கல் தேடும் மனிதன்

நாயைக் கண்டால்
கல் தேடும் மனிதன்!
இவனைக் கண்டால்
யார் கல்
தேடுவது?

- ப்ரியன்.

உயிர்ச் சிதறல்

உன்னுடனான
முதல் சந்திப்பில்
ரோசாவின்
இதழ் இதழாய்
சிதறிய என்னை;
என் உயிரை!

வெகுநாள் செலவில்
பொறுக்கிப் பொறுக்கி
சேர்த்து
ஒட்டிக் கொண்டிருந்தேன்!

எதிப்பாரா திசையிலிருந்து
வரும் புயல் போல்
எட்டிப் பார்த்து
புன்முறுவல் சிந்தி
ஒரு வினாடியில்
மீண்டும்
சிதறடித்துச் செல்கிறாய்!

மீண்டும் உயிர் இதழ்
தேடி சேர்க்கவோ;
சிதறவோ என்னால்
இயலாது!

சிதறடித்தலுடன்
சேர்த்தலையும்
இனி,
நீயே கவனித்துக் கொள்!

- ப்ரியன்.

நிலா

வானத்து வெண்ணொளியில்
மொட்டைமாடி குளித்திருக்க!
வெண்ணொளி தரு நிலாவின்
தண்மையில் பூமி குளிர்ந்திருக்க!

மொட்டை மாடியில்
வேகமெடுத்து கிளம்பியது
அரட்டை!
பக்கத்துவீட்டு பத்மாவை
பார்த்து சிரித்து!
ஊர் தேசம் எல்லாம் சுற்றி
வானில்,நிலாவில்
முட்டி நின்றது அது!

மேடும் பள்ளமும் நிறைந்த
காற்றும் உயிருமில்லா
பெரிய உருண்டை கல்
என்று பகன்றான் ஒருவன்!
கூடுதல் தகவலாய்
பசிபிக் பெருங்கடலில் இருந்து
பிய்த்தெரியப் பட்ட பூமியின்
பகுதியென்றான் அவனே!

வானமகள் தினம் தினம்
அவளே அழித்து
அவளே விதவிதமாய்
இட்டுக் கொள்ளும்
வெள்ளைப் பொட்டென்றான் ஒருவன்!
நல்ல கற்பனைதான்!

பாட்டி வடை சுட்ட கதையும்
முயலின் தியாக கதையையும்
கலந்து சொல்லிக்
குழப்பிக் கொண்டு போனான்
மிஞ்சியவன்!

என் முறை வந்தது
"நிலா" அதுவென்றேன்!
அதுவை அதுவாகவே பார்த்தல்
அழகென்றேன்!
ஒருமாதிரிப் பார்த்து
உறங்கப் போனார்கள்!
இருட்டில் எவனோ
என்னைப் பற்றி முணுமுணுத்தான்
குருட்டு கண்காரன் என்றான்!

உறக்கம் கண்ணில் ஒட்டாமல்
கைப்பிடிச் சுவர் பற்றி
சாலையைப் பார்த்திருந்தேன்!
நேற்றைய மழையில்
தேங்கிய நீரில் ஒற்றையிலை
உதிர்ந்து விழ!
நீரில் தங்கிய நிலா
மெல்ல தளும்பியது!

தன்னைத் நிலாவாகப்
பார்த்தமைக்கு
நன்றிச் சொல்லி
விழி
தளுதளுத்ததாய் தெரிந்தது
என் "குருட்டுக் கண்களுக்கு"!

- ப்ரியன்.

எறும்பு

வரிசை தப்பிய எறும்பு ஒன்று
என்னருகே ஊர்ந்து வந்தது!
அச்சின்ன உடல் பெரிதாக
ஆட ஆட என் மேலேறுகிறது
அவ்வெறும்பு!

நகர்ந்தால் நசுங்கிவிடுமென
சுட்டுவிரலில் எட்டி எடுக்கிறேன்!
பிரயோகித்த சின்ன வேகத்தில்
பற்றிய ஒற்றை தானியம் தொலைக்கிறது
அவ்வெறும்பு!

தொலைத்த தானியம் தேடும்
அதனை கைக்குள் மூடி
தானியம் தேடி எடுத்து அருகில்
கொண்டுச் செல்லும் நேரம் கவனிக்கிறேன்
மூடிவைத்த கஷ்டத்திலோ,
தானிய நஷ்டத்திலோ
கடிக்கத் தயாராகிறது
அவ்வெறும்பு!

பாட்டி சொன்ன
கடித்த எறும்பு மரித்துப் போகும்!
தகவல் மனதில் முந்தி நிற்க
எறும்பை தரையில்விட்டு
தானியம் அருகில் வைத்தேன்
அவ்விடமே நின்று சுற்றிச் சுற்றி வந்த
அவ்வெறும்பு தானியத்தை
நான்கு முறைச் சுற்றி
பின் பக்கம் வந்து
சுமந்து நகர்ந்தது!
என்னைக் கடித்தலை மறந்து!

கண்டிப்பாக
நான் - மனிதன்
அவ்வெறும்பாக
இருந்திருந்தால்
தானியம் விட்டு
கடித்துதான் நகர்ந்திருப்பேன்!

- ப்ரியன்.

ஆசிரியன்

அன்னைக்கும் அப்பனுக்கும்
அடுத்து வைத்து!
தெய்வத்திற்கு முன்னே
வைத்தது உலகம்
உன்னை! - அய்யனே
என்னுயிரில் முன்னே
வைத்தேன் உன்னை!

அன்னை சுட்டினாள்
உயிர்வித்தளித்த அப்பனை!
அய்யனே! - நீ சுட்டினாய்
உணர்வளர்க்கும் அறிவை
என் தமிழை!

தாய்க்கு மகன்
தந்தைக்கு மகள்
செல்லம்!
குருவே உனக்கு
இருபாலருமே
வெல்லம்!
கட்டி வெல்லம்!

தாய்க்கு தந்தைக்கு
உற்றார் உறவினர்க்கு
என்னிடத்தில் உண்டு எண்ணிலடங்கா
எதிர்ப்பார்ப்புகள்!
உன்னிலும் உண்டு
என்னிடத்திலான எதிர்ப்பார்ப்புகள்
என்றாலும் அவை நீ
காணும் என் எதிர்காலங்கள்!

உன் சூரியஅறிவில்
கடன் வாங்கி
சுற்றித் திரியும்
சின்னச் சின்ன
மின்மினிகள் நாங்கள்!

ஆசிரியனாய் இருந்து
முதல்குடிமகனாய் உயர்ந்தவனின்
பிறந்தநாளில் கண்டார்கள் - உனக்கு
ஆசிரியர்தினம் என்று ஒன்று!
அறியாப்பிள்ளை உரக்கச் சொல்வேன்
பாரதத்தில் மட்டும்தான்
இதுவென்று!

அரவணைத்து அன்னையானாய்!
நல்வழி புகுத்தி அப்பனானாய்!
ஆலயத்திற்கு ஒப்பான - பள்ளியில் அமர்ந்து
தெய்வமானாய்!
மூன்றும் சேர்ந்ததால் நீ
குருவானாய்!

அருவாய் திரிந்தவரை - நல்
அறிவால் சமுகம் காக்கும்
எருவாய் மாற்றும்
குருவே வாழ்த்த வந்தேன்!
சிறுவன் இச்சிறுவன்
உருகி நின்றேன் - நின்
பெருமை கண்டு
உருகி நின்றேன்!

முதல் வகுப்பில் நீ
சொல்லித்தந்த பாடம் தான்!
மீண்டுமொருமுறை
அதே கூட்டுக் குரலில்
வணக்க்க்க்ம் அய்ய்ய்ய்யா!

- ப்ரியன்.