வா காதலிக்கக் கற்றுத் தருகிறேன்

வா,
அந்தப் புல்லின்
தவம் கலையா வண்ணம்
மெதுவாக வந்து
அருகில் அமர்!

எதுவும் பேசாதே!
சின்ன முணுமுணுப்புக் கூட
வேண்டாம்!
மெளனம் தாய்மொழியாக்கு!

அலையென துள்ளிவரும்
எண்ண அலைகளை
அள்ளி
தூரப் போடு!

வா,
கொஞ்சம் நெருங்கி வா
மூச்சோடு மூச்சு முட்டி
இருவர் இருதயமும்
தகிக்கும் வரை
நெருங்கி வா!

உன் பெயர் மற!
என் பெயர் மறக்கடி!

மெலிதாய் சிரி!

நீ ஆண்
நான் பெண்
என்பது
துடைத்துப் போடு!

எக்காலம்
இக்காலம்
கேள்வி தொலை!

பார்
பார்
பார்த்துக் கொண்டே
இரு!

உன் இரு விழியில்
உயிர் கசிந்து ஒழுகி
என்னுயிரில் கலந்து
போகும் வரை
பார்த்துக் கொண்டே
இரு!

பசிக்காவிட்டாலும்
கண்களால்
கண்கள் பார்த்து
என் உயிர் புசி!
உன்னை
புசிக்க எனக்கு
கற்றுக் கொடு!

பொறு,
நீயும் நானும்
தின்றுத் தின்று
தீரும் கணம்
மரித்து
சொர்க்கம் போவோம்!

அங்கேயும்,
இப்படியே
காதல் தொடர்வோம்!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள் - 2

கொஞ்சம் சீக்கிரம்
வா!
சொர்க்கக் கடலில்
படகு வலிக்க
பெரிய துடுப்புடன்
காத்திருக்கிறான்
காதல் கடவுள்!

- ப்ரியன்.

என் கூந்தலின் நீளம்
உன் விரல்கள்
உள் புகுந்து
அளக்க;
அறிகிறேன் நான்!

- ப்ரியன்.

காதலியின்
கொலுசு சிணுங்களிலும்
கண்ணாடி வளையல்களின்
உடைபடும் சப்தங்களிலும்
நெஞ்சு முட்டும்
வெப்ப மூச்சிலும்
மெதுவாக நெய்யப்படுகிறது
இரவு!

- ப்ரியன்.

வருவாய் என
எண்ணினேன்!
வரவில்லை நீ!
வரமாட்டேன் என
நினைக்கிறேன்!
கண்டிப்பாக வருவாய் தானே!

- ப்ரியன்.

அவளுக்காக ஒரு
செடி நட்டு வளர்த்து வந்தேன்!
பூத்ததும்
பூ கிள்ளி தலையில் சூடி
செடியை தனியே
தவிக்கவிட்டுப் போகிறாள்!

- ப்ரியன்.

அவன் வருவதாய் சொல்லி
வராத நாட்களில்
அழுது அழுது
வெளிறி நீலம்
கரைகிறது வானம்!

- ப்ரியன்.

உன் கண்களின்
ஆழத்தின் தொலைந்த
என்னை!
அதன் இமை மேடுகளில்
தேடிக் கொண்டிருக்கிறேன்!

- ப்ரியன்.

காலை எழுந்து
சோம்பல் முறித்து
கூந்தலில் கட்டி முடிக்கிறாய்!
நம்முடன் விழித்தே
பயணித்த இரவையும்!
கூந்தலில் சிக்கி தொலைந்த
என்னையும்!

- ப்ரியன்.

நான் அமர்ந்திருந்த
மரத்தின்
கார்கால தளிர்கள்
பழுப்பாகி உதிர்கின்றன
இன்னுமா வரவில்லை
நீ!

- ப்ரியன்.

பழைய என் பாலிய
கதைகளில்
ஏழுகடல் ஏழுமலை தாண்டி
பாதுகாக்கப்படும் உயிர்!
என்னுடையதை எங்கே
ஒளித்துவைத்திருக்கிறாய்!

- ப்ரியன்.

காற்றை வெட்டி
ரணமாக்குகின்றன
கூரான மூங்கில் இலைகள்!
என் மனதை
உன் நினைவுகள்!

- ப்ரியன்.

சந்திரகிரகணத்து அன்று
மட்டுமல்ல!
ஒவ்வொரு முறை
இரவில் நீ
வெளி வரும்போதெல்லாம்
விழுங்கப்படுகிறது
நிலவு!

- ப்ரியன்.

கடற்கரையில் காத்திருந்தேன்
வாராத உனக்காக
விட்ட பெருமூச்சில்
ஆவியாகிப் போனது
கடல்!

- ப்ரியன்.

நீ வர நேரமாகும்
நாட்களில் தெரிகிறது!
மரம் விட்டு
மடி விழும்
இலைகளின் நேசம்!

- ப்ரியன்.

உன் மடியில்
குழந்தையாக தவழ ஆசை
இன்று உள்புகுத்தி
நாளைப் பிள்ளையாய்ப்
பெற்றுக் கொள்ளேன்
என்னை!

- ப்ரியன்.

இரவில்
நீ மொட்டைமாடியிலிருந்து
எட்டிப் பார்த்தால்தான்
மொட்டு வெடிப்பேன் என
அடம் பிடிக்கிறது
என் வீட்டு மல்லிகை!

- ப்ரியன்.

எல்லா நதிகளும்
மலைக்கிடையில் தொடங்குகின்றன!
என் உயிர் நதி மட்டும்
ஏனோ,
உன் மார்புக்கிடையில்
தொடங்குகிறது!

- ப்ரியன்.

நேரமாகி அவன் வந்ததும்
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிப் போகின்றன
அதுவரை துணையாயிருந்த
கண்ணீர் துளிகள்!

- ப்ரியன்.

நகரத்து ஆசாமி

பக்கத்துவீட்டு பாட்டியின்
சாவிற்கு மெதுவாக
அழச்சொல்லி கத்திவிட்டு
தற்காலிகமாக மரணமடைய
தாராளமாய்
கட்டில்பாடையில்
சரிகிறான்
நகரத்து ஆசாமி!

- ப்ரியன்.

நிழல்

அந்தியில் என்னுடன்
சேர்ந்து சாய்ந்து அமர்ந்த
நிழல்
இரவில் கிளம்பி
வர மறுக்கிறது
மரத்தைவிட்டு!

- ப்ரியன்.

சில காதல் கவிதைகள்

இலையுதிர்கால இலைகளாய்
மனத்தரையெங்கும்
விரிந்து கிடக்கின்றன
உன் நினைவுகள்!

- ப்ரியன்.

இலைகள் உதிர்த்து
போர்வை ஒன்றை
பூமிக்கு போர்த்திருக்கின்றன
இலையுதிர்கால மரங்கள்!
வா,
கைகோர்த்து;
இலைகளின்
மனம் சாந்தியடைய
ஒரு சரக்சரக்
நடை பயிலலாம்!

- ப்ரியன்.

அவளுக்கான காத்திருப்பில்
இலையுதிர்க்கும் மரமொன்றைத்
திட்டித்தீர்ப்பேன்!
மண்முத்தமிடும் இலையின்
இரைச்சலில்
அவள் கொலுசு
நாதம் கெடுமென!

- ப்ரியன்.

நீ வர நேரமாகும்
நாட்களில்
என் மடி தங்கி
என்னைக் கொஞ்சிக்
கொண்டிருக்கும்
என்னால் உன் பெயர்
சூட்டப்பட்ட
இலை ஒன்று.

- ப்ரியன்.

நேரமானதற்காக
கோபித்துக் கொள்கிறாய்!
அக்கணத்தில்
மறந்தும் போகிறாய்
நீ சாய்ந்திருந்த
மரத்தின் தண்டாய்
நான் உன்னை
தாங்கியிருந்தை!

- ப்ரியன்.

என் வீட்டில் ஒரு புத்தம் புது
பூ பூக்கிறது!
நீயே வந்து
பறித்துக் கொண்டால்
நீ நண்பி!
நான் பறித்துத்
தரும்வரை காத்திருந்தால்
நீ காதலி!

- ப்ரியன்.