கண்ணாடி

கைத்தவறி விழுந்த
கண்ணாடி சுக்குநூறாய்
சிதறிக்கிடந்தது தரையில்!

வெள்ளிக்கிழமையும் அதுவுமா
என்னத்தடா ஒடச்சு தொலைச்சே
அடுப்படியிலிருந்து கடிந்துக் கொண்டாள்
அம்மா!

அதன் ஆயுசு
அவ்வளவுதான் விடுவென்று
உடைத்த எனை காத்து
அப்போதும் வேதாந்தம் பேசினார்
அப்பா!

கண்ணாடி காதலியான
அக்காவோ
புதிது வாங்கும்போது
இன்னமும் பெருசா என்பதோடு
முடித்துக் கொண்டாள்!

ஏதும் பேசாமல்,
சில்லுகளைப்
பொறுக்கிச் சேர்த்து
குப்பைத் தொட்டியில்
போடுகையில்தான்
கவனித்தேன்;

உடைந்த
கண்ணாடித் துகள்கள்
ஒவ்வொன்றிலும் உறைந்த்திருந்தது
எந்தன் பிம்பம்!

- ப்ரியன்.

4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ம் நிஜம்தான்..
உடைந்தபின்தான்
தெரிகிறது..
பிம்பங்கள் சேர்ந்திருப்பது


அழகான கவிதை

நேசமுடன்..
-நித்தியா

ப்ரியன் said...

நன்றி நித்தியா...

Unknown said...

உடையாதக் கண்ணாடியில் ஒரு பிம்பம்,
உடைந்த கண்ணாடியில் பல பிம்பங்கள்!

அன்புடன்,
அருள்.

Radha N said...

உடைந்த சில்லுகள் யாவிலும்
உடையாமல் நீ!
பார்ப்பது நானாகயிருக்கையில்
தெரிவது உன்னைத்தவிர
வேறுயார்?