வாடகை வீடு

ஆணி அடித்த ஒரு சந்தர்ப்பத்தில்
சொல்லால் அறைந்து
அவ்வாணியிலேயே
தொங்க விட்டுச்செல்கிறாய்
என்னை!

கொஞ்சம்
வேகமாக பாதம் பதித்தால்
விரிசல் காண்பதாய்
வாதம் செய்ய ஓடோடி
வருகிறாய்!

உன் செல்ல பிள்ளை
பிசாசுகளின்
காட்டுக் கத்தலில்
கழிக்கப்படுகின்றன
என் அமைதி!

மொட்டை மாடிக்கான
வழியைக் கூட
உன் வீட்டுக்குள்தான்
ஒளித்து வைத்திருக்கிறாய்!

யோசித்துப் பார்த்தால்,
வாடகை மட்டுமல்ல
என் சுதந்திரத்தின்
பெரும் பகுதியை
அடகு வைத்துத்தான்
குடிப்புகுந்திருக்கிறேன்!
எலி வங்குக்கு ஒப்பான
உன் வீட்டில்!

- ப்ரியன்.

4 பின்னூட்டங்கள்:

நளாயினி said...

paaraadukal. thodarunkal.

ப்ரியன் said...

நன்றி நளாயினி

Radha N said...

எலிவலையானாலும் தனிவலை வேண்டும்ன்னு சொல்லுவாங்க. வாடகை வீட்டு வாசம்தனை, முகரமுடியும், தங்களின் கவி வழியே.

ப்ரியன் said...

நன்றி நாகு :)