நீ...
*
நீ
மௌனம் மொழியும்
கவிதை!
*
நீ
தேன் சுரக்கும்
பட்டாம்பூச்சி!
*
நீ
உயிர் சூடும்
பூ!
*
நீ
எழுதா
கவிதை!
*
நீ
என் காதலுக்கான
தண்டணை!
*
- ப்ரியன்.
*
நிலாரசிகனின் : நீ
நவீன் ப்ரகாஷின் : நீ
*
நீ
மௌனம் மொழியும்
கவிதை!
*
நீ
தேன் சுரக்கும்
பட்டாம்பூச்சி!
*
நீ
உயிர் சூடும்
பூ!
*
நீ
எழுதா
கவிதை!
*
நீ
என் காதலுக்கான
தண்டணை!
*
- ப்ரியன்.
*
நிலாரசிகனின் : நீ
நவீன் ப்ரகாஷின் : நீ
பதித்தவர் : ப்ரியன் @ 8 பின்னூட்டங்கள்
#
பொங்கல் வைத்து
படையலிட வருகிறாய்;
அய்யனார் கையில்
பூ!
#
உன் பார்வை பற்றவைத்தது;
உருகி உருகி
எரிகிறது உயிர்!
#
என் கண்ணீர்
துளிகளால்;
உனக்கு வைரமாலை!
#
உன் அறை
உன் பிம்பம்
என் கோவில்
என் சாமி!
#
மூங்கில் காடு புகும்
காற்று அழுது திரும்புகிறது;
உன் நினைவில் அரற்றும்
எனைப் போலவே!
#
பதித்தவர் : ப்ரியன் @ 3 பின்னூட்டங்கள்
#
நீ வாசல் கடக்கையில்
கவர்ந்த வாசனையை
பூசிக் கொண்டு மலர்கிறது
கொல்லைபுற மல்லி!
#
உயிரற்ற செல்களலாக்கப்பட்ட
உரோமங்கள்
உயிர் பெற்று
குத்தாட்டம் போடுகின்றன;
உன் தாவணி ஸ்பரிசத்தில்!
#
தென்றலை ஒத்த
நடைபயின்று கடந்துச் செல்கிறாய்;
ஆயிரம் சூறாவளிகளை
என்னுள் உருவாக்கிவிட்டு!
#
என்னுடன் ஓடிவருவதானால் -
வீட்டையும் தூக்கிக் கொண்டு வா!
உன்னோடு இருபது வருடம்
வாழ்ந்த அதனோடு
இருபது நாட்களாவது
வாழ வேண்டும் எனக்கு!
#
தலை சூட
நீ மல்லி சேகரிப்பதுப் போல;
என் உயிர் சூட
உன் புன்னகை சேர்க்கிறேன்
நான்!
- ப்ரியன்
பதித்தவர் : ப்ரியன் @ 10 பின்னூட்டங்கள்
நகரின்
அந்த பிரதான துணிக்கடையின் லிப்டில்
பெருங்கூட்டம் மற்றும் பொதிகளுக்கு இடையில்
எதிர்பாராமல்
நிகழ்ந்து முடிந்தது
அந்த சந்திப்பு!
அதிர்விலிருந்து மீண்டு
நான் உதிர்த்த புன்னகை
உனைச் சேர்ந்திடும் முன்னம்
கழுத்தை வெட்டித் திருப்பிக் கொண்டாய்!
கொஞ்சம் கருப்பாகியிருந்தாய்;
மிஞ்சிய சதையும்
உயிர்ப்பில்லா உதடும்
காதோரம் ஓடிய நரை ஒன்றும்
உன்னை வேறு மாதிரி காட்ட முயன்றிருந்தன!
கட்டிடத்தின் உயரம்
அங்குலம் அங்குலமாய் கடக்க
காலம் தன் கால்களை
வேகமாய் வீசி
ஆண்டு கணக்கில் பின்னோக்கி
பயணப்பட்டிருந்தது!
கை பிணைந்த கணம்
மடி சாய்ந்த தருணம் என
நீளமாய் விழுந்து பரவ தொடங்கிய
நினைவின் விழுதுகள்
சட்டென அறுந்து தொங்கின
லிப்ட் நின்ற வேகத்தில்!
பேசிவிடும் முனைப்புடன்
கூட்டத்தில் முண்டி அடித்து வெளியேறுகையில்
கரைந்து
காணாமல் போயிருந்தாய்
முந்தைய காலத்தை போலவே
சொல்லாமல் கொள்ளாமல்!
வீடு திரும்பியவன்
மனையின் மடி சாய்ந்து
கதைச் சொல்லி அழுது
அவளை
கட்டியபடி உறங்கிப்போனேன்!
தைரியம் சிறிதும் அற்ற நீ
சன்னமாக அழுதிருப்பாயா -
குளியலறை குழாயை
சத்தமாய் திருப்பிவிட்டபடியாவது?!
பதித்தவர் : ப்ரியன் @ 6 பின்னூட்டங்கள்
இயல் கவிதை: நடுவர் : திசைகள் ஆசிரியர் மாலன்
ஆறுதல் பரிசு 1 :
கார்த்திக் பிரபு, சென்னை
ஆறுதல் பரிசு 2 :
சோ. சுப்புராஜ், துபாய்
இரண்டாம் பரிசு :
தண்டபாணி பொன்னுரங்கம், சென்னை
முதல் பரிசு :
ஜாபர் அலி, துபாய்
ஊக்கப்பரிசு :
லிவிங் ஸ்மைல் வித்யா (2 கவிதைகள்), மதுரை
உஷா, சென்னை
மாதங்கி, சிங்கப்பூர்
கவிஞன் முதல்வன் (எ) ஸ்ரீராம், ஆஸ்த்ரேலியா
நட்சத்ரன் (எ) கா. முத்துராமலிங்கம், தஞ்சாவூர்
மேரித் தங்கம், சென்னை
இளா, நாமக்கல்
அருட்பெருங்கோ, சென்னை
மதுமிதா, சென்னை
இசைக்கவிதை: நடுவர் : இசைக்கவி ரமணன்
ஆறுதல் பரிசு 1 :
பங்கேற்பு ,இசை, பாடல்: கே.எம். அமீர், சென்னை கவிதை: நாக. சொக்கன்
ஆறுதல் பரிசு 2 :
பங்கேற்பு, கவிதை: சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ் பாடியது: கலாவதி
இரண்டாம் பரிசு :
பங்கேற்பு, கவிதை , குரல் : சிறில் அலெக்ஸ் சிகாகோ
முதல் பரிசு :
பங்கேற்பு, கவிதை: S. சங்கரநாராயணன், சென்னை குரல்: லஹரி
ஊக்கப் பரிசு 1:
கவிதையும் பங்களிப்பும்: கவிஞர் மதுமிதா, சென்னை இசையும் குரலும்: பல்கலைத் தென்றல் ஆரெஸ்மணி
ஊக்கப் பரிசு 2:
கவிதை, இசை, குரல் என்று அனைத்தும்: இராஜ. தியாகராஜன், புதுச்சேரி
ஊக்கப் பரிசு 3:
கவிதை, இசை, குரல் என்று அனைத்தும்: விசாலம், மும்பை
ஒலிக்கவிதை: நடுவர்கள் : கனடா ஜெயபாரதன், கவிஞர் சிங்கை இக்பால்
ஆறுதல் பரிசு 1 :
கவிஞர் மதுமிதா, சென்னை
ஆறுதல் பரிசு 2 :
V. லஷ்மணக்குமார், மதுரை
இரண்டாம் பரிசு :
ஷைலஜா, பெங்களூர்
முதல் பரிசு :
மு. பாண்டியன், நெய்வேலி
படக்கவிதை : நடுவர்கள் : ஆசிப் மீரான் , கவிஞர்.பாலபாரதி மற்றும் தம்பி அகிலன்
ஆறுதல் பரிசு 1 :
கே. வி. உஷா, சென்னை
ஆறுதல் பரிசு 2 :
மு. பாண்டியன், நெய்வேலி
இரண்டாம் பரிசு :
சோ. சுப்புராஜ், துபாய்
முதல் பரிசு :
மேரித் தங்கம், சென்னை
காட்சிக்கவிதை : நடுவர் : நிலா என்கிற நிலாச்சாரல் நிர்மலா
ஆறுதல் பரிசு 1 :
கவிநயா என்றழைக்கப்படும் மீனா ,ரிச்மண்ட், அமெரிக்கா
ஆறுதல் பரிசு 2 :
ஆர்.எஸ். மணி , கேம்ப்ரிட்ஜ், கனடா
இரண்டாம் பரிசு :
முத்துலட்சுமி , புது தில்லி
முதல் பரிசு :
சமீலா யூசுப் அலி (என்ற) ஹயா , மாவனல்லை, இலங்கை
நடுவர்களின் உரைகளையும் பரிசு பெற்ற கவிதைகளையும் வாசிக்க
http://groups.google.com/group/anbudan/t/e650dc047b23dadd
பதித்தவர் : ப்ரியன் @ 4 பின்னூட்டங்கள்
அழுது அரற்றும்
பெண்ணின் கண்ணீராய்
கரைந்து ஒழுகிக்கொண்டிருக்கிறது
மேகப்பந்து;
கரும் கம்பளம்
போர்த்தியதாய்
நீண்டு விரவியிருக்கிறது
இருள்;
சரசரக்கும் செருப்பினால்
உறக்கம் கலைந்ததென
குரைத்து ஓய்கிறதொரு
நாய்;
எண்ணெய் இட மறந்ததை
சத்தமாய்
முறையிட்டு வழிவிடுகிறது
வாசற்கதவு;
வெகுநேரமாகி
வீடு திரும்பும்
எனக்காய்
கதவிற்கு தலைசாய தந்து
காத்திருக்கும் அவளின்
விழி வழிந்து காத்திருக்கிறது
காதல்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 1 பின்னூட்டங்கள்
இனிய அன்பர்களே,
அன்புடன் இரண்டாம் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்
மார்ச் 2007 தொடங்கி கோலாகாலமாக நடந்துகொண்டிருக்கிறது.
அதில் இவ்வாண்டின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான
ஐவகைக் கவிதைப் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் நேரம்
இதோ இதோ வந்துவிட்டது....
மிகுந்த ஆவலோடு போட்டியில் பங்குபெற்ற அத்தனை கவிதை உள்ளங்களும்
நடுவர்களின் தீர்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.
அதைவிட போட்டிக் கவிதைகளா, அவற்றை வாசிக்கக் கிடைக்கும் சுகமா,
பரிசுக்குரிய கவிதை எது, அதை எழுதியவர் யார், தேர்வு செய்த நடுவர் யார்,
எப்படி அவர் தேர்வு செய்தார், ஏன் அதைத் தேர்வுசெய்தார்
என்று அறியத் துடிக்கும் தவிப்புகளோடு
அன்பர்களின் இதய இழைகள் சுழல்கின்றன.
அன்புடன் உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம்.
அது 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது.
இன்று இம்மடல் எழுதும் நேரம்வரை 747 அன்பர்கள் அதில் இணைந்துள்ளார்கள்,
66,393 மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு
கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள்.
அன்புடன் தமிழில் எழுதுவோருக்கான குழுமம்,
யுனித்தமிழில் மட்டுமே அது இயங்குகிறது.
தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி,
தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று
ஆக்கப்பூர்வமான தலைப்புகள் பலவற்றிலும் அங்கே மடலாடல்கள் நிகழ்கின்றன.
எப்படி யுனித்தமிழில் தட்டச்சுவது என்று அன்பர்களுக்கு
அன்புடன் ஒரு சேவையாகச் சொல்லித்தருகிறது.
அன்புடனின் இரண்டாம் ஆண்டு நிறைவினையொட்டி
பல நிகழ்சிகள் தொடங்கப்பட்டன.
அவை அனைத்தும் அன்பர்களின் ஏகோபித்த வரவேற்புடன்
வெற்றியுடன் முடிந்தும் இன்னும் நடைபெற்றும் வருகின்றன.
அன்புடன் சுடரோட்டம்
- ஆளுனர் அன்பர் முபாரக் - நடந்துகொண்டிருக்கிறது
அன்புடன் தித்திப்பு யுத்தம்
- நடுவர் அன்பர் ஆனந்த குமார் - நடந்து முடிந்துவிட்டது
அன்புடன் பட்டிமன்றம்
- நடுவர் அன்பர் ரசிகவ் ஞானியார் - நடந்துகொண்டிருக்கிறது
அன்புடன் கவிதைப் போட்டிகள்
- இதைப்பற்றித்தானே இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேன் :)
அன்புடன் ஆண்டுவிழாக் கொண்டாத்தின் தலைவராக
கவிஞர் ப்ரியன் (விக்கி) பொறுப்பேற்று
தன் பணிச்சுமைகளுக்கு இடையிலும் சிறப்பாகச் செய்துவருகிறார்.
துவக்கம் முதலே அனைத்துப் பணிகளையும்
மிக மிக அக்கறையாக வெகு சிறப்பாக அன்புடனின் சேவைக்கரசி
சேதுக்கரசி செய்து வருகிறார்.
முடிவுகளை அறிந்துக்கொள்ள : அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் படியுங்கள்
பதித்தவர் : ப்ரியன் @ 0 பின்னூட்டங்கள்
கைகள்
உதிர்ந்து தொலைய
மென்மையான இறக்கைகள்
முளைக்கின்றன பக்கமாய்!
மெல்ல மெல்ல
அசைவு பழகி
சிறு குஞ்சென
தத்தி
தவறி விழுந்து
பின் மேலெழுந்து
பறக்கத் தொடங்குகிறேன்
எட்டா உயரம்
கடந்திடும் வேகத்தோடு!
காடுகள்
வயல்கள்
நதிகள் , நகரங்கள்
கடந்து மறைகின்றன
காலடியில் சடுதியில்!
அசைவின் வேகத்தில்
சிறகொன்று
உதிர்ந்து நழுவ
காற்று காதோரம் வந்து
கிசுகிசுக்கிறது
கிச்சுகிச்சு மூட்டுவதை
நிறுத்தென!
தூரம்
காலம் மறந்து
திரிகிறேன்
கரிய வானெங்கும்
பறத்தலின்
சுகம் சுகித்து பருகி!
சிறகுகளில் வலியில்லை
பறத்தல் சலிக்கவில்லை
ஆனாலும்
விழி வழி
செவி வழி
சிறகேறி உலகம் அமர
பாரம் தாங்காமல்
தரையிறங்குகிறேன்;
அறுபட்டு எங்கோ
விழுந்து தொலைகிறது சிறகு!
அதோடு சேர்த்து
பறத்தல் சுகம் பேசிய
இக்கவிதையும் முடிகிறது
அவசரமாய் இத்தோடு!
என்றாலும்
என்றாவது ஒரு நாளில்
பறவையாகும் பாக்கியம்
கிடைத்தால் எழுதுகிறேன்
மிச்சத்தை!
- ப்ரியன்
பதித்தவர் : ப்ரியன் @ 2 பின்னூட்டங்கள்
கண்ணீரின் இடையில்
பிறக்கிறது காதல்;
முட்களின் மத்தியில்
பூக்கிறது ரோஜா!
விழியோடு ஒட்டி
உறவாடி உயிரோடு
பேசியிருந்தவனை கலைத்துப்போட்டது
அவரின் குரல்!
என்ன கேட்டார்
ஏது பேசினார் என
அறியா நிலையில்
என்ன கேட்டீங்க
எனத் தடுமாறி
அசடு வழிய கேட்க
அவள் இதழ் சிந்திய
புன்னகை காதோடு
பேசியது கேலி மொழி!
அடுத்து என்ன படிப்பதாய் உத்தேசம்?
மதிப்பெண் பார்த்துதான் முடிவு.
அவளும் அப்படித்தான் சொல்லுறா
நல்லா எழுதியிருக்கியா?
ம் நல்லா எழுதி இருக்கேன்.
அறிந்த மொழியெல்லாம்
அறிவிலிருந்து அவசரமாய் அழிந்திட
அரைகுறையாய் வந்தன
வார்த்தைகள் மட்டும்;
என்ன புத்தகம் படிப்பாய்?
எதுவானாலும் சரி
'ப்ரியா' அந்த புத்தகம் முடித்துவிட்டாயா?
ம் முடிச்சுட்டேன்ப்பா
சரி அதை கொண்டுவந்து தம்பிக்கு தா
அப்பா எழுந்து சென்றிட
அடடா தேவதை படித்த புத்தகமா?
தேவதை கண்கள் வருடிய புத்தகமா?
கனவில் ஆழ்ந்திருந்தேன்.
அமைதியான நீர்நிலையில்
சலனம் உண்டாக்கும் இலையென
உன் குரல்
கனவின் இழை அறுக்க
கையில் தந்தாய் தண்ணீர் தேசம்
மீண்டும்
பயணிக்கத் தொடங்கினேன்
என் கனவு தேசம் நோக்கி!
பதித்தவர் : ப்ரியன் @ 2 பின்னூட்டங்கள்
குறிச்சொல் கவிதை, காதல், தொடர், பிப்ரவரி, மற்றொரு மாலையில்...
எண்ண அலைகள்
கணம் தவறாமல்
எழுந்தெழுந்து மோதி
உடைந்துக் கொண்டே இருக்கின்றன
வெந்நுரை பொங்க!
சின்னதாய்
பெரியதாய்
ஆயிரமாயிரம்
ஆசை மீன்கள்
வலம் வருகின்றன
மண்டிக்கிடக்கும் அழுக்கு பாசிகளை
புசித்து கொழுத்தப்படி!
அன்றொரு நாள்
என்னுள் சிந்திய
ஒற்றை கண்ணீர்த்துளியை
முத்தாக்கி அவளுக்கே
பரிசளித்திருக்கிறேன்!
பளபளப்பு காட்டி
மகிழ்வு பரப்பும் பவளமதின் ஒளியும்;
காதோடு ஒட்டிவைத்தால்
சிறு குரலில்
இசையும் சங்கின் சோகமும்;
மூழ்கிப்போன எண்ணற்ற
ஞாபகக் கப்பல்களதின்
சிதிலமடைந்த பாகங்களும்
சிக்கனமில்லாமல் கிடைக்க கூடும்
சிரமம் பார்க்காமல் அகழ்ந்தால்!
அணைத்து அரவணைப்பதில்
குறுகுறுப்பூட்டும் சிற்றலையாய்;
சீரும் கோபமதில்
புயலின் கோரமாயென
பலவாறாய் உணர்த்தியிருக்கிறேன்;
என்றாலும் எவரும்
ஏற்க மறுக்கின்றனர்
என்னை ஒரு சிறு கடலாகவேணும் !
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 0 பின்னூட்டங்கள்
கடைசித் தேதி: ஏப்ரல் 14, 2007 இந்திய நேரம் இரவு 12 மணி!
இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!
"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே"
எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...
உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.
போட்டி விபரம்:
கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.
1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை
வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)
2. இசைக்கவிதை* - பாடச்சுவை
சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.
3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை
சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.
4. படக்கவிதை** - பார்க்கச்சுவை
புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.
5. காட்சிக்கவிதை* - இயக்கச்சுவை
இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.
* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்
படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.
** படக்கவிதைக்கான படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்:
1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.
2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.
3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.
4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.
5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.
6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.
7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.
8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.
10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
பரிசு:
மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-
ஒவ்வொரு பிரிவிற்கும்:
முதல் பரிசு: ரூ. 1000/-
இரண்டாம் பரிசு: ரூ. 500/-
ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-
எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.
முடிவுகள்:
சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.
வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.
நன்றி.
**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.
மேலும் தகவலுக்கு : அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப்போட்டி
படம் : 01
படம் : 02
படம் : 03
படம் : 04
படம் : 05
படம் : 06
படம் : 07
படம் : 08
படம் : 09
படம் : 10
கடைசித் தேதி: ஏப்ரல் 14, 2007 இந்திய நேரம் இரவு 12 மணி!
பதித்தவர் : ப்ரியன் @ 1 பின்னூட்டங்கள்
மின் தகனமேடை
சடலமாய்
சலனமற்று
எரிந்து
சாம்பலாகி
காற்றுடன் கலந்து கரைந்து
காணாமல் போகின்றன
அருகில் நீயில்லா பொழுதுகள்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 3 பின்னூட்டங்கள்
உன் கூந்தல்
உதிர் பூவின்
இதழொன்று கை சேர்கிறது!
இருதயத்தில் மெல்ல
வசந்தம் மலர்கிறது!
நண்பர்களுடன் நீச்சல்
மிதிவண்டி பயணம்
பிள்ளைகளின் கூக்குரலில்லாமல்
தனியே வாடும் பள்ளி
மைதானத்துடன் பேச்சு;
நீ சாய்ந்து அமர்ந்த
திண்டினை
தீண்டுதலென
நகர்கிறது;
விடுமுறை நாட்கள்!
வீடு கடக்கையில்
ஆத்தோரம் தண்ணி அள்ளுகையில்
என
சந்திக்கும் சமயங்களில்
விழியால் உயிர் வருடிக் கொள்கிறோம்
இறகின் பரிவோடு!
ஊர் சுற்றி
கலைத்து திரும்பும் எனை வரவேற்க
காத்திருக்கும்;
விடுமுறையில்
ஏதாவது உருப்படியா
செய்யேன் எனும் அப்பாவின்
குரல்!
அதை
ஒரு காதில் வாங்கி
மறு காதில் ஒழுகிட விடுதல்
நிகழும்
தினம் தினம்!
அப்படியான ஒருநாளில்
உன் தந்தை பெயர் சொல்லி
அவரிடம் புத்தகம்
வாங்கி படி;
அவரிடம் சொல்லி வந்திருக்கிறேன்
என்கிறார் எனதருமை அப்பா!
இதை முன்னமே
சொல்லியிருக்கலாமே என
மனதுள் திட்டியபடி
அம்மாலைவேளையில்
பறந்தேன் உன் இல்லம் நோக்கி!
வந்தவனை வரவேற்றன
கொல்லைப் பக்க
பூவுடன் நீ பேசியிருந்த
பூபாளம்!
வீடு நுழைந்தவனை
அழைத்தமர்த்தி
எனதுருவத்தோடு பேசியிருந்தார் உனதப்பா;
குரல்கேட்டு
ஓடிவந்தவள்
தூணுக்கு பின்னிருந்தபடி
விழியால் பேச ஆரம்பித்தாய்
உயிர் அருவத்தோடு!
உருவத்தை அவரிடம் பேசத் தந்து
உயிரை உன்னிடம் பேசத் தந்து
நான் யாதுமற்ற
ஓர் உருவ நிலையிலிருந்தேன்
அத்தினம்!
- இன்னும் உருகும்...
பதித்தவர் : ப்ரியன் @ 3 பின்னூட்டங்கள்
குறிச்சொல் கவிதை, காதல், தொடர், பிப்ரவரி, மற்றொரு மாலையில்...
காதல் கோவிலின்
கருவறையில்
தேவி உனக்கு;
தினம் தினம்
என் கண்ணீரால்
அபிஷேகம்!
பதித்தவர் : ப்ரியன் @ 3 பின்னூட்டங்கள்
குறிச்சொல் கவிதை, காதல், தொடர், பிப்ரவரி, மற்றொரு மாலையில்...
பதித்தவர் : ப்ரியன் @ 17 பின்னூட்டங்கள்
தேவன் சபை நுழைந்தேன்
தடவி தழுவி
மடியில் கிடத்திக் கொண்டது அது;
சாத்தானின் சபை புகும்
வாய்ப்பும் கிட்டியது
சாட்டையை சுழற்றிபடி
கோரநகங்களால் கீறி இரத்தம் சுவைத்து
வரவேற்றது அதே காதல்!
இரயில் நிலையத்தின்
இரைச்சலையும் தாண்டி
குரலும்
சிரிப்பொலியும்
இசையாக காதுமடல் வருட;
கண்கள் தேடி
அவள் உருவம் மேல்
முட்டி நின்றது;
முட்டி நின்ற கண்கள்
மூர்ச்சையாகி
நின்றது நின்றபடியே இருந்தது!
கையிருந்த குழந்தைக்கு
முத்தமிட்டு
கையாட்டி
விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள்;
தன் பங்குக்கு
காதணியும் காற்றுக்கு சாடைக்காட்டி
விளையாடிபடி இருந்தது!
புறப்படுவதற்கான அடையாளமாய்
பெரியதாய் இரயில் கனைக்க
அதுவரை அருகிலிருந்தவனிடம்
குழந்தையை கையளித்து
சிரித்து கையசைத்து
வந்தாள் அவள்;
வழி அனுப்ப வந்த அவன்
நண்பனாக இருக்கலாம்
தூரத்து சொந்தமாயிருக்கலாம்
என கணக்குப் போட்ட
குரங்கு மனது
ஒருவேளை
அய்யோ ஒருவேளை
காதலனாக
கணவனாக இருக்ககூடுமோ
எண்ணிய வேளை
மூலையில் குத்தவைத்து
அழ தொடங்கிவிட்டிருந்தது உயிர்!
அதை தொடர்ந்தே நிகழந்தது
நான் நாளிதழில் முகம் புதைத்ததும்;
அவள் பெட்டி நகர்த்தி தரக் கேட்டதும்;
நாளிதழ் நகர முகம் பார்த்து
அவள் உணர்வுகள் மூர்ச்சை ஆனதும்;
அதே நாங்களேதானென
நாங்கள் உறுதிபடித்திக் கொண்டதும்!
காலச் சக்கரங்கள் மெல்ல சுழல
நினைவுகளின் மேல்
பயணத்திருந்தவனை
அவளின் குரல் கைகாட்டி நிறுத்தியது.
'நல்லா இருக்கியா?'
நான் இல்லையோ என்ற சந்தேகத்தில்
முன்னர் காட்டிய 'ங்க' மரியாதை வெட்டி
அவள் பழைய பழக்கத்தில் பேச ஆரம்பிக்க;
'ம்!'
மூடிய வாய் திறவாமல்
மூச்சு வழியே பதில் சொல்ல
மீண்டும்
பள்ளி வயதை அடைந்திருந்தேன் நான்!
- உயிர் இன்னும் உருகும்.
பதித்தவர் : ப்ரியன் @ 1 பின்னூட்டங்கள்
குறிச்சொல் கவிதை, காதல், தொடர், பிப்ரவரி, மற்றொரு மாலையில்...
தத்தித் தத்தி
தமிழ் கற்று
கவிதையென
எழுதியவையெல்லாம்
நான் கண்டு கொண்ட
உந்தன் செல்லப் பெயர்கள்!
பதித்தவர் : ப்ரியன் @ 0 பின்னூட்டங்கள்
குறிச்சொல் கவிதை, காதல், தொடர், பிப்ரவரி, மற்றொரு மாலையில்...
ஒரு மரத்தடியில்
வசந்தத்தில் உனக்காக
காத்திருக்கத் தொடங்கினேன்!
காத்திருந்து நாட்கள் பல
கடந்த இக்காலத்தில்
காய்ந்த இலைகளை
பொழியத் தொடங்கிவிட்டன
மரங்கள் மழையாக!
பதித்தவர் : ப்ரியன் @ 0 பின்னூட்டங்கள்
குறிச்சொல் கவிதை, காதல், தொடர், பிப்ரவரி, மற்றொரு மாலையில்...
உன் மெளனம்
மொழியும் மொழியின்
வீரியத்திற்கு முன்
என் கவிதைகள் எல்லாம்
ஏதுமற்ற சூன்யம்!
பதித்தவர் : ப்ரியன் @ 2 பின்னூட்டங்கள்
குறிச்சொல் கவிதை, காதல், தொடர், பிப்ரவரி, மற்றொரு மாலையில்...
தென்றலின் சிநேகத்தோடு
தடவிச் செல்கிறது - உன்
தாவணி!
புயல் புரட்டியெடுத்த
பூமியாகிறது இருதயம்!
பதித்தவர் : ப்ரியன் @ 3 பின்னூட்டங்கள்
குறிச்சொல் கவிதை, காதல், தொடர், பிப்ரவரி, மற்றொரு மாலையில்...