சில காதல் கவிதைகள் - 5

நேற்று பார்த்த
நீதானா நீ?
தினம் தினம்
அழகு கூடுதலில்
அடையாளமே
மாறிப் போகிறது!

- ப்ரியன்.

உனை ரசித்து ரசித்து
அழகு ரசித்து சலிக்க
ஆயுள் பல ஆகும்!
பேசாமல் உண்டுவிடு என்னை;
இரத்ததோடு ரத்தமாய்
உள்சுற்றி
அழகு ரசிக்கிறேன்!

- ப்ரியன்.

உன் கண்ணொளி
தீபத்தில்
சுடராக உயிர்வாழும்
என் உயிர்!

- ப்ரியன்.

உன்னுள்
இறங்கிவிட்டப் பிறகு!
நான்,
சுவாசமானால் என்ன?
உயிரேதான் ஆனால் என்ன?

- ப்ரியன்.

கடற்கரைப் பக்கம்
போய்விடாதே!
அலைகள் எல்லாம்
உன் கால் நனைக்கும்
ஆசையில் ஓடிவந்தால்
கடல் பொங்கி
மீண்டும் ஒரு
கடல்கோள் உண்டாகிவிடும்!

- ப்ரியன்.

தினம் தினம்
தொலைக்காட்சியில்
வானிலை வாசிக்கும் பெண்,
எனக்கு மட்டும் சொல்கிறாள்
உனைக் காணும் நாட்களெல்லாம்
மழைநாட்களாம் எனக்கு!

- ப்ரியன்.

தொட்டால்
தட்டிவிடுகிறாய்!
தள்ளிச் சென்றால்
கை கோர்க்காமைக்கு
கோபிக்கிறாய்!
கடினம்தான்
உனை காதலிப்பதும்!

- ப்ரியன்.

பூ வாங்கி தர
அழகாய் இடம் தருகிறாய்
கொண்டையில்!
கொக்கரித்து ஆடுகிறது
என் காதல்
அதே கொண்டையில்!

- ப்ரியன்.

கிளை தங்கிவரும்
தென்றல்
நான் உயிர் வளர்க்க!
உந்தன் கூந்தல்
கலைத்துவரும் காற்று
நான் உயிர் பிறக்க!

- ப்ரியன்.

எந்தத் தேனீ
விட்டுச் சென்றது
உன் இதழ் முழுதும்
இத்தனை தேன் துளிகள்!

- ப்ரியன்.

நம்மை மறந்து
நாம் நின்றிருந்த
அம்முதல் சந்திப்பில்
மனம் கொத்திப் பறந்த
அப்பறவையின்
பெயர் என்னவாயிருக்கும்!

- ப்ரியன்.

மழைநாளில்
நனைந்து நீ நடந்தாய்!
இத்துணைநாள்
காளான் முளைத்த
தரையெங்கும்
தாழம்பூக்கள்!

- ப்ரியன்.

நீ மையணிவது
கண்ணழகிற்கு மட்டுமல்ல!
என் பேனாவிற்கும்
சேர்த்துத்தான்!

- ப்ரியன்.

இமை படப்படக்கும்
வேகத்தில்
அவ்விமை தூரிகை கொண்டு
வரையப்படுகின்றன
உன் உயிரோவியம்
என் நெஞ்சம் முழுவதும்!

- ப்ரியன்.

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

"நேற்று பார்த்த
நீதானா நீ?
தினம் தினம்
அழகு கூடுதலில்
அடையாளமே
மாறிப் போகிறது"

"கடற்கரைப் பக்கம்
போய்விடாதே!
அலைகள் எல்லாம்
உன் கால் நனைக்கும்
ஆசையில் ஓடிவந்தால்
கடல் பொங்கி
மீண்டும் ஒரு
கடல்கோள் உண்டாகிவிடும்!"

மிகவும் பிடித்தது இவை இரண்டும்.

அனைத்துக் கவிதைகளுமே அருமை.

வாழ்த்துக்கள்

ப்ரியன் said...

நன்றி கீதா :)