மற்றொரு மாலையில்... - 05

உன் மெளனம்
மொழியும் மொழியின்
வீரியத்திற்கு முன்
என் கவிதைகள் எல்லாம்
ஏதுமற்ற சூன்யம்!


தமிழ் வகுப்பில்
காமத்துப் பாலிலும்
அகத்திணை பாடல்களிலும்
தலைவன் நானென
தலைவி நீயென
கனவெல்லாம்
தீண்டி உறவாடி
பேசித்திரிந்த நாளது!

பதிலுக்கு
முறைவைத்து
மருதாணியால் சிவந்த
உன் நகம்
வேதியியல் ஆய்வகத்தில்
தீண்டி வைக்க!

காப்பர் சல்பேட்டின் நீலமும்
காப்பர் குளோரைடின் பச்சையும்
பொட்டாசியம் குரோமேட்டின் மஞ்சளும்
பொட்டாசியம் டை குரோமேட்டின் ஆரஞ்சுமென
கலந்து இதய
வானமெங்கும் வண்ணமாய் வெடித்து சிதற!

ஸ்பரிச மயக்கத்தில்
அமிலம் மாற்றி ஊற்றிட
கையிருந்த கூம்பு
வெடித்து சிதறி
கண்ணாடி பூக்களை தூவியது!

எழுந்த புகையில்
கைப்பற்றி நடனமாடியிருந்தோம்
இருவரும்!

உள்ளங்கையளவு தண்ணீர்
முகத்தில் அருவியென தெளிக்க
கண்விழித்து பார்க்கையில்
சுற்றி வகுப்பு நண்பர்களின் முகமெல்லாம்
கவலை மேகம் சூழ
கிடந்திருந்தேன் தரையினில்!

அமிலம் அரித்த எரிச்சல்களை
அதை தொடர்ந்த
முதலுதவி மருந்துகளின் இரணங்களை தாண்டி
உணர்வின் அங்குலம் அங்குலமாய்
விஸ்வரூபம் எடுத்து
உயிர் எல்லாம்
பொழிந்து குளிரூட்டுகிறது
உன் விழியோரம் திரண்டிருந்த
இரு விழி கண்ணீர் துளிகள்!

இனி உருகும் உயிர் காண :

மற்றொரு மாலையில்... - 06

இதுகாரும் உருகிய உயிர் காண :

04.,03.,02.,01

2 பின்னூட்டங்கள்:

Unknown said...

கவிதை வழியில் காட்சிப் படுத்துதல் அழகு...

தொடர்க...

தனசேகர் said...

உவமைகள் அருமை .....
அதுவும் பள்ளியில் பயின்ற பாடங்களை ஞாபகபடுத்தி விட்டீர்கள் ... ....


பாடங்களை மட்டுமா ?? பள்ளிப்பருவத்தயும்தான் ;) பசுமை நிறைந்த காலங்கள் ;)

-தனசேகர்