கனவும் அதில் வந்த கவிதை வரியும்

நல்ல கவிதை வரி ஒன்று
கனவில் வந்தது!
எழுந்து பக்கத்தில் கிடந்த தாளில்
குறிப்பெழுதி வைத்து
உறங்கிப் போனேன்!
காலையில் தாள்
காணமல் போயிருந்தது!

அடுத்தநாள் கனவில் வந்தது அதே வரி!
இந்த முறை
நாட்குறிப்பில் எழுதிவைத்தேன்!
அதனால் எழுந்து ஓட முடியாது
என்ற தைரியத்தில்!
காலையில் நாட்குறிப்பு இருந்தது!
வரிகள் இல்லை! - அடடா
பேனாவில் மையில்லை!

அதற்கு அடுத்த நாளும்
அதே கனவு
அதே வரி
குறிப்பெடுத்து வைத்தேன் என்பதை
கண்ணாடிப் போட்டு
உறுதிப்படுத்தியப் பின்
உறங்கிப் போனேன்!
மறுநாள் காலையில்
என் கையெழுத்து
எனக்கே புரியவில்லை!

இன்றைக்கு அந்த வரிகளை
கனவில் கண்டவுடன்
எழுந்து அமர்ந்து
முழுதாய் கவிதை எழுதி
முடித்தப் பின்னரே
உறங்கப் போகவேண்டும்!
உறுதியுடன் கண்ணயர்ந்தேன்!

அன்றைக்கும்;
அதன் பிறகும் - வரவேயில்லை
அந்த கனவும்;
அந்த கவிதை வரியும்!

- ப்ரியன்.

8 பின்னூட்டங்கள்:

துடிப்புகள் said...

'ஆசை தோசை அப்பளம் வடை...' - இதுதானே அந்த வரி...
ஹி..ஹி..

ப்ரியன் said...

ஹா ஹா ஹா இருக்கலாம் முகில் அதுதான் மறந்து பறந்து போச்சே :)

யாத்ரீகன் said...

கலக்கீட்ட ப்ரியன்... இதோ.. இதோ.. இப்போதான்.. புதிய வகையான கவிதைகள் பளிச்சிடுது.. ரொம்ப நாளுக்கப்புறம்.. :-)

ஒவ்வொரு பத்தி வரும்போதும்.. இப்போ என்ன காரணம் சொல்ல போறீங்கனு எதிர்பார்த்து படிச்சேன்..

-
செந்தில்/Senthil

ப்ரியன் said...

நன்றி செந்தில் இவ்வோளோ நாள் எங்கே போயிருந்தீங்க?ஆன் சைட்டா?

யாத்ரீகன் said...

ஆன்சைட்லதான் இருக்கேன் ப்ரியன்.. உண்மைய சொல்லனும்னா.. தொடர்ந்து காதல் கவிதைகளா.. வந்தது கொஞ்சம் அலுத்துப்போச்சு.. :-D அதான் அத படிக்க கூட பொறுமையில்ல.. மன்னிச்சுக்கோங்க..

-
செந்தில்/Senthil

ப்ரியன் said...

/*
உண்மைய சொல்லனும்னா.. தொடர்ந்து காதல் கவிதைகளா.. வந்தது கொஞ்சம் அலுத்துப்போச்சு.. :-D அதான் அத படிக்க கூட பொறுமையில்ல.. மன்னிச்சுக்கோங்க..
*/

எனக்கும் ;)& உண்மையை சொல்ல மன்னிப்பு தேவை இல்லை

சத்தியா said...

அன்றைக்கும்;
அதன் பிறகும் - வரவேயில்லை
அந்த கனவும்;
அந்த கவிதை வரியும்!

அட!.... அப்படி என்னதான் எழுதினீங்க என அறிய ஆவலாய் படித்தால்....? முடிவு இப்படியாப் போச்சே?

கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

ப்ரியன் said...

/*
கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.
*/

நன்றி சந்தியா வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் :)