சில காதல் கவிதைகள்

இலையுதிர்கால இலைகளாய்
மனத்தரையெங்கும்
விரிந்து கிடக்கின்றன
உன் நினைவுகள்!

- ப்ரியன்.

இலைகள் உதிர்த்து
போர்வை ஒன்றை
பூமிக்கு போர்த்திருக்கின்றன
இலையுதிர்கால மரங்கள்!
வா,
கைகோர்த்து;
இலைகளின்
மனம் சாந்தியடைய
ஒரு சரக்சரக்
நடை பயிலலாம்!

- ப்ரியன்.

அவளுக்கான காத்திருப்பில்
இலையுதிர்க்கும் மரமொன்றைத்
திட்டித்தீர்ப்பேன்!
மண்முத்தமிடும் இலையின்
இரைச்சலில்
அவள் கொலுசு
நாதம் கெடுமென!

- ப்ரியன்.

நீ வர நேரமாகும்
நாட்களில்
என் மடி தங்கி
என்னைக் கொஞ்சிக்
கொண்டிருக்கும்
என்னால் உன் பெயர்
சூட்டப்பட்ட
இலை ஒன்று.

- ப்ரியன்.

நேரமானதற்காக
கோபித்துக் கொள்கிறாய்!
அக்கணத்தில்
மறந்தும் போகிறாய்
நீ சாய்ந்திருந்த
மரத்தின் தண்டாய்
நான் உன்னை
தாங்கியிருந்தை!

- ப்ரியன்.

என் வீட்டில் ஒரு புத்தம் புது
பூ பூக்கிறது!
நீயே வந்து
பறித்துக் கொண்டால்
நீ நண்பி!
நான் பறித்துத்
தரும்வரை காத்திருந்தால்
நீ காதலி!

- ப்ரியன்.

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Nice Kavithai Priyan.
I think you are in love.
Am I correct?

ப்ரியன் said...

நன்றி அனானிமஸ்(பெயர் என்னவோ?)