுக்கிட்டு நின்றவன்!

உன் விரல் பட்டதால் என்னவோ
"பகுதி கூட அழகாகவே இருக்கு!"
கதவோடு ஒட்டி நின்றவளுக்கு
கேட்கும் குரலில்
சொல்லிவிட்டு நகர்ந்தேன்!!

நகர்ந்துவிட்டதை உறுதிச்
செய்து வெளிவந்தவள்!
என் பாதம் விட்டுச் சென்ற
சுவட்டில் நின்று
அப்படியும் இப்படியும்
திரும்பிப் பார்த்து!
"ஆமா,அழகாகத்தானிருக்கு"
சொல்லிய வண்ணம்
பகுதிலேயே விட்டுவிட்டு
போனாய்!
நான் சொன்னதற்காகவே!

உன் விரல் படாமல்
முக்தி மறுக்கப்பட்டதில்
முறைத்து தள்ளுகிறது
கோலம்!நான்
வாசல் கடக்கும் போதெல்லாம்!!

-ப்ரியன்.

காதல் கவித்தொடர்

முன்னுரை

வணக்கம் நண்பர்களே!

நன்றி! வேறுவார்த்தைகளில்லை என்னிடம்!

விக்கியையும் ப்ரியாவையும் தனிமையில் விட்டு கொஞ்சமே கொஞ்சம் உங்களுடன் பேச ஆசை! அமரலாமா?நன்றி!

முதலில் தன்னிலை விளக்கம் தரவேண்டிய கட்டாயத்தில் நான்!என்னை மிக நன்றாக அறிந்தவர்கள் கூட யாரவள் என வினவுகின்றனர்...தமிழ் கொண்ட வெற்றி!

உண்மையில் "விக்கி","வித்யா","சின்னி","அம்மா","அப்பா" அப்புறம் "கலை" தவிர மற்றவை கற்பனையே! ம்.ப்ரியாவும்...மும்பையில் ஒரு மழைப்பகலில் வேலையைவிட்ட புதிதில் இப்படி ஒருத்தி காதலியாய் கிட்டினால்?போட்ட விதை...அது ஆயிற்று ஒன்றரை வருடங்கள்...இப்போதுதான் உயிர் பிடித்திருக்கிறது!மற்றபடி பலரும் "மெயிலி" கேட்டபடி உண்மை சம்பவமொன்றுமில்லை!

நன்றி சொல்லவேண்டிய நேரம்!உயிர் கொடுத்து வளர்க்கும் தாய்க்கும்!எல்லோரும் தம்மக்களை ஆங்கிலப்பள்ளியில் சேர்க்க! எனை தமிழ்ப்பள்ளியில் சேர்த்து உதவிய முதன் ஆசிரியன் தகப்பனுக்கும்!கன்னடம் பேசும் எனையும் ஒரு பொருட்டாய் மதித்து என்னிடம் தங்கி நிற்கும் என் தமிழுக்கும்!தப்பாய் சொல்லுகையில் திருத்தி;துவண்ட கணம் தட்டிக்கொடுக்கும் என்னினிய நண்ப
நெங்சங்களுக்கும்!இவர்களுக்காவது ஏதாவது செய்திருப்பேன்...முகம் கூட தெரியாமல் "மெயிலி" உற்சாகம் கொடுத்த சில நண்ப நல்லுள்ளங்களுக்கும்!கட்டக்கடைசியாய்,ஆனால் சத்தியமாய் இதுவரை கண்ணாமூச்சிகாட்டினாலும் என்றாவது நான் கண்டுகொள்ளப் போகும் என்னருமை "ப்ரியா"விற்கும்!ஐயோ கோபிக்காதே காதலே...தமிழும் நானும் தடுமாறி பாதைதெரியாமல்
முழித்த நேரமெல்லாம்...கைப்பிடித்து வழி காட்டி அழைத்து வந்த குழந்தை "காதல்" உணர்ச்சிக்கும்...

இது சமர்ப்பணம்!

சிலருக்கு பிடித்திருக்கலாம்! - மகிழ்ச்சி
பலரை இம்சித்திருக்கலாம்! - மன்னிக்க!

மீண்டும் இம்சிக்கவோ! மகிழ்விக்கவோ!
கட்டாயம் வருவேன்...இப்போதைக்கு விடைக்கொடுங்கள்!

திட்டோ?பாராட்டோ?

mailtoviki@gmail.com அனுப்புங்கள்!

நன்றி!

ப்ரியமுடன்
("ப்ரியாவுடன்"னு போட வேண்டிக்கோங்க!)
ப்ரியன்...


மொட்டு

காதல் - 1

16.7.2001 திங்கட்கிழமை
"விழியீர்ப்பு விசைகள்"
வாசித்துக் கொண்டிருக்கையில்தான்
நுழைந்தாய் எதிர்வீட்டுத்
தோழியின் புதுத்தோழியாய்!

காதல் - 2

டேய் இது "ப்ரியா"
அடுத்த வீட்டில் புதுசா
குடிவந்திருக்காங்க - தோழி...

அறிமுகத்தில்
"வணக்கம்" சொல்லி நீ
கைக்குவிக்கையில்

எதோ உள்ளுடைந்து
அலறியது;

இவள் இவள்
இவளேதானென்று!!!

காதல் - 3

அம்மா குங்குமம்
இட்டு - மகாலட்சுமியாய் இரு
வாழ்த்தினார்கள்
வழக்கமானதுதானென்றாலும்
மருமகளை வாழ்த்தியதாய்
பட்டது எனக்கு!

என்றும் மலரா
குறிஞ்சிப் பூ!
எங்கள் வீட்டு ரோஜா!!
உந்தன் கூந்தலில்
தங்கையின் தயவு!

நாய்க்குட்டியும் கூட
உன் காலடியில் அடிபடாமல்
சுற்ற கற்றுக்கொண்டது!

நான் மட்டுமே
தள்ளி நின்று
ரசித்தேன்!
தோழியின் கேலிப்
பார்வையினுடே!

கண்டிப்பாக அன்று
திருஷ்டி கழித்திருப்பார்கள்
உன் வீட்டில்!!

காதல் - 4

நீ வந்து சென்ற
கணத்தில் டைரி
சுமந்தன இரு கவிவரிகள்!

கொஞ்சம் தள்ளி
நின்று ரசித்தேன்
அவையிரண்டும் நீ
விட்டுப் போன
உன்னிரு கருவிழிகள்!

காதல் - 5

உனக்கு பிடித்த
சுஜாதாவும் வைரமுத்துவும்
என்னிடத்தில் இருந்ததில்
செளகரியம்
அடிக்கடி வந்துபோனாய்!

காதல் - 6

தோழியும் நானும்
பேசிக் கொண்டிருக்கையில்
சத்தமிடாமல் இடையில் வந்தமர்ந்தாய்!
ஒரு உலகப் போர்
தொடங்கியது நெஞ்சில்!

காதல் - 7

அம்மாவின் அழைப்பிற்கு
தோழி நகர்ந்துவிட!

வானம் பார்த்தும்
பூமி கண்டும்
அமர்ந்திருந்த நம்மை
புன்னகைத்த படியே
மெதுவாய் கடந்தது
கடிகாரம்!

மெதுவாக நீதான்
அரம்பித்தாய்!
"கவிதை எழுதுவிங்களாமே"
'கலை' சொன்னா...

மேலன்னதில் ஒட்டிய
நா விழ மறுத்ததில்
என் புன்னகையால் கழுவப்படுவதற்காகவே
அமைந்ததாய் ஆனது அந்நிமிடம்!!

காதல் - 8

அடுத்த நாளே என்
பழைய கவிதைகளைத்
தேடித் தேடி
புதிதாய்
புனைப் பெயர்
எழுதித் தந்ததாய்,
ஞாபகம்!

காதல் - 9

அடுத்த நாள்!
கவிதைகளைக் கைசேர்த்தவள்!
விமர்சனம் ஏதும் சொல்லாமல்

காதல் கவிதை
எழுதுவீங்களா?

கேட்டபோது
'ம்' என்ற வார்த்தை
மட்டுமே துப்ப முடிந்தது!
இப்போது அதை மட்டுமே
எழுதி தொலைக்கிறேன்
என்பதை மனதில் சுமந்துகொண்டு!

சிரமப்பட்டு உச்சரித்தாய்
எனக்காக ஒன்று வேண்டும் நாளை!

'கண்டிப்பாக'
என்னை அடக்கிவிட்டு
உற்சாகமாய் துள்ளிக்குதித்து
உரக்கச் சொன்னது
உள்ளிருந்த கவிதை!

காதல் - 10

வெளியே போய்வந்தவன்
வீட்டையேப் புரட்டிப் போட்டேன்!
கவிதைக் குறிப்புகளைக்
காணோமென்று!
அம்மா மெதுவாகச்
சொன்னாள்;
நீ வந்துச் சென்றாயென்று!

நீ எடுத்துச் சென்றிருக்க மாட்டாய்!
எனக்குத் தெரியும்!
பழகிய நாய்க் குட்டியென
அவைதாம் உன் பின்னால்
ஓடி வந்திருக்கும்!

காதல் - 11

நன்றி கெட்டதுகள்!!
காகிதம் போட்டும்
மசி ஆகாரமிட்டும்
வளர்த்தவனைவிட்டு!

நேற்று வந்தவளுடனா
ஓடிவிட்டீர்?!
மறுபடியும் காலெடுத்து
வையும் காலொடித்து விடுகிறேன்!

உரக்கமாய் உலறியவனை
அம்மா சிரித்தவாறே
தலையில் அடித்துக் கொண்டு
"வித்யா இவனுக்கு முற்றிவிட்டது"
தங்கையிடம் சொல்வதாய் என்னிடம்
சொல்லியவாறு நகரலானார்!

உள்ளே உறங்கப்போன தங்கைகூட
குரலுக்கு ஒர் கணம்
எட்டி சிரித்து விட்டுப் போனாள்!

ஆகா,இவர்களுக்கு புரிந்து விட்டது!!!

உனக்கும் கவிதைகளின்
உலறல் புரிந்துபட வேண்டும்!!
ஏக்கம் ஒருபுறம்!!

புரிந்துபடுமோ??பயம்
ஒருபுறம்!!

உன் உணர்ச்சி காண
கவிதை தாங்கி நின்ற ஓர்
காகிதமாயிருந்திருக்கலாம்
அன்று மட்டும்! - தவமொருபுறம்!!அழகான அவஸ்த்தை
இரவு முழுவதும்!!

காதல் - 12

பத்திரமாய் கைச் சேர்த்தாய்!
ஆயிரம் முறை மன்னிப்புக் கோரினாய்!
அற்புதமென்றாய்!
யாரவளென்றாய்!

பாவிகளா?இதை கூட சொல்லாமல்
இந்நேரம் என்னடா செய்தீர்கள்;
அவள் வீட்டில்! கடிந்து கொண்டேன்
கவிதைகளிடம்!

ஒருவேளை உன்வாசிப்பை
தாலாட்டு என உறங்கி
போனதுகளோ??

மனம் முழுவதும்
குழப்பரேகைகள்!
உன் முகம் மட்டும்
பாலில் துடைத்த
நிலவென தெளிவு!

சொல்லுடா சொல்லுடா!
அவள் நீதானென்று
சொல்லிவிடுடா!
உன் மனம் கதறிய வார்தைகள்
அன்று கடைசி வரைஎனக்கு கேட்கவே இல்லை!

காதல் - 13

சில நாள்
செலவில்...
புனைப்பெயரின் விளக்கம்
கேட்டாய்!!

புரியவில்லையா?
என் மனம் வினவியதும்;
என் பெயர்தானே??
உன் மனம் முணுமுணுத்ததும்;

கேட்டுவிட்ட
தோழியின்,அம்மாவின்
நமட்டுச் சிரிப்பு!!

இன்னமும் கண்களில்!!

காதல் - 14

தங்கையிடம் காட்டிய
புதுப்பாசம்!

தாயிடம் பகிர்ந்துகொண்ட
புதுநேசம்!

அப்பாவிற்கு காட்டிக்கொடுத்திருக்கும்
நான் காதலிலிருப்பதை!

என்னடா?ஆள் புதுசா இருக்கே?
ஏதாவது காதல் கீதலா??
அப்பா கேட்ட போது...

அது வந்துப்பா...
ஒண்ணுமில்லையே!
தட்டுத் தடுமாறி
மழுப்புகையில்!

"சீக்கிரம் சொல்லிடுடா இல்லாட்டி
உன் அம்மா மாதிரி
ஒருத்திகிட்டே தான் கடைசிலே
மாட்டிக்குவே!"

சொல்லிய அப்பாவிற்கும்
அம்மாவிற்கும் மெலிதாய்
செல்லச் சண்டை துவங்கிய கணம்;

எத்தோச்சையாக வந்து
ஓடிப்போனதாகச் சொன்னது
உன் ஓட்டத்துக்கு
ஈடுகொடுக்காமல்
பின்தங்கிப் போன கூந்தல் வாசனை!

காதல் - 15

"ப்ரியா"வைக் காதலிக்கிறாயா?

இது நண்பியின் முறை!

"ம்" என்றது மனம்!

இல்லை என இப்படியும்
அப்படியும் ஆட்டும்
தலை மட்டும்!

தெரியவில்லை குளறியது
நா மட்டும்!

கண்டிப்பா அதுதான்!

அவகிட்டே சொல்லிடுட்டா??
கேட்டபடியே நகர்ந்த தோழியை
வேண்டாம் வேண்டாம்
முணங்கியபடி துரத்தியது
சத்தம் மட்டும்!!

முன்னேறிய துவேசியை
விட்டுவிடு விட்டுவிடு
பின்னுக்கு இழுத்தது உள்ளம்!

வரவேற்பறை வரை முன்னேறியவள்!
நீயே சொல்லிவிடு
நாளை!
திரும்பி வந்தவளை...
திட்டிக் கொண்டு
எழுந்தவனுக்கு...

கடைசி வரைத் தெரியாது!
வரவேற்பறையில் நீயும்
உன் நாணமும் சம்மணமிட்டு
என் தவிப்பை ரசித்து
கொண்டிருந்தது!

காதல் - 16

"பரதேசி" இப்படித்தான்
இதே வார்த்தைதான்
உபயோகித்தாள் தோழி!

ஏன்டா நேற்று
சொல்லவில்லை!
என்றும் தவறாமல் தரும்
கவிதை கூட தரவில்லை?

ஏன்டா?கேட்டவளிடம்
பயமாயிடுத்து! "கலை"...

பயதைத் தூக்கி
குப்பையிலே போடு! - உன்
காதலைத் தூக்கிகைப்பையிலே போடு!

தைரியம் தானா வரும்!
நானும் ப்ரியாவும்
நாளை கடற்கரைப்
போறோம்!
நீயும் வர்றே!
சொல்றே!
மறுத்துட்டா??
மறுக்க மாட்டா...நான் கியாரண்டி!
சொல்லிய படியே
நகரும் தோழியை
நான் மட்டுமல்ல
நட்பும் ஒழிந்திருந்து
என்னை பொறாமையாகப் பார்த்தது!

அவள் கொடுத்துப்போன
தைரியத்தில்
என்னைப் போலவே
இரவெல்லாம் கண்விழித்து
காத்திருந்தது என்னறை
மின்விளக்கு...
நாளை
நான் காணப்போகும்
முதல்காதல் பகலுக்காக!

பூ

காதல் - 17

உயிர்க்காதல் சுமந்த
பேனா துப்பிய
வார்த்தைகள் காகிதத்தில்!
துப்பாத பல காவியங்கள்
மனதில்!
மறைத்து வைத்த
ஒற்றை ரோஜாவுடன்! - நான்

தோழியுடன்
துணைக்கு நீயுமோர்
ரோஜாவாய்!

வாருங்களேன் கால் நனைத்து
திரும்புவோம்! - அழைக்கும் தோழி
"இல்லை நாங்கள் வரவில்லை"
எனக்கும் சேர்த்து பதில்!

முகம் நோக்கி என் உணர்ச்சி படித்து
மண் நோக்க அலையாகும் - கண்!

இருவரின் படபடப்பை
புதுக்கவிதையென அலை நோக்கிப்
புறப்பட்டது நட்பு!

ஏதேதோப் பேசிக்கொண்டோம்
நம் காதலை தவிர!

ஏதோ குருட்டு தைரியத்தில்
ரோஜா எடுத்து நீட்ட இருந்தவனை
ஒரு நிமிடம் திடுக்கிடவைத்தது
உன் குரல்!

"விக்கி இதைப்பாரேன்"

"என்னிதயத்தில் நீ காதல் பூ
நான் சூட்டிக் கொள்ளவா?
இல்லை சாமிக்கு அனுப்பவா?"

மணலில் எழுதியிருந்தாய்!
"அருமை ப்ரியா!!"
சொல்ல வந்தவன்
வார்த்தைத் தொண்டையில்
சிக்கி விக்கித்துப் போனேன்...

அது என்ன வலது ஓரத்தில்
மணி மணியாய் இருவார்த்தைகள்
இல்லையில்லை ஒருவார்த்தை
"ப்ரியாப்ரியன்" ?
புரிந்த கணம்
உண்மையில்
புதிதாய்ப் பிறந்தேன்
நான்!!

காதல் - 18

வார்த்தைகள் குண்டுகளாய்
உருண்டு விளையாடின
தொண்டைக்குழிகளில்!

நம்மை கண்டு
கிண்டல் பேசி
நகர்ந்தன நண்டுத்
துணைகள் இரண்டு!

நீயென்ன புது மொழி?
மெளனத்திடம் மெல்லியதாய்
விசாரித்துக் கொண்டிருந்தது தமிழ்!

ஒருவரை ஒருவர்
மாறி மாறி
அவசரஅவசரமாய்
தின்றுவிட முயன்றதில்
துளிர்க்கும் கண்கள்!

இப்படித்தான் இவற்றைத்
துணைக் கொண்டுதான்
அமர்ந்திருந்தோம்;
தோழி வந்து நம் தோள்
குலுக்கும்வரை!

காதல் - 19

தோழி வாங்கிவந்த
"ஐஸ்கிரீம்"
உருகிப் போவது கூட
தெரியாமல்
ஒருவரை ஒருவர்
விழுங்கி கொண்டிருந்தோம்!

தோழியை சாட்சியாக
வைத்துக்கொண்டே!

"நேரமாகுது...போகலாம்" - சொல்
தோழி இதழ் உதிக்கும் முன்
"நாங்கள் பின் வருகிறோம்
நீ போ!" சொல்லும் எனை
நீங்களாப் பேசியது? - எனப்
பார்த்தாய்...

அடி...........
ஆளப் பாரு!
மிரட்டி எழவைத்த
தோழியை கோபத்தோடு
பின் தொடர்கிறேன்
நான்!

மார்பின் குருக்கே
கைக் கட்டி
ஓரக்கண்ணால்
எனைப் பார்த்து
சிரித்துக் கொண்டே
தோழியுடன் சம்பாஷணை
செய்தபடி நீ!

கொண்டுவந்த ரோஜாவை
கடல்
ரசிக்கவிட்டு வந்தேன்!

கொஞ்ச தூரம் கடந்து திரும்பி
பார்த்தேன்!
அதுபாட்டிற்கு யாருக்கோ
வரவேற்பு
தந்துகொண்டிருந்தது!

அட,துணைக்கு மூச்சிரைக்க
ஓடிக்கொண்டிருப்பது;
உன்
கூந்தல்
உதிர்ந்த
ஒற்றை மல்லிகை!

காதல் - 20

நாளைக் காலைப்
பார்க்கலாம்!

கையசைத்துப் போனாய்!

உன் வாசத்தை மட்டும்
என் துணைக்கு
விட்டு!

காதல் - 21

காலணி கழற்றி
உள் நுழைகையில்!

"என்ன அய்யா முகம்
தெளிவாய்ட்டு இருக்கு?"

கத்திவிட்டு
பிடிகொடுக்காமல்
ஓடிப்போனது
தங்கைப் பிசாசு!

"அகதின் அழகு முகத்தில்
தெரியும்" - பழமொழி
இது கண்டிப்பாக
அம்மா!

"என்னடா இதெல்லாம்?"
அட,சின்னி!!!
"சின்னி எப்போ வந்தே?"
தூக்கி கரகம் ஆடினேன்...
தாய்வழிப் பாட்டி...

என்னடா...என்ன நடக்குது?
கேட்ட கணம் நிறுத்தி
சின்னி மடியில்
தலைச் சாய்த்து
வானம் பார்த்து சொல்லியது
இதுதான்!

"ஒரு அகல்விளக்கு
இந்த இருண்ட வானத்திற்கு
வெளிச்சம் தர இசைந்துள்ளது...!"

காதல் - 22

தனிமையில் நான்!
வானம் ருசிக்க
மொட்டை மாடி!
ரோஜா மெத்தை;
எனக்கே எனக்கான
ஒற்றை நிலவு!
நான் பெயரிட
காத்திருக்கும் சில
மின்மினிப் பூச்சிகள்!
என் வேண்டுதல்கள் இவை!
அனைத்தும் அருகே!
தூக்கம் மட்டும்
துரத்தித் துரத்தி எட்டா தூரத்தில்!

தூணை துணைக்கு கட்டி
உன் வீட்டை எட்டிப்
பார்க்கிறேன்!

ஐயோ!!
யாரது உன் வீட்டு
சுவரேறிக் குதிப்பது!
இங்கும் அங்கும் பார்த்து
அவன் நெருங்குவது உன் அறை அல்லவா!!

ஆ!!இது என்ன அறையிலிருந்து
வெளிப்பட்டு உள்ளிழுத்து
ஒற்றை முத்தம் தந்து
புன்னகையினுடன் கையணைத்து
வழி அனுப்புவது
உண்மையில் நீதானா??

ஏதோ கெட்ட வார்த்தை
வாய்வரை வந்து வெளித்துப்ப
சக்தி அற்றவனாய் நான்!

வந்தவன் அடுத்து வந்தது
நேரே என் மொட்டை மாடிக்கு!

ஏதோ எதிர்பார்த்தான் என்னிடம்
ஒன்றும் பேசாமல் நான் நின்றிட!
படுக்கையில் விழுந்து உறங்கிப் போனான்...
இதழ் மயக்கம் போலும்!

இவன் யார்?இவன் என்ன உறவு..??
இவனிடமா கேட்பது??இல்லையில்லை...
உன்னிடம்தான் கேட்கவேண்டும்...

நள்ளிரவு!
சுவரேறிக்குதித்து!
ரோஜா முள் கிழித்தல் பொறுத்து
உன் வீட்டு பப்பியிடம் கடி பட்டு
உன்னறை சேர்கிறேன்!

அவனுக்கு காத்திருந்தது
போலத்தான் காத்திருந்தாய்! - எனக்கும்
அதே புன்னகை!
அதே காதல்!!
அதே மோகம்!!!
அதே தாபம்!!!!
கோபத்தோடு நான் வாய்திறவும் முன்...

என் தோளில்

கைவைத்து
கட்டிய படி நீ பகன்றாய்

"காதல்" வந்தான்

கண்டாயா??

காதல் - 23

கூந்தல் சுகந்தம் சுவாசித்து
வானம் பார்த்து
நிலவுக்கும் உனக்கும்
ஆறுவித்தியாசங்கள் கண்டறிய
முயலுகையில் சிணுங்கினாய்!

யாராவது பார்த்தால்
தப்பாகிப் போகும்!

யாராவது பார்ப்பதா?
அடி அசடே...
உலகமே நம்மைத்தான்
பார்த்து கிடக்கிறது!

நிலவை பார்!
பொறாமையில் கொஞ்சம்
கருமை!

தென்றல்
நம்மை புரளிப்
பேசியதில் கொஞ்சம்
உஷ்ணம்!

ஆரம்பித்த கணம்
ஆரம்பிச்சுட்டியா?
போடா போய் தூங்கு!
விரட்டிவிட்டாய்!

திரும்புதலுக்கே காத்திருந்தது போல்
விழித்து பாதியிரவில்
கதைக்க ஆரம்பித்தான்!
"காதல்!"

கேட்டுக் கொண்டே படுத்துகிடந்தேன்...
உனக்கு தாலாட்டு பாடிய மீதி
வரியை காட்ட ஓடி வந்தது தென்றல்!

கண் அயர்கையில்
மெல்ல என்னுள் நுழைந்து
எனைப் பார்த்து
மெலிதாய் புன்னகைத்து வைத்தான்
"காதல்!"

காதல் - 24

உன் மூச்சுகாற்றில்
பூவிதழ் வெடிக்கும்
சப்தத்தில் விடிகின்றன
என் கிழக்குகள்!

உன் வீட்டைக் கடக்கையில்
கோலச்சங்கிலியில்
கட்டுண்டுத் தவிக்கின்றன
என் கால்கள்!

"ப்ரியா ப்ரியா"
என விளிக்கும்
என் எல்லா
"system.out.println"கள்!

முன்னைவிட அழகாக
எழுதுகிறேன்...
சொல்லும்
என் கவிதைகள்!

இவையெல்லாம்
சொல்ல ஆரம்பித்தேன்;
"உளற ஆரம்பித்துவிட்டாய்
நிறுத்தியாக வேண்டும்"
"எப்படி" - நான்
"இப்படி" என்ற படி
முத்தமொன்று தந்தாய்
மூர்ச்சையாகி நின்றது
பேச்சும் காற்றும்!!

"இனி அடிக்கடி
உண்மை
உலறுவேன்!"

"உதைபடுவாய்"
குட்டிச் சொன்னாய்!

"ஆ!வலிக்குதடி"
மெளனம் காத்தாய்;
"வலி நிறுத்த ஒர் முத்தம் தாயேன்!"
பிச்சை தட்டு ஏந்தாதது ஒன்றே குறை!

"ஆசை தோசை"

நம் காதலை கேட்டுச் சிரித்து
இன்னும் கேட்க;
கால்வலி தணிக்க
நிழலுடன் சேர்ந்து
அப்படியே அமர்ந்துகொண்டது
அங்கிருந்த மரம்!

காய்

காதல் - 25

நேற்றுவரை
என்னுயிர் வளர்த்தவள்தானே நீ!

முன் வராமல்
பேச்சு தராமல்
உயிர் சுருங்க
காரணமானாய்!

தேடித்தேடிப் பார்த்தேன்
தவிப்பே மிஞ்சியது!
தக்கக் காரணம் கிட்டவில்லை!
உன் தவிர்த்தலுக்கு!

காலை நடையில்
பேச்சு தரும்
உன்னப்பா கூட
கண்டுகொள்வதில்லை!

கண்டால் செல்லக்கடி கடிப்பதாய்
பலமாய் கடித்து கால்சுற்றும்
உன் 'பப்பி' கூட
பாராமுகம் காட்டியது!

இன்று பேசுவாய்;
நாளை விலகும்
உன் கோபமேகம்;
மனதிடம் சமாதானம்
சொல்லித் திரிந்தேன்!

அழைப்பு கலையிடமிருந்து
சொன்ன செல்பேசி தடவி
காதில்வைத்த நொடி
'ப்ரியாவுக்கு கலியாணம்
முடிவு செய்திருக்கிறார்கள்'
சேதி சொன்னாள்!
'ப்ரியா ஒத்துகிட்டாளா?'
'இது என்ன கேள்வி?'
அவள் இஷ்டம்தானே எல்லாம் வீட்டில்
ஈயத்தை காய்ச்சி ஊற்றியிருக்கலாம்!
தோழியும் மெலிதாய் மறுமுனையில்
அழுததாய் தெரிந்தது!!

"படீர்" ஏதோ வெடித்தது!
இதயமா? - இல்லை
இதயத்திலொரு எரிமலையா?
இனி எதுவாயிருந்தால்தான் என்ன??

காதல் - 26

ஒன்றும் பேசாமல்
செல்பேசி அணைத்து,
பொய்சொல்லி
பகுதி நாள்
பணிவிடுப்பு பெற்று!
முதன்முதலில் காதல் வரைந்த
மண்ணில் முன்னங்கால்
புதைத்து கடல்வெறித்து;
மெளனமாய் அழுது!
அவளுக்கு அது சுகமென்றால்
அதுவே நடக்கட்டும்
மனம் செதுக்கி!
"நன்றாக இருக்கட்டும்"
முடிவாய் கண்ணீர் துடைத்து!
வீடுத்திரும்புகையில்
மணி 9.30!

அழைப்பு மணி அழுத்த இடம் தராமல்
கால் சப்தம் கேட்டே தாள் விலக
கதவின் பின் புன்னகையுடன் நீ!
உன்வீட்டார் எல்லாம்
என்ன இந்நேரம் இவ்வீட்டில்?

என்வீடுதானா?
கேள்விக்குறியுடன் நெற்றி சுருங்குகையில்
"வாங்க மாப்பிள்ளை" - உன் அப்பா
குரல் கேட்டு! - ஐயோ என்
பின்னால் உன் அவரா?
அவசரமாய் திரும்பி
அட இவன் உன் அத்தைமகனல்லவா?
இவன் ஊருக்கு உன்
அப்பா சென்றுவந்தலிருந்தல்லவா
எல்லாம் மாறியது!

"வாங்க" சம்பிரதமாய்
அழைத்து துணிமாற்றி வர
என்னறை நுழைகையில்
என்னைக் கண்டசோகத்தில்
சத்தமாய் ஒப்பாரி வைத்து
மூக்குசிந்தி அழத்துவங்கின
என் கவிதைகள்!

கனி

காதல் - 27

உன்னருகில் மட்டும்
இடமிருக்க தயங்கி சுவரில்
சாய்ந்து நின்றபடி கவனித்தேன்!

"மாப்பிள்ளை எப்போ கலியாணம் வைக்கலாம்"?

கலியாணம் பேசும் நேரமாயிது??

முந்தி வந்தது உன் குரல்
நாளையே கூட நல்ல நாள்!

"இருமா"?மாப்பிள்ளை சொல்லட்டும்...
உன்னப்பா குரல்கேட்டு
அத்தை மகன் நான் முகம்பார்க்க!

எல்லோரும் எனைப்பார்க்க...
ஏதோ புரிந்தும் புரியாதவனாய்
நிற்க!

அட பைத்தியமே உன்னைத்தான்
என்றபடி தலையில் குட்டி
தர தரவென தங்கை இழுத்து
உன்னருகில் அமரவைத்தாள்;
மெல்ல மெல்ல விடியதுவங்கியது
இதுவரை இருண்டருந்த மனம்!

பக்கத்தில் ஒளி வடிவில்
ஒளிர்ந்து கொண்டிருந்தது உன் முகம்!!

கலியாணம் பேசலாம் இந்நேரத்திலும்!!

காதல் - 28

திருமண அரங்கம்.
மேடையில்!மெதுவாய்
உன்பக்கம் சாய்ந்து
வெகுநாளாய் மனமரித்த
கேள்வியை கேட்டேன்;
"ஏனப்படி அன்று
அதிர்ச்சி தந்தீர் எல்லோரும்?"

"நீதானே சொன்னாய்...
எதிர்ப்பில்லாமல்
சுவாரசியமாயில்லை காதல்"

புருவம் தூக்கி சொன்னாய்...

அட!எத்துணை அழகாய்
காதலிக்கிறாய் நீயும்!!

சொன்ன சமயம்
ப்ரியமான ப்ரியா
பக்கத்தில்
தம்பி வாழ்க்கை இனி
"இனிமை 24x7"
கண்ணடித்து நகர்ந்தாள்
தோழி!!

உனக்கும் சேர்த்து நான்
அதிகமாய் வெட்கப் பட
இடம் பொருள் பாராமல்
சத்தமாய் சிரித்து தொலைத்தது
"காதல்"!!

சுபம்

முடிவுரை

வகுப்பு நடக்கையில் ஏதாவது கிறுக்கி தருவேன்...அதை கவிதை என மதித்து படித்து...புன்னகை பதிலை தந்த என் முதல் வாசகனுக்கும்!

நல்லதா காப்பி அடிக்கிறாய் என உற்சாகப்படுத்திய என் நண்ப உள்ளங்களுக்கும்!

எவனுக்கு புரியுது?? என்று "மெயிலி" அடுத்தநாள் அவனுக்கு அனுப்பாமல் விட ஏனடா இன்று ஒன்றும் காணோம் என பதில் "மெயிலி"ய நண்பனுக்கும்!

இப்பிடியே போனால் சுவாரசியம் இருக்காது!பிரித்து விடு!அதுவும் பெண் துரோகம் செய்வதாய் முடி!என்ற எனதருமை நண்ப வட்டங்களுக்கும்!

எனக்காகவே தமிழை தத்தி தத்தி படிக்கும் சில நண்பர்களுக்கும்!

:) ;) இப்படியே தன் மனமுணர்த்திய தோழிக்கும்!

"பிரிக்காதே!

நல்லாயிருக்கு!

இப்படியிருந்தால் நல்லாயிருக்கும்!

யப்பா ஒரு வழியா முடித்துவிட்டாய்!இனி சில நாள் நிம்மதி!"மெயில் பாக்ஸ்" நிரம்பாது!"

இதுவும் நண்பர்களே!!

சில முகமறியா நண்பர்களும்!அடக்கம்!!

சத்தியமாய் எனை ஆக்கியது!ஊக்கியது எல்லாம் நட்பே!
என்றும் எனை நேசிக்கும் நட்பிற்கே என் நன்றிகள்!

கால வெள்ளத்தில்,
மீண்டும் சந்திப்போம்!

- ப்ரியன்