பலூன்

பலூன் கேட்டு
அழுத சிறுமி
அப்படியே உறங்கிப் போனாள்!
சிறிது நேரத்தில்
அழுதபடி தூங்கியவளின்
முகமெல்லாம் புன்னகை
எத்தனை பலூன்கள்
வந்ததோ அவள் கனவில்!

- ப்ரியன்.

புள்ளி

தூரத்தில் தங்கி
தயங்கி நிற்கும்
நிலா!

அவளின் நெற்றியில்
ஒற்றைப் பொட்டு!

என் கவிதைகளின்
கடைசி மைச்சொட்டு!

ஒவ்வொன்றும்
ஒவ்வொன்றைக் குறித்தாலும்
தூரம் நின்றுப் பார்த்தால்
எல்லாம் புள்ளி!

வெறும் புள்ளி!

ஒன்றின் தொடக்கமாகவோ
முடிவாகவோ
நிற்கும் மாயப் புள்ளி!

- ப்ரியன்.

கவிதை தொகுப்பு - ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்

அன்று தொடங்கிய மழை
சாரலாகி ஓடிப் போனது!
வாசல் தெளிக்கும் அளவுகூட
பூமி நனையவில்லை;
ஆனாலும்,
என் மனது தெப்பலாக
நனைந்திருந்தது
நீ மழையில் நடந்து சென்றதில்!

************************
ஒற்றைக் குடைக்குள்
நெருக்கமாகக்
காதலர்கள் நகர்ந்தால்
கோபப்படுகிறான் வருணன்!
மழை பெருக
சாரல் தவிர்க்க
மேலும் நெருக்கமாக
மீண்டும் கோபம்
மீண்டும் சாரல்
மீண்டும் நெருக்கம்

************************

உன் கால்தடத்தில்
தேங்கி இருந்த மழைநீரைத்
தீர்த்தமென்கிறேன்;
அப்படியென்றால்
நீ தேவதைதானே!

************************
கடலுக்குள் விழுந்த
மழைத்துளி போல்
பத்திரப்படுத்திவிட்டேன்
என்னுள் விழுந்த உன்னை!

************************

மழையில் நனைபவளே!
தெரிந்து கொள்
உன் அழகை பிம்பமாக்கிக் கொள்ள
வான் அவன் விடும்
கோடிக் கோடி கண்ணாடிகள் அவை!

************************

எல்லோரையும் வெறுமனே
நனைத்துவிட்டுச் செல்கிறது மழை!
உன்னில் மட்டுமே
அதுவே ரசித்து உள்ளிறங்கிப் போகிறது!

************************

பெரிதாய்ப் பொழியும் மழையில்
நனைந்து நிற்கிறேன்;
உன் கால்தடத்தைத் தனியே
நனையவிட்டுச் செல்ல
நான் ஒன்றும் உன்னைப் போல்
கொடுமையானவன் அல்ல!

************************

பெரும் பாலையில் தவறிப்
பெய்துவிட்ட
மழை நீ
எனக்கு!

************************
எவ்வளவு பத்திரமாய்
நீ நடந்தாலும்
உன்னையும் அறியாமல்
வழியெங்கும்
பெய்துகொண்டே செல்கிறது
உன் அழகுமழை!

************************

மழை நேரத்தில்
திரும்பும் பக்கமெல்லாம்
தெரியும் மழைக்கீற்று மாதிரி
என் மனதில் திரும்பும் பக்கமெல்லாம்
நீ! நீ! நீ!

************************

தண்மையான
உன்னைச் செதுக்குகையில்
சிதறிய
சின்னச் சின்னச் சில்லுகள்தாம்
மழை!

************************
சுகம்!
மழையில் நனைந்து கரைதலும்!
உன் பிடியில்
கரைந்து தொலைதலும்!

************************

வானம்,
பெய்ய மழை
பெய்யப் பெய்யப் பெருமழை!
நீ,
காண அழகு
காணக் காணப் பேரழகு!

************************

என்னை அந்தி முதல்
ஆதிவரை நனைத்துச்
செல்கிறீர்கள்!
பலநேரங்களில் நீயும்!
சிலநேரங்களில் மழையும்!

************************

உடுத்திக்கொள்ள
உன் கிழிந்த சேலைதான் வேண்டுமாம்
அம்மணமாய் விழும்
அம்மழைக்கு!

************************

இதுவரை துரத்தித் துரத்திக்
கிட்டியதில்லை!
தானாய்க் கிட்டியதுதான்
நீயும் மழையும்!

************************

நேற்றைய
என் கோபத்தையும்
உன் வருத்தத்தையும்
துவைத்துத் துடைத்துப்
போயிருந்தது
இரவில் பெய்த மழை!

************************

என்னவோ அறியேன்
எப்படி என்றும் அறியேன்
என் உயிர்வரை நுழைந்து
மனம் ஊடுருவ உனையும்
மழையையும் மட்டும் அனுமதிக்கிறேன்!

************************

எத்தனை மழைத்துளிகள்
மண் முத்தமிடுமிடுகின்றன என
எவ்வளவு நேரம் எண்ணிக் கொண்டிருப்பது
சீக்கிரம் வந்துவிடு!

************************

என் மீது
ஒரு மழையாய்த் தான்
பொழிந்து செல்கிறது
நீ சிந்தும் மென்னகை!

************************
நீ
கோபம் காட்டும் நாட்களில்
கண்ணாடிச் சில்லுகளாய்க்
குத்திச் செல்கின்றன
மழைத்துளிகள்!

************************

உன் கன்னக்குழியில்
தங்கும் அந்த ஒற்றைத்துளி
மழை அமுதத்தின் விலை
காதல்!

************************

நீ தொட்டுப் பேசுகிற நேரங்களில்
மழை ஞாபகம்
தவிர்க்க இயலவில்லை எனக்கு!

************************

மழையில் நனைந்த உன் முகம்
ஒரு நிலவில்
சில நட்சத்திரங்கள்!

************************

உன் மெளனம் கலைந்த கணத்தில்
மனம் கொள்ளும் வேகத்தில்
வானம் உடைத்து
நொறுங்கி விழுகிறது
மழை!

************************

நனைய நீ ஊரில் இல்லை
என்பதற்காக
எட்டியே பார்க்கவில்லை
மழை!

************************

முதன்முதலாய் மழையுடன்
பெண்ணை ஒப்பிட்டுக் கவி சமைத்தவன்
யாரென யாராவது கேட்டால்
என்னைக் கை காட்டு!
பெண்ணென்றால் அது
நீ மட்டும்தானே!

************************

ஜன்னலில் பார்த்ததைவிடவும்
பக்கத்தில் பார்த்தல்
அழகு!
நீயும்!
மழையும்!

************************

வார்த்தையாகக் கூட இல்லை
ஒரு எழுத்தாகக் கூட இல்லாதவனை
ஒரு கவிஞனாய் மாற்றிய
பெருமை
உனக்கும்
மழைக்கும் மட்டுமே!

************************

என்னைக் கொஞ்சுகையில்
கைகால் முளைத்த
மழையாகிறாய் நீ!

************************

மழையும் நீயும்
நனைக்கிறீர்கள்
நனைப்பதாய்ச் சுடுகிறீர்கள்
சில நேரங்களில்!

************************

நின்ற பின்னும்
சிறிது நேரம்
இலை தங்கும் மழை போல
நீ நின்று போன
இடத்தில் எல்லாம்
கொஞ்சநேரமாவது தங்கிச்
செல்கிறது அழகு!

************************

நீ மார்பில்
சாயும் தன்மையில்
என்னை அறியாமல்
நானே மழையாகிறேன்!

************************

என் மனம்
பட்டுப் போகக்கூடும்
எனும்போதெல்லாம்
மழையாகப் பெய்துபோகிறாய்
நீ!

************************

மழைத்துளிக்காகப்
புதைந்து காத்திருக்கும்
விதைகள் போல!
உன் விழிப் பார்வைக்காகக்
காத்திருக்கின்றது
என் காதல்!

************************

கருமை வர்ணம் பூசித்திரிந்த
அம்மேகத்தின் பிள்ளை
மண்தீண்டலில் எழுந்த
மண் வாசனை
நுகர்தலில் உணர்கிறேன்
உன் வாசனை!
************************

வானம் கிழிக்கும்
வெளிச்சத்தில் - எழும்
இடி ஒலியில்
சோ! என
மண் நனைத்து
மண் நிறைக்கிறது மழை!
என் உயிர் நனைத்து
என் உயிர் நிறைக்கும் உன் உயிர்!

************************

நீயும் நானும்
இரவில் நடந்துவர
சொல்லாமல் கொள்ளாமல்
ஓடிவந்து நனைத்து
விளையாடிய
அச்சிறுபிள்ளை சிறுமழையை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
கண்ணிலும்
உயிரிலும்!

************************

மண்ணுள் ஊடுருவிச் செல்லும்
மழையென!
என் உள்ளம்
தூர்ந்து நுழைகிறாய் நீ!

************************

எதுவாக நீ வந்தாலும்
இன்பமே!
ஆனால்,
மழையாக வந்தால்
பேரின்பம்!

************************

நனைந்து சென்ற உன்னை
ஆயிரமாயிரம் பிம்பமாய்க்
காட்டியது மழை!

************************

சுத்தமான
அந்த மழைத்துளி
பார்க்கும்போதெல்லாம்
உன் ஒப்பனையற்ற முகம்
முன்னால் நிற்கிறது!

************************

நனைத்து நனைத்தே
நெருக்கமான
மழை போலவே
சுகமாகிறாய்
நீயும்!

************************

நீ வருவாய் என்பதை
முன்னமே வந்து சொல்லிவிட்டுப்
போய்விடுகிறது
மழை!

************************

பைத்தியமாகிவிடத் தோன்றுகிறது
மழையில் உறையும்போதும்
உன் நினைவுகளில் நனையும்போதும்!

************************

பூமியைச் சுத்தமாக்கிப்
புதியதாக்குவது மழை!
என்னை
துடைத்துப் புதியவனாக்குவது
உன் பார்வை!

************************

தேடிக் கொண்டே
இருக்கிறேன்!
சேலை விலகிய நேரத்தில்
தொட்டு விளையாடி
ஒரே ஒரு முறை உனை
அவஸ்த்தைக் கொள்ளச் செய்த
அச்சிறுமழையை!

************************

மழை ரசித்தாலும்
உனை ரசித்தாலும்
நேரம் கடப்பதும்
தெரிவதில்லை!
உயிர் கரைந்து
ஓடுவதும் தெரிவதில்லை!

************************

உனைத் தொட்ட பின்
அதே துளி!
கவனி அதே துளி
ஏன் எனையும் தீண்டவில்லை எனக்
கோபித்துக் கொண்டேன்
மழையிடம் நேற்று!

************************

மழை பெய்யும்
நாட்களெல்லாம்
உனைக் கண்ட நாட்களாக
அமைந்துவிடுகிறது!

************************

உனைக் கண்ட நாட்களுக்கே
என் நாட்காட்டியில்
இடமிருக்கிறது!
போனால் போகட்டும்
உனக்காக
மழை கண்ட நாட்களையும்
சேர்த்துக் கொள்கிறேன்!

************************

மழை தொட்டால் மட்டுமே
சிலிர்த்தவன் நான்!
நான் தொட்டால் மட்டுமே
சிலிர்ப்பவள் நீ!

************************

தெரியும்,
மழையில் நனைகையில் சிலசமயம்
நான் பருகும்
ஒவ்வொரு துளியிலும்
இருக்கிறாய் நீ!

************************

எப்போதிலிருந்து இப்படி எழுதுகிறீர்கள்
என்றாய்!
நீ மழையில் நனைவது
கண்டதிலிருந்து என்றேன்!
ச்சீ என வெட்கப்பூ பூத்தாய்!
அடுத்த மழை பெய்யத் தொடங்கியது
நீயும் நனையத் தொடங்கினாய்
நானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்!

************************

சந்தோசம்
துக்கம்
எதற்கும் அழுதுவிடாதே!
நமக்காக தான்தான்
அழுவேன் என
அடம்பிடித்து வரம் வாங்கியிருக்கிறது
மழை!

************************

எப்படித் தேர்வு செய்கிறாய்
உன்னை நனைப்பதற்கான
மழையை!

************************

மழையில் சிக்கிக் கொண்ட
பெருவியாதிக்காரனின் தவிப்பாய்
உன் விழிதேடிக் கிடக்கிறது
என் காதல்!

************************

உனைப் பார்க்க வரும்போதெல்லாம்
மண் அன்னையை நோக்கிவரும்
மழைப் பிள்ளையென
குதித்தோடி வருகிறேன்!

************************

உன் இதழில் உணர்ந்தேன்
சுவையில்லா ஒரு சுவையான
மழையின் சுவையை!

************************

உன்னை நினைத்தபடி
வானம் நோக்கி
இருந்தேன்!
நெற்றி விழுந்து
நெஞ்சுவரை நீந்திய
மழையின் தண்மை
இன்னமும் அதிகமாய்
ஞாபகப்படுத்திவிட்டது உன்னை!

************************

உன் மீது கோபம் காட்டும் நாட்களில்
என்னை மட்டும் தீண்டாமல்
விலகிப் பெய்துவிட்டுச் செல்கிறது மழை!

************************

நீ பேசாமல் இருந்தால்
என் வானமெங்கும்
மேகமூட்டம்!

************************

நீ கோபம் காட்டும் நாட்களில்
என் மனமெங்கும் பெய்யும்
வலிக்க வலிக்கக்
கல் அடி மழை!
ஆலங்கட்டி மழை!

************************

மழை மண் விழுந்த அடுத்தநாள்
முளைத்துவிடும் விதையென
நீ கண்ணுள் விழுந்த
அடுத்த நொடி முளைத்துவிட்டான்
என்னுள் காதல்!

************************

நீ மழையில் நனைந்த
லயத்தில் கண்டுக்கொண்டேன்
மழையே ரசிக்கும்படி
எப்படி மழையில்
நனைவதென!

************************

பெருமழைக்கே
பயந்து போகாதவன்
உன் விழியோரம் வழியும்
ஒருதுளிக்குப்
பதறிப் போகிறேன்!

************************

உன்னைக் கொஞ்சுவதில்
எனக்குப் போட்டி
மழை மட்டுமே!

************************

மண் விழுந்த மழை மட்டுமா?
நீயும்
கவிதை நடையில்தான்
நடக்கிறாய்!

************************

திட்டிக் கொண்டே
துப்பட்டா கொண்டு நீ
தலை துவட்டுகையில்
எனக்கு
இன்னமும் செல்லமாகிப் போகிறது
மழை!

************************

உன்னில்
கவிதை காணும் இடமெல்லாம்
ஒரு புள்ளி வைத்துச்
செல்கிறது மழை!

************************

- ப்ரியன்.

மடலாடலுக்கு - mailtoviki@gmail.com

ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் - அணிந்துரை

நட்சத்திரங்களால் ஒரு நிலவு
------------------------

மேகங்களில் மடல்கள் எழுதி, நிலாவினில் வலைப்பக்கங்கள் செதுக்கி, நட்சத்திரப் பொத்தான்களைத் தட்டித்தட்டி பைனரி மின்னிழைகளில் தமிழ்க் கவிதைகள் எழுதும் இனியவர்,
இளையவர் கவிஞர் ப்ரியன்.

உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடனில் இவர் எனக்கு அறிமுகமானார். இவரின் இதயத்திலிருந்து நேரடியாய் இணையத்தில் இறங்கும் கவிதைகளோ உன்னை நான் முன்பே அறிவேனே என்று புரிபடாத ஜென்மக் கதைகள் பேசின.

சின்னச் சின்னதாய்க் கொஞ்சிக் கொஞ்சி காதல் கவிதைகள் எழுதத் தொடங்கிய ப்ரியன் இன்று ஒரு புத்தகமே போட வளர்ந்திருப்பது தமிழுக்கும் எனக்கும் தித்திப்பாய் இருக்கிறது.

காகங்கள் கூடியிருக்கும்போது ஒரு கல்லெறிந்து கலைத்து விடுவதைப்போல, தனிமைகள் கூடியிருக்கும் இதயத்தில் இவரின் கவிதைகளைச் செல்லமாய் எறிந்து அப்படியே ஓட்டிவிடலாம்.

வாசிக்கத் தொடங்கிய உடனேயே வேற்றுக் கோளுக்கு இழுத்துப் போகும் மந்திரக் கயிற்றை இவரின் கவிதைகளில் நான் அவ்வப்போது கவனித்து வருகிறேன்.இவரின் பார்வை இவர் மனதைப் போலவே மென்மையானது,காட்சியைக் காயப்படுத்திவிடாமல் இவர் பார்க்கும் பார்வைகள் காதல் கவிதைகளைக் குளிர்ச்சியாய்க் கொட்டிவிடுகின்றன.

இவர் நிலாவைப் பார்ப்பார் நிலா தெரியாது, பூவைப் பார்ப்பார் பூ தெரியாது, மழையைப் பார்ப்பார் மழை தெரியாது, காற்றில்அசையும் இலைகளைப் பார்ப்பார் இலை தெரியாது,அதிகாலையில் ஒளிப்பூ மலர்வதைப் பார்ப்பார் விடியல்தெரியாது, எல்லாமாயும் இவருக்கு இவரின் காதலி மட்டுமே தெரிவாள்.

தன் இதயத்தின் சுற்றுப்புறங்களையும் சேர்த்தே இவர் தன் காதலிக்குக் கொடுத்துவிட்டுப் புல்லரிக்கும் கவிதைகளையும் பொழுதுக்கும் கொடுத்துக்க்கொண்டே இருக்கிறார்.

அன்று தொடங்கிய மழை
சாரலாகி ஓடிப் போனது
வாசல் தெளிக்கும் அளவுகூட
பூமி நனையவில்லை
ஆனாலும்
என் மனது தெப்பலாக
நனைந்திருந்தது
நீ மழையில் நடந்து சென்றதில்

காதலி சாரலில் நனைந்ததற்கே இவர் தெப்பலாய் நனைந்து விட்டாராம் அவள் தெப்பலாய் நனைந்திருந்தால் இவர் டைடானிக் கப்பலாய்க் கவிழ்ந்திருப்பார் என்று சொல்லாமல் சொல்லும் இந்தத் துவக்கக் கவிதையே சிலிர்ப்பானது.

காதலியை எப்படி எப்படியெல்லாமோ வர்ணித்திருக்கிறார்கள் கவிஞர்கள். இவர் எப்படி வர்ணிக்கிறார் என்று கொஞ்சம் பாருங்கள்.

தண்மையான
உன்னைச் செதுக்குகையில்
சிதறிய
சின்னச் சின்ன சில்லுகள்தாம்
மழை

சில்லுகளெல்லாம் மழைத்துளி என்றால் சிலை என்னவாக இருக்கும்? யோசிக்கும்போதே நனைந்துபோகிறதல்லவா,தலை துவட்டிக்கொள்ளவும் மறந்துபோகும் நம் கற்பனைகள்? கவிஞனின் கற்பனை முடியும்போது நம் கற்பனை தொடங்கி விடவேண்டும். அதுதான் நல்ல கவிதைக்கு அடையாளம்.அப்படியான கவிதைகள் இத்தொகுப்பில் ஏராளம்.

சுகம்!
மழையில் நனைந்து கரைதலும்
உன் பிடியில்
கரைந்து தொலைதலும்

யாரைத்தான் காதலிக்கிறார் இவர்? மழையையா தன் காதலியையா? மழையோடு கோபம் கொண்டு மழை பொழியும் நாட்களிலெல்லாம் இவரை சன்னல்களும் இல்லாத அறையில்
பூட்டிவைக்கப் போகிறார் இவரின் காதலி :)

மழை ரசித்தாலும்
உனை ரசித்தாலும்
நேரம் கடப்பதும்
தெரிவதில்லை
உயிர் கரைந்து
ஓடுவதும் தெரிவதில்லை

இப்படி இரண்டு பேரை ஒரே சமயத்தில் காதலிப்பது தமிழ்ப் பண்பா :) ஆசை இருக்க வேண்டியதுதான் ஆனாலும் கட்டுபடியாகும் ஆசையாக இருக்கக்கூடாதோ ப்ரியன்?

நனைய நீ ஊரில் இல்லை
என்பதற்காக
எட்டியே பார்க்கவில்லை
மழை

இதற்கு என்ன பொருள்? மழையே பொழியாமல் இருந்திருக்குமா என்ன? அப்படியல்ல. பெய்தவையெல்லாம் இவருக்கு மழையாகத் தெரியவில்லை. அவள் இருந்தால் பெய்யாதபோதும் மழையை உணர்கிறார் இவர். அப்படியென்றால் காதலியும் மழையும் வேறு வேறு அல்ல. இவரின் காதல்தான் மழையோ?

எதையும் தொடர்ந்து கண்டுகொண்டே இருந்தால் அது எத்தனை அழகானாலும் அலுப்புதான் தோன்றும். எத்தனை முறைதான் ஒன்றையே காண்பது?ஆனால் காதலனுக்குத் தன் காதலிதான்
பிரபஞ்ச அதிசயம். பொழுதுக்கும் அவளைக் கண்டு கொண்டே இருப்பான் அலுக்கவே அலுக்காது என்பதைவிட காணக்காண மேலும் மேலும் ஆவலையே தூண்டுவாள் அவள். அதை
எத்தனை எளிமையாய்ச் சொல்கிறார் பாருங்கள் ப்ரியன்.

வானம்
பெய்ய மழை
பெய்யப் பெய்ய பெருமழை
நீ
காண அழகு
காணக் காணப் பேரழகு

அவள் ஓர் ஏழை. ஆனால் அழகில் சீமாட்டி. கிழிந்த ஆடை அவள் அழகைக் குறைக்கவில்லை மேலும் கூட்டிவிடுகிறது. அதோடு கொஞ்சம் மழை நீரும் சேர்ந்துகொண்டால் அவளின் அழகு
என்னவாகும்? இந்தக் காட்சியை எத்தனை நயமாய்ச் சொல்கிறார் பாருங்கள். ஓர் எசகுபிசகான காட்சியை மிக நாகரிகமாகச் சொல்லும் இந்த மெல்லிய வரிகளை பண்பாடுமிக்க ஒரு பொன்மனக் கவிஞனால்தான் பொழியமுடியும்.

உடுத்திக்கொள்ள
உன் கிழிந்த சேலைதான் வேண்டுமாம்
அம்மணமாய் விழும்
அம்மழைக்கு

அதென்ன "ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்" என்றொரு தலைப்பு?இதோ காரணத்தை அவரே சொல்கிறார் கேளுங்கள். அது எத்தனை இனிமை என்று உணருங்கள்

மழையில் நனைந்த உன் முகம்
ஒரு நிலவில்
சில நட்சத்திரங்கள்

இவரின் மழைத்துளிக் கவிதைகளில் மேகத்தின் மொத்தமும் அப்படியே ஊர்வலம் போகிறது. உதாரணத்திற்காக ஒரு கவிதை இதோ

நின்ற பின்னும்
சிறிது நேரம்
இலை தங்கும் மழைப்போல
நீ நின்றுபோன
இடத்தில் எல்லாம்
கொஞ்சநேரமாவது தங்கிச்
செல்கிறது அழகு

காதலின் மிக முக்கிய ஓர் பணி என்னவென்றால், அது காதலர்களைப் பண்படுத்த வேண்டும். எத்தனைக் கரடுமுரடான இதய வேர்களையும் அது சீவிச் சிக்கெடுத்து இனிப்பு நீரில் நீந்தச் செய்யவேண்டும்.காதலியின் பார்வையால் மீண்டும் மீண்டும் பிரசவமாகும் உயிரைப் போன்றவன்தான் காதலன்.

பூமியை சுத்தமாக்கி
புதியதாக்குவது மழை
என்னை
துடைத்துப் புதியவனாக்குவது
உன் பார்வை

காதலி, மழை, காதலன், கவிதை ஆகிய நான்கும் ஒன்றாய்க் கலந்த பிரிக்க முடியாக் கலவையே இந்தத் தொகுப்பு. அதையும் மிக அழகாக ஒரு கவிதையில் சொல்லி இருக்கிறார் ப்ரியன்

எப்போதிலிருந்து இப்படி எழுதுகிறீர்கள்
என்றாய்
நீ மழையில் நனைவது
கண்டதிலிருந்து என்றேன்
ச்சீ என வெட்கப்பூ பூத்தாய்
அடுத்த மழைப் பெய்யத் தொடங்கியது
நீயும் நனையத் தொடங்கினாய்
நானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்

காதல் என்றாலே அது அதீத சந்தோசமும் அதீத சோகமும் கொண்ட வினோதமான பூ. அழுகை அந்தப் பூவின் இதழ்கள். சந்தோச நெசிழ்வில் அழுகை, சோகத்தின் பிடியில் அழுகை. ஆனால், நாம் அழவேண்டாம்,நமக்காக அழ ஓர் ஆள் இருக்கிறது என்று காதலியிடம் சொல்கிறார் ப்ரியன். யார் அந்த ஆள் என்று பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது.

சந்தோசம்
துக்கம்
எதற்கும் அழுதுவிடாதே
நமக்காக தான்தான்
அழுவேன் என
அடம்பிடித்து வரம் வாங்கியிருக்கிறது
மழை

என்றால் மழை இவருக்கு யார்? இந்தக் கேள்வியை இதயத் தாடைகளில் அசைபோட்டபடியே இந்தத் தொகுப்பெனும் தோப்பினுள் நீங்களும் முயல்களாய்த் தத்தித்தத்திச் செல்லுங்கள். குயில்களாய்ப் பாடிப்பாடித் திரியுங்கள். மலர்களாய்ப் பூத்துப்பூத்துக் குலுங்கள்.பிரியாத ஆர்வத்தோடு கவிஞர் ப்ரியன் மேலும் பல நல்ல கவிதை நூல்களைத் தருவார் என்ற நம்பிக்கையோடு அவரை வாழ்த்துகின்ற இவ்வேளையில் வாழ்க இவர் போன்ற கவிஞர்களால் மேலும் இளமை எழில் கொப்பளிக்கும் தமிழ்க் கவிதைகள் என்றும் வாழ்த்தி மகிழ்கின்றேன்.

அன்புடன் புகாரி
கனடா
பிப்ரவரி 23, 2006

ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் - உள்புகும் முன்

அன்புடன் அன்பர்களுக்கு,

சென்ற சனவரியில் எனக்கு தனிமை கிடைத்தது என்னவென்று தெரியவில்லை ஏதோ ஒன்று என்னை எழுத உந்த விளையாட்டாய் மழையையும் , பெண்ணையும் காதலையும் வைத்து எழுத ஆரம்பித்தேன்.தூங்கும் போது மணி காலை 4 அதனால் பாதகமில்லை கிட்டத்தட்ட 130 கவிதைகள் :) அதில் மிகவும் இரசித்ததை மட்டும் தேர்வு செய்தேன்...பிடிஎப் ஆக மாற்றி அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பலாம் என எண்ணினேன்.சரி செய்வதுதான் செய்கிறோம் ஒரு புத்தகவடிவில் தந்தால் என்ன எண்ணி அணிந்துரைக்கு அண்ணன் கவிஞர் புகாரியையும் , திருத்தங்களுக்கு சேதுவையும் அணுகினேன் அவர்கள் ஆவலோடு அதனை ஏற்று சில நாட்களிலேயே முடித்தும் கொடுத்துவிட்டார்கள்...ஆனால் என்னால் உடனடியாக இதில் ஈடுபட முடியவில்லை,வேறு ஒன்றும் இல்லை வேலை...இப்போது எல்லாம் தாண்டி இதோ உங்களின் பார்வைக்கு "ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்"...எப்போதும் போல உங்கள் விமர்சனக்களை எதிர்நோக்கி...

குறிப்பு : "ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்" அதிகமான பரும அளவு (4 MB) என்பதால் கோப்பு பரிமாற்ற தளத்தில் இடுகிறேன் (பிடிஎப்) மற்றப்படி எழுத்துவடிவில் இதே இழையிலும் இடுகிறேன்...பிடிஎப் (புத்தக வடிவில்)ஆக பார்க்க கீழுள்ள இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்

http://www.uploading.com/?get=MB9XW285

இணைய இணைப்பு இல்லாதவர்கள் சொல்லுங்கள் தனிமடலில் அனுப்புகிறேன்

சுடுகாடு

பகலிலும் அலறும் ஆந்தை
கள்ளிச் செடி
காய்ந்த சருகு - அதில்
சரசரவென ஓடி ஒளியும் பாம்பு
மண்ணெண்ய் வாசத்துடன்
குபுகுபுவென எரியும் சவத்தீ!
சுழன்று அடிக்கும் காற்றில்
கனன்று பறக்கும் சாம்பல்
கால் இடறும் எலும்புகள்,
அடையாளங்களோடு
பிணம் காத்து
உக்காந்து இருக்கு சுடுகாடு
ஊருக்கு ஒதுக்குப்புறமாய்!

- ப்ரியன்.

புல்லாங்குழல்

வண்டொன்று
குறும்பாய்
மூங்கிலில் துளையிட்டபோது
அறிந்திருக்கவில்லை;
தான்,
உலகின் முதல் புல்லாங்குழலின்
உருவாக்கத்திலிருப்பதை!

- ப்ரியன்.

வண்ணத்துப் பூச்சி வாழ்க்கை

வரைகின்ற பொழுதுகளில்
மீறி சிந்திவிடுகின்ற
ஒரு வர்ணத்துளியாகத்தான்
வந்தாய் நீ
என் வாழ்வில்!

விட்டில் பூச்சியினுடையதாய்
இருந்த வாழ்க்கை
வண்ணத்துப் பூச்சியினுடையதாய்
மாறியது என்னவோ உண்மை!

- ப்ரியன்.